டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்த நாளில் இருந்து இந்திய நிறுவனங்கள் பாதுகாப்புத் துறை சார்ந்த திட்டத்தில் அதிகம் கவனத்தைச் செலுத்தி வருகின்றனர். இதில் விமானப் பாதுகாப்பு துறைக்குத் தனி இடம்.
கடற்படையில் அதிகம் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்படர்களை இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்தில் நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா மற்றும் பிரான்ஸ் நிறுவனம் ஏர்பஸ் கூட்டணிக்குப் போட்டியாக டாடா குழுமத்தின் டாடா அட்வான்ஸ் சிஸ்டம்ஸ் அமெரிக்காவின் பெல் ஹெலிகாப்டர் நிறுவனத்துடன் இணைந்து புதிய கூட்டணியை அமைத்துள்ளது.
எதற்கு இந்தத் திடீர் போட்டி..?
மேக் இன் இந்தியா
இந்தியாவில் மேக் இன் இந்தியா அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து பாதுகாப்புத் துறை சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் முக்கியமாக அனில் அம்பானிக்கும் சொந்தமான ரிலையன்ஸ் இன்பரா நிறுவனம் 25 ராணுவ தடவாளங்களை உற்பத்தி செய்யும் உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இதில் துப்பாக்கியில் நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பு வரை அடங்கும்.
ஏவியேஷன் இண்டஸ்ட்ரீஸ்
மேலும் ஏவியேஷன் துறையில், டாடா, மஹிந்திரா, ரிலையன்ஸ், போன்ற பல நிறுவனங்கள் போட்டி போட்டு வரும் நிலையில், மத்திய அரசு 2 பில்லியன் டாலர் மதிப்பிலான கடற்படை பாதுகாப்பில் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர்களை உற்பத்தி திட்டத்தை அறிவித்துள்ளது.
இதனைக் கைப்பற்றவே மஹிந்திரா- டாடா குழுமங்கள் மத்தியில் புதிய போட்டி உருவாகியுள்ளது.
2 பில்லியன் டாலர் திட்டம்
மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் போர்கப்பல்களில் இருந்து பயன்படுத்தப்படும் 100 யுடிலிட்டி ஹெலிகாப்டர்களைத் தயாரிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
அன்னிய முதலீடு
மேக் இன் இந்தியா திட்டத்தை மேம்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ள பல்வேறு அன்னிய முதலீட்டுத் தளர்வுகளைப் பயன்படுத்திப் பெல் ஹெலிகாப்டர் நிறுவனத்துடன் டாடா அட்வான்ஸ் சிஸ்டம்ஸ் உடன் இணைந்துள்ளது.
போட்டி
இத்திட்டத்தைக் கைப்பற்றும் நோக்கில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இக்கூட்டணி நிறுவனங்களுடன் ரிலையன்ஸ் இன்பரா நிறுவனமும் போட்டி போட உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. வெற்றி பெறுவது யார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
டாடா அட்வான்ஸ் சிஸ்டம்ஸ்
இந்தியாவில் போர் காலத்தில் பயன்படுத்தப்படும் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களைத் தயாரிக்கும் திட்டத்தில் அமெரிக்க நிறுவனமான போயிங் மற்றும் டாடா அட்வான்ஸ் சிஸ்டம்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் சில மாதங்களுக்கு முன் இணைந்தது.
டாடா போயிங் ஏரோஸ்பேஸ் லிமிடெட் என்னும் TBAL நிறுவனம் புதிய தொழிற்சாலையை அமைக்கும் திட்டத்தின் அடிக்கல்லை ஹைதராபாத்தில் நகரத்தில் நாட்டியுள்ளது இக்கூட்டணி நிறுவனம்.
அப்பாச்சி ஹெலிகாப்டர்
இக்கூட்டணி ஹைதராபாத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள தொழிற்சாலையில் போயிங் AH-64 ரக அப்பாச்சி ஹெலிகாப்டர் ப்யூஸ்லேஜேஸ் மற்றும் விமானச் சேவையின் பிற உதிரிபாகங்களைத் தயாரிக்க உள்ளது.
15 நாடுகளில் வர்த்தக வாய்ப்புகள்
ஹைதராபாத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் AH-64 ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. இன்றைய நிலையில் அப்பாச்சி ரகத் தயாரிப்புகளை அமெரிக்கா உட்பட 15 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
இதனால் இக்கூட்டணிக்கு உலகளவில் அதிகளவிலான வர்த்தகம் பெற அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.