மும்பை: நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழிற்துறை வளர்ச்சிக்கு மிகமுக்கிய பங்காற்றும் டாடா குழுமத்தின் தலைவர் சைரஸ் மிஸ்திரி சில முக்கியக் காரணங்களுக்காகத் தனது பதவியில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்தச் செய்தி இந்திய தொழிற்துறை மட்டும் அல்லாமல் சர்வதேச வர்த்தகச் சந்தையிலும் சில அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
தனது வெளியேற்றம் குறித்துச் சைரஸ் மிஸ்திரி பல அதிரடி கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், டாடா குழுமத்திற்குத் தானால் ஏற்பட்ட 21,000 கோடி ரூபாய் நட்டத்தைக் குறித்து யாரும் பேசவில்லை.
சைரஸ் மிஸ்திரி
டாடா குழுமத்தின் பெயரில் உலக நாடுகளில் இருக்கும் 100க்கும் மேற்பட்ட நிர்வாகம் மற்றும் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ்-இன் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி வெளியேற்றப்பட்ட செய்தி இந்திய சந்தையை மட்டும் அல்லாமல் சர்வதேச வர்த்தகச் சந்தையையும் பாதித்தது.
இவர் வெளியேற்றத்தைக் குறித்த அறிவிப்பு வெளியான முதல் முதலே டாடா குழுமத்தில் இருக்கும் நிறுவனங்கள் பாதிப்படைந்தது.
21,000 கோடி நட்டம்
சைரஸ் மிஸ்திரி வெளியேற்றப்பட்ட செய்தி செவ்வாய்க்கிழமை வெளியான அன்றும் இந்திய பங்குச்சந்தையில் இருக்கும் டாடா குழுமத்தை சேர்ந்த நிறுவனங்கள் சுமார் 10,700 கோடி ரூபாய் நட்டத்தைச் சந்தித்தது.
இதைதொடர்ந்து 2வது நாளான புதன்கிழமை 10,000 கோடி அளவிலா சந்தை முதலீட்டு அளவு காற்றில் கரைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
புதன்கிழமை டாடா குழுமத்தின் டாடா மோட்டார்ஸ் 4.27 சதவீதமும், டாடா ஸ்டீல் 4.01 சதவீதமும், டாடா பவர் 2.06 சதவீதமும், டிசிஎஸ் நிறுவனம் 0.07 சதவீதம் அளவிற்குச் சரிவை சந்தித்துள்ளது.
இங்கே குறிப்பிட்டுள்ள நிறுவனங்கள் மட்டும் மொத்த சரிவில் 50 சதவீதத்திற்கு இணையானது.
பிற நிறுவனங்கள்
இதைத் தொடர்ந்து டாடா மெட்டாலிக்ஸ் 3.85 சதவீதமும், டாடா எலக்ஸி 3.15 சதவீதமும், டாடா குளோபல் பிரெவரேஜஸ் 3.10 சதவீதம், டாடா கெமிக்கல்ஸ், டாடா கம்யூனிகேஷன்ஸ் 2.68 சதவீதம், டாடா ஸ்பான்ஜ் ஐயன் 0.57 சதவீதம் மற்றும் டாடா காஃபி 0.42 சதவீதம் சரிவை சந்தித்தது.
மொத்த சந்தை மதிப்பு
டாடா குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு 125 பில்லியன் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் இது 8.5 லட்சம் கோடி ரூபாய். இதில் டிசிஎஸ் நிறுவனத்தின் மதிப்பு மட்டும் 4.72 லட்சம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தை சரிவு
புதன்கிழமை மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 254.91 புள்ளிகள் சரிந்ததற்கும் டாடா குழுமத்தின் சரிவு முக்கியமான காரணம் என்றால் மறுக்க முடியாது.
சைரஸ் மிஸ்திரி
டாடா சன்ஸ் நிறுவனத்தில் சைரஸ் மிஸ்திரி-யின் குடும்ப நிறுவனமான ஷாபூர்ஜி பலோன்ஜி குரூப் சுமார் 18.4 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது.
இதனை வைத்துத் தான் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியைப் பிடித்தார் சைரஸ் மிஸ்திரி.
டாடா குடும்பம்
டாடா சன்ஸ் நிர்வாகக் குழுவில் ஏற்பட்ட திடீர் மாற்றங்களால் சைரஸ் மிஸ்திரி பதவி விலக வேண்டி சூழ்நிலை ஏற்பட்டது.
டாடா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தொண்டு அமைப்பு டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66 சதவீத பங்குகளைக் கைப்பற்றியதால் தனது பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி வெளியேற வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இது குழுமத்தின் நீண்ட நாள் வளர்ச்சிக்காக எடுக்கப்பட்ட முடிவு என டாடா சன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இடைக்காலத் தலைவர்
சைரஸ் மிஸ்திரி வெளியேற்றப்பட்ட நிலையில் டாடா சன்ஸ் குழுமத்தின் இடைக்காலத் தலைவராக ரத்தன் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் 8.5 லட்சம் கோடி மதிப்பிலான குழுமத்தை நிர்வாகம் செய்யும் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிக்கு புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குற்றச்சாட்டு..
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட சைரஸ் மிஸ்திரி, ரத்தன் டாடா மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.