டெல்லி: இந்தியாவில் கார் விற்பனை தொடர்ந்து 2வது மாதமாக ஜூன் மாதத்திலும் சரிவை தழுவியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமாகத் திகழும் மாருதி சுசூகி நிறுவனத்தின் உற்பத்தி அதிகளவில் குறைந்துள்ளது. இதன் எதிரொலியாகக் கார் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளதாகச் சந்தையில் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் எதிர்வரும் பருவமழை மற்றும் 7வது சம்பள கமிஷன் அமலாக்கத்தின் மூலம் இந்தியாவில் கார் விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆட்டோமொபைல் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் மிகப்பெரிய நம்பிக்கையுடன் உள்ளது.
மே மாதத்தில் கார் விற்பனை இந்திய சந்தையில் 1 சதவீதம் வரையில் சரிந்த நிலையில், ஜூன் மாதம் 3 சதவீதம் வரை சரிந்தது. இதில் மாருதி நிறுவனத்தின் விற்பனை அளவு மட்டும் 10 சதவீதம் அளவில் சரிந்து 92,133 ஆகக் குறைந்துள்ளது.
இந்த விற்பனை சரிவிற்கு மாருதி சுசூகி நிறுவனத்தின் கூர்கான் மற்றும் மெனிசார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிறுவனத்தின் முக்கியத் தயாரிப்பான சிப்ட் மற்றும் பெலெனோ விற்பனை 12 சதவீத சரிவும், ஆட்டோ மற்றும் வேகன்ஆர் விற்பனை 19 சதவீத சரிவும் ஏற்பட்டுள்ளது.
மாருதி நிறுவனத்தைப் போலவே ஹூண்டாய் நிறுவனமும் 10 சதவீத சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.