இந்திய சந்தையில் மிக முக்கிய வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பெட்ரோலியம், பாலிமர், ரீடைல் வர்த்தகத்தைத் தாண்டி சுமார் 1.50 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் மிகப்பெரிய டெலிகாம் வர்த்தகத்தைக் கடந்த மாதம் வர்த்தகச் சந்தைக்கு அறிமுகம் செய்தது.
ஜியோவின் அறிமுக நாள் முதலே இந்நிறுவனத்திற்கு எதிராகப் பல சலுகை திட்டங்கள், புகார் கடிதங்கள், கோரிக்கைகள் வைத்து வந்த ஏர்டெல் தற்போது ஜியோ மீதான குற்றங்களை நேரடியாகவும் வெளிப்படையாகவும் தெரிவிக்கத் துவங்கியுள்ளது.
ஏர்டெல் நிறுவனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஜியோ நிறுவனமும் தொடர்ந்து ஏர்டெல் மீதான குற்றங்களை அடுக்கி வருகிறது. இதனால் இந்திய டெலிகாம் சந்தையே ஒரு குழாயடி சண்டையாக மாறியுள்ளது.
கூடுதல் கட்டணம்
ஏர்டெல், ஐடியா, வோடாபோன் நிறுவனங்கள் ஜியோ வாடிக்கையாளர்களின் வாய்ஸ் கால் இணைப்பிற்குக் கூடுதலாக 14 பைசா கட்டணத்தைக் கோரி டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராயிடம் கோரிக்கை வைத்த நிலையில் டிராய் முழுமையாக மறுப்புத் தெரிவித்தது.
ஆலோசனை கூட்டம்..
இதன் பின்னர் ஏர்டெல், ஐடியா, வோடாபோன், ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்களின் முக்கிய ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் நடந்தது. இதில் இரு தரப்பின் கோரிக்கைகள் விவாதம் செய்யப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட்டது.
இதற்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டது.
காசு வாங்கிய ஏர்டெல்
இந்நிலையில் ஆலோசனை கூட்டத்தின் முடிவின் படி ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் வாய்ஸ் கால் இணைப்பிற்குக் கூடுதலாக இண்டர்கனெக்ட் பாயின்ட் வழங்க ஏர்டெல் ஒப்புக்கொண்டு அதற்காகத் தனிக் கட்டணத்தை அளிக்க ஜியோ ஒப்புக்கொண்டது.
இதன் அடிப்படியைல் ஏர்டெல் நிறுவனமும் வெளியிடப்படாத தொகையைப் பெற இண்டர்கனெக்ட் பாயின்ட் வழங்கியுள்ளது. பணத்தைப் பெற்றுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் வெளிப்படையாகவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இருதரப்புப் போர்ட் டெஸ்டிக் செய்ய ஒத்துழைக்க வேண்டும் என்பது நிபந்தனை.
குற்றம்.. நடந்தது என்ன..?
இரு நிறுவனங்கள் மத்தியில் டீல் இப்படி இருக்க.. இண்டர்கனெக்ட் பாயின்ட் வழங்கிய ஏர்டெல் செய்த முதற்கட்ட சோதனையில் பல உண்மைகள் தெரிந்துள்தாக அறிவித்து, ஜியோ மீது அடுக்கடுக்கான புகார்களை வெளிப்படையாக வெளியிட்டுள்ளது.
15 மில்லியன் வாடிக்கையாளர்கள்
ஏர்டெல் ஜியோ மத்தியில் நடைபெற ஒப்பந்த அடிப்படையில் ஜியோவின் தற்போதைய வாடிக்கையாளர் எண்ணிக்கையின் தேவைக்கு அதிகமாகவே இண்டர்கனெக்ட் பாயின்ட் வழங்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை முதல் முதல் 15 மில்லியன் வாடிக்கையாளர் இணைக்கும் அளவிற்கு ஏர்டெல் இந்தியா முழுக்க இண்டர்கனெக்ட் பாயின்ட் வழங்கியதாகத் தெரிவித்துள்ளது.
ஒட்டையை மறைக்கும் ஜியோ..
தனது நெட்வொர்-இல் இருக்கும் குறைபாடுகளை மறைக்கவே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இண்டர்கனெக்ட் பாயின்ட் பிரச்சனையைப் பெரிதாகப் பேசுகிறது.
வாய்ஸ் கால் துண்டிப்பு, வாய்ஸ் காலில் தெளிவு குறைபாடு, தொடர் இணைப்பு போன்ற பல பிரச்சனைகளைப் பிற நிறுவனங்களின் மீது இண்டர்கனெக்ட் பாயின்ட் வாயிலாக மறைக்க முயன்று வருகிறது.
இதனை உடனடியாகச் சமாளிக்க வேண்டும் எனவும் ஏர்டெல் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜியோ பதிலடி..
இதனைத் தொடர்ந்து... ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர் பல லட்சக்கணக்கானோர் ஜியோ-விற்கு மாற நினைக்கும் நிலையில் முறையான Mobile Number Portability (MNP) சேவையை அளிக்க மறுக்கிறது. இது டெலிகாம் உரிமைச் சட்டத்திற்கு முற்றிலும் தவறானது என்று ஜியோ குற்றம்சாட்டியுள்ளது.
ஏர்டெல் தனது தேவைக்குக் குறைவான அளவிலேயே இண்டர்கனெக்ட் பாயின்ட் வழங்கியுள்ளதாக ஜியோ தெரிவித்த நிலையில் இப்பிரச்சனை வெடித்துள்ளது.
இப்படி மாறிமாறிக் குறை கூறும் அளவிற்கு டெலிகாம் நிறுவனங்கள் தற்போது குழாயடி சண்டையிட்டு வருகிறது.
குறைவான இண்டர்கனெக்ட் பாயின்ட்
ஏர்டெல் நிறுவனம் ஜியோ விற்குத் தேவைக்கு அதிகமாக இண்டர்கனெக்ட் பாயின்ட் வழங்கியதாகக் கூறும் நிலையில், எங்களது தேவைக்கு 4ங்கில் ஒரு பங்கு இண்டர்கனெக்ட் பாயின்ட் மட்டுமே ஏர்டெல் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது ஜியோ.
2 கோடி வாய்ஸ் கால்..
கூடுதல் இண்டர்கனெக்ட் பாயின்ட் வழங்கியும் தினமும் 2 கோடிக்கும் அதிகமான வாய்ஸ் இணைப்புத் துண்டிக்கப்படுகிறது என ஜியோ தனது புள்ளிவிவரத்தை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஏர்டெல், ஐடியா, வோடாபோன் வழங்கிய இண்டர்கனெக்ட் பாயின்ட் போதுமானதாக இல்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது ஜியோ.
எங்கே போய் முடியுமோ..??