டெல்லி: நிறுவனங்களில் நடக்கும் மோசடிகளை விசாரிக்கும் எஸ்எப்ஐஓ (SFIO)- தீவிர மோசடி விசாரணை அமைப்பு கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குக் கடன் அளித்த வங்கிகளின் 10 முன்னால் தலைவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட கடன் தொகை திரும்பப்பெறாததை அடுத்து தீவிர மோசடி விசாரணை அமைப்பு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
எஸ்எப்ஐஓ நோட்டிஸ்
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட கடன் தொடர்பாக கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குக் கடன் அளித்த பொதுத்துறை வங்கிகளில் 10 வங்கிகளின் முன்னால் தலைவர்களுக்கு எஸ்எப்ஐஓ நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
செயல்படாமல் இருந்த நிறுவனத்திற்கு கடன்
இந்த வழக்கில் தொடர்புடைய 3 வங்கி தலைவர்களை ஏற்கனவே விசாரித்துள்ள எஸ்எப்ஐஓ அது தொடர்பான கருத்துகளைப் பதிவு செய்ததுடன் ஏற்கனவே செயல்படாமல் இருந்த ஒரு நிறுவனத்திற்கு எப்படி கடன் வழங்கப்பட்டது என்று தீவிர விசாரணையைத் துவங்கி உள்ளது.
எஸ்எப்ஐஓ கருத்து
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எஸ்எப்ஐஓ கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குக் கடன் அளிக்கும் போது பணியில் இருந்த முன்னால் தலைவர்களிடம் விசாரிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகக் கருதுவதாக தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் மத்தியில் பெரும் கலக்கம்
9,000 கோடி ரூபாய் மோசடி வழக்கில் சிபிஐ, அமலாக்கத் துறை என அனைவரும் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன விஜய மல்லாவை தேடி வரும் நிலையில் இப்போது முன்னால் வங்கி தலைவர்களை விசாரிக்கத் துவங்கி இருப்பது வங்கி ஊழியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மூன்று வருடத்தில் 9000 கோடி கடன்
2007-2010 ஆம் ஆண்டுகளின் காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் மீதான கடன் மிக வேகமாக உயர்ந்துள்ளதாகவும், 2008 ஆம் ஆண்டு 934 கோடியாக இருந்த கடன், அதற்கு அடுத்த நிதி ஆண்டில் 1600 கோடி உயர்ந்துள்ளது. 2009-2010 ஆம் நிதி ஆண்டில் 7000 கோடியாகக் கடன் உயர்ந்துள்ளது. பின்னர் 2012 ஆம் ஆண்டு நிதி ஆண்டில் 9,000 கோடியாகக் கடன் உயர்ந்துள்ளது.
ப்ராண்ட் வேல்யூ
அதுமட்டும் இல்லாமல் கிங்ஃபிஷர் நிறுவனத்தின் ப்ராண்ட் வேல்யூவை எப்படி 4000 கோடியாக உயர்த்திக் காட்டப்பட்டது என்றும், இந்நிறுவனத்தின் பிராண்ட் வேல்யூவை ஆய்வு செய்த நிறுவனத்தின் மீதும் விசாரணை மேற்கொண்டு வருவதாக எஸ்எப்ஐஓ விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது.