மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சோதனை என்ற பெயரில் மோசடிகளைச் செய்து வருவதாகக் குற்றச்சாட்டுகளை எதிர் கொண்டு வரும் நிலையில் இப்போது உள்ள 2.5 மில்லியன் வாடிக்கையாளர்களை 20 மில்லியன் வாடிக்கையாளர்களாக அதிகரிக்க இலவச 4ஜி சிம் கார்டு உடன் மொபைல் போன்களை வழங்கி வருகிறது.
அதுமட்டும் இல்லாமல் சாம்சங், பானாசோனிக், எல்ஜி, மைக்ரோமாக்ஸ் போன்ற அனைத்து மொபைல் நிறுவனங்களுடனும் இணைந்து இலவச சிம் கார்டுகளை அளிக்க ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளது.
சந்தையில் வெளிவரும் முன்பே
சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பே தங்களது நிறுவன ஊழியர்கள் மட்டும் இல்லாமல், கணிசமான வாடிக்கையாளர்களையும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அதிரடி வியாபார திட்டத்தை ஜியோ முன்வைத்துள்ளது.
ஜியோ முன்னோட்ட ஆஃபர்
இந்த இலவச சிம் கார்டு மூலமாக 90 நாட்களுக்கு இலவச அழைப்புகள் மற்றும் இலவச 4ஜி தரவை ஜியோ முன்னோட்ட ஆஃபராக அளிக்கப்பட்டுவருகிறது.
இலவச சிம் ஆக்டிவேஷன்
ஃபோன்களுடன் இலவச சிம்களை பெறும் போது அருகில் உள்ள ரிலையன்ஸ் ஸ்டோர்களில் புகைப்படம், அடையாள மற்றும் முகவரி ஆவணங்களை அளித்து எளிதாக இந்த சேவைகளைப் பெற முடியும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜியோ மீதான மோசடி குற்றச்சாட்டு
ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைகளால் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சோதனை என்ற பெயரில் மோசடிகளைச் செய்து வருவதாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர்.
ஐந்தாவது பெரிய நெட்வொர்க்
இந்த நிறுவனத்தின் தற்போதைய இலக்கான 20 மில்லியன் வாடிக்கையாளர்களை அடையும் போது இந்தியாவின் ஐந்தாவது பெரிய நெட்வொர்க் என்ற பெயரை ரிலையன்ஸ் ஜியோ பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில மணி நேரத்தில் 500 சிம் அட்டைகள்
இன்னும் வாடிக்கையாளர்களை அதிகரிப்பதற்காக 500 சிம் அட்டைகள் தங்களது ரிலையன்ஸ் எக்ஸ்பிரஸ் ஸ்டோர்களுக்கு அளிக்கப்பட்டதாக கூறிய ஸ்டோர் மேலாளர், அவை சில மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
சென்னையில் இலவச சிம்
சற்று முன் நமக்கு வந்த தகவல் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள பல தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஜியோவின் இந்தச் சோதனை முயற்சிக்கான இலவச சிம் அட்டையை வழங்கி வருவதாகவும், இதன் படி தங்கள் மொபைல் ஃபோனில் வொல்ட் (VolEte) மற்றும் 4ஜி லைட் அம்சங்கள் இருந்தால் மட்டுமே அனைத்து நன்மைகளையும் பயன்படுத்த இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.