சென்னை: தனியார் வங்கி நிறுவனமான கோடக் மகேந்திரா வங்கி கோடக் நவ் (Kotak Now) என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்தச் செயலியின் மூலமாக இந்தியாவில் முதல் முறையாக மொபைல் மூலமாக டிஜிட்டல் முறையில் புதிய வங்கி கணக்கை எளிதில் திறக்க கூடிய விதமாக உருவாக்கி உள்ளனர்.
அடையாளச் சான்றுகள், முகவரி சான்றுகள், கையெழுத்து என அனைத்தையும் மொபைல் மூலமாகவே அதில் உள்ள கேமரா மற்றும் பையோமெட்ரிக் சாதனங்களைப் பயன்படுத்தி சில நிமிடங்களில் கணக்கை திறக்கலாம்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கோடக் நவ் செயலியை உங்கள் மொபைல் செயலில் பதிவிறக்க வேண்டும். பின்னர் பான் கார்டு, ஆதார் கார்டு போன்ற அடையாள முகவரி சான்று மற்றும் கையெழுத்தை படமாக பதிவேற்றிக் கொண்டு, வாடிக்கையாளர் உறவு எண் மற்றும் வங்கி கணக்கு எண்ணை உருவாக்கிக் கொள்ளலாம்.
இந்தப் பயன்பாடு தானாகவே உங்கள் அருகில் உள்ள கிளையை வங்கி கிளையாக தேர்வு செய்து கொள்ளும். இந்தச் செயலியை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
50% வங்கி பரிவர்த்தனைகள் இப்போது இணையதள வங்கி மற்றும் மொபைல் பேங்க்கிங் மூலமாகவே நடந்து வரும் நிலையில் வங்கி கணக்கையும் டிஜிட்டல் முறையில் எளிதாகத் திறக்க கூடிய முறையை கோடாக் அறிமுகப்படுத்த எண்ணியது.
அதன் முயற்சியாகவே இந்தச் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளதாக கோடக் மகேந்திரா வங்கியின் தலைமை டிஜிட்டல் அதிகாரி தீபக் சர்மா தெரிவித்துள்ளார்.