பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் விற்பனை வரி வருவாய், முத்திரை வரி பதிவு மற்றும் மோட்டார் வாகன பதிவு எனத் தமிழகத்திற்கு 2,750 கோடி வரை நட்டம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
25 சதவீத வருவாய்
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத காரணத்தினால் வரி வருவாய் மற்றும் பிற வருவாய்களில் 20 முதல் 25 சதவீதம் வரை குறைந்துள்ளதாக மாநில அரசு கூறியுள்ளது.
எந்த துறைகளில் வருவாய் குறைந்தது?
விற்பனை வரி மட்டும் இதில் 2,000 கோடி ரூபாய் என்றும், 85 கோடி பத்திர பதிவு கட்டணம், 53.4 கோடி மோட்டார் வாகன பதிவிலும் குறைந்துள்ளது.
இன்னும் சில நாட்களில் இந்தப் பிரச்சனை தீரவில்லை என்றால் இது மேலும் அதிகரிக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
டாஸ்மாக் வருவாய் எத்தனை கோடி குறைவு?
ஆறு நாட்களில் 80 கோடி ரூபாய் வரை டாஸ்மாக் வருவாய் குறைந்துள்ளது என்றும், நவம்பர் மாதம் முழுவதும் இப்படியே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
18 முதல் 20 சதவீதம் வரை விற்பனை குறைந்துள்ளதாகவும், இதற்குக் காரணம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை நாக்கள் ஏற்காதது மட்டும் காரணம் அல்ல. மக்கள் கைகளில் ஏற்பட்டுள்ள பண பற்றாக்குறையும் தான் என்று டாஸ்க்மாக் வட்டாரங்கள் கூறுகின்றன.
வருவாய் அதிகமான துறைகள்
அது ஒருபுறம் இருந்த போதிலும் மெட்ரோ நீர், வரி போன்றவற்றை செலுத்தும் போது பழைய ரூபாய் நோட்டுகள் ஏற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் தினமும் 3 முதல் 5 கோடி ரூபாய் வரை வருவாய் உயர்ந்துள்ளதாகச் சென்னை மாநகராட்சி மற்றும் மெட்ரோ நீர் அலுவலக ஊழியர்கள் கூறுகின்றனர்.
சுவாரஸ்யமாக, சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகள் கிட்டத்தட்ட ரூ 10 கோடி சொத்து வரியைப் பெற்று சாதனைச் செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.