சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிரீன் சிக்னல் பயோ பார்மா லிமிடெட் (GreenSignal Bio Pharma Ltd's) நிறுவனமானது வரும் அக்டோபர் மாதம் 26-ந் தேதி துவங்கி அக்டோபர் 28-ந் தேதி வரை குறிப்பிட்ட அளவிலான பங்குகளை முதல்முறையாக மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடுகிறது.
அதன்மூலம் ஏறத்தாழ 120 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட முடியும் எனக் கிரீன் சிக்னல் பயோ பார்மா லிமிடெட் எதிர்பார்க்கிறது. இந்நிறுவனத்தின் பங்குதாரர்களாகவும், ஊக்குவிப்பாளர்களாகவும் இருந்து வரும் திரு. சுந்தரப் பரிபூரணன் மற்றும் திரு. முரளி மற்றும் பிற பங்குதாரர்களான ஏவான் சைக்கிள்ஸ் லிமிடெட் ஆகியோர் 1,45,79,560 பங்குகளை 10 ரூபாய் முகமதிப்புக் கொண்ட பங்குகளை ஒரு பங்கிற்கு 80 ரூபாய் வரையிலான தோராய உத்தேச மதிப்பு விலையில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
இது இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்கில் 38 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரீன் சிக்னல் பயோ பார்மா நிறுவனமானது இரண்டு மிக முக்கிய நோய் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்து வருகிறது. ஒன்று பச்சிளம் சிசுக்களைப் புற்றுநோயின் பிடியில் இருந்து மீட்க பயன்படும் பிசிஜி நோய்தடுப்பு மருந்து( BCG vaccine ) மற்றொன்று பிசிஜி - ஓஎன்சிஓ (BCG-ONCO ) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படும் மருந்து. இதில் பிசிஜி - ஓஎன்சிஓ (BCG-ONCO ) எனப்படும் மருந்தானது சிறுநீரகப் பையில் ஏற்படக் கூடிய புற்றுநோய் தடுப்பில் முக்கியப் பங்காற்றுகிறது.
2016 மார்ச் 31 உடன் முடிந்த நிதியாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 82.73 சதவீதமானது பிசிஜி நோய்தடுப்பு மருந்து( BCG vaccine ) விற்பனையில் மூலம் கிடைத்தது.
யுனிசெப் (UNICEF) என்ற ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்திற்குப் பிசிஜி நோய்தடுப்பு மருந்தை (BCG vaccine) விற்பனை செய்ய உலகச் சுகாதார அமைப்பான WHO அமைப்பின் முன்தகுதி பெற்ற நான்கு நிறுவனங்களில் கிரீன் சிக்னல் பயோ பார்மா பப்ளிக் லிமிடெட் நிறுவனமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
யுனிசெப் கோரும் ( BCG vaccine ) நோய் தடுப்பு மருந்துகளை அவற்றின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்து கொடுப்பதற்கான நீண்டகாலத் தயாரிப்புப் பணிகளில் இந்நிறுவனம் திறம்படச் செயலாற்றி வருகிறது.
யுனிசெப் அமைப்பின் வரம்பிற்கு உட்படாத இந்தோனேசியா, நேபாளம் போன்ற நாடுகளுக்குக் கூட ( BCG vaccine ) மருந்தை கிரீன் சிக்னல் பயோ பார்மா பப்ளிக் லிமிடெட் நிறுவனம் விநியோகித்து வருகிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதைக் காட்டிலும் அயல்நாடுகளில் மும்மடங்கு விலை வைத்து இந்த நோய் தடுப்பு மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. வருங்காலங்களில் அயல்நாட்டுத் தேவைகளைப் பொறுத்து இவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படும்.
மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் முதல்முறையாகப் பட்டியலிடுவதன் மூலம் கிடைக்கக்கூடிய ஆதாயம் இந்நிறுவனத்திற்குக் கூடுதல் நற்பெயரை பெற்றுத் தரும். இதன் வாயிலாக 14,579,560 சமபங்குகளை அதன் பங்குதாரர்கள் விற்பனை செய்ய உள்ளனர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தான் இதன் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் மற்றும் BRLM ஆகும்.