அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்க இருக்கும் டொனால்டு டிரம்ப் மற்றும் ஹிலாரி கிலின்டன் ஆகியோரின் நேருக்கு நேர் உரையாடல் இன்று நடைபெற உள்ளதால் சர்வதேச சந்தையில் மிகப்பெரிய வர்த்தகச் சரிவு ஏற்பட்டுள்ளது.
நவம்பர் 8ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போது அங்குப் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது, இதன் ஒரு பகுதியாக இன்று நேருக்குநேர் உரையாடல் நடைபெற உள்ளது.
அடுத்த அதிபர் யார் என்ற போட்டியில் நடைபெறும் இந்த உரையாடல் திங்கட்கிழமை வர்த்தகச் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான OPEC உற்பத்தி அளவைக் குறைப்பதற்கான ஆலோசனை கூட்டத்தை 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் நிகழ்த்த உள்ளது. இதனால் காரணமாக இந்திய சந்தையில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகச் சரிவை சந்தித்தது.
மேலும் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி நடைபெற உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் கவர்னர் உர்ஜித் பட்டேல் 0.25% வட்டியைக் குறைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக வங்கித் துறை நிறுவனப் பங்குகள் இன்று அதிகளவிலான சரிவை சந்தித்தது.
திங்கட்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 373.94 புள்ளிகள் குறைந்து 28,294.28 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 108.50 புள்ளிகள் குறைந்து 8,723.05 புள்ளிகள் எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.