மும்பை: நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் ஆட்டோமேஷன், இன்னோவேஷன், அமெரிக்க நிறுவனங்களின் முடிவுகள் எனப் பல்வேறு காரணங்களால் 2016ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் மிகவும் குறைவான லாப வளர்ச்சியைக் காட்டியுள்ளது. இதில் டிசிஎஸ், இன்போசிஸ் போன்ற பெரு நிறுவனங்களும் அடக்கம்.
ஆனால் எச்சிஎல் நிறுவனம் எவ்விதமான சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் நிலையான வர்த்தகத்தை அடைந்துள்ளதை இந்நிறுவனத்தின் 2வது காலாண்டு முடிவுகள் காட்டுகிறது.
16.7 சதவீத லாப வளர்ச்சி
இந்திய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்களின் டாப் 5 இடங்களில் இருக்கும் எச்சிஎல் நிறுவனம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 16.7 சதவீத லாப உயர்வை அடைந்து சுமார் 2,014 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது.
கடந்த நிதியாண்டில் இதன் அளவு வெறும் 1,726 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வருவாய்
அதேபோல் நிறுவனத்தின் வருவாய் அளவுகள் கடந்த நிதியாண்டை ஒப்பிடும் போது 14.1 சதவீதம் உயர்ந்து 11,519 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளதாக எச்சிஎல் நிறுவனம் தனது காலாண்டு முடிவு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வருவாய் வளர்ச்சி
2016-17ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் அளவு வளர்ச்சியில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 12-14 சதவீதம் என்று அறிவித்துள்ளது. நாட்டின் 2வது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் 2016ஆம் நிதியாண்டில் 2 முறை தனது வருவாய் வளர்ச்சி அளவுகளைக் குறைத்துள்ளது.
டாலர் வருவாய் மற்றும் லாபம்
ஜூலை - செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் எச்சிஎல் நிறுவனத்தின் டாலர் வருவாய் 11.5 சதவீதம் வரை உயர்ந்து 1.72 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
அதேபோல் இந்நிறுவனத்தின் லாபம் 14.2 சதவீதம் உயர்ந்து 301.2 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
ஈவுத்தொகை
இந்நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கு எச்சிஎல் நிறுவனம் ஒரு பங்கிற்கு 6 ரூபாய் ஈவுத்தொகையாக அளித்துள்ளது.
வாடிக்கையாளர்
இக்காலகட்டத்தில் எச்சிஎல் நிறுவனம் 12 மிகப்பெரிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
ஊழியர்கள்
2வது காலாண்டில் இந்நிறுவனத்தில் புதிதாகச் சுமார் 9,083 ஊழியர்கள் இணைத்துள்ளது. இதன் மூலம் எச்சிஎல் நிறுவனத்தின் ஊழியர் எண்ணிக்கை 1,09,795 ஆக உயர்ந்துள்ளது.