நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான 'ஏர்டெல்' ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இத்துறை சார்ந்த நிறுவனங்களின் மொத்த சந்தை வருவாயில் 33 சதவீத வருமானத்தைத் தன்னகத்தில் வைத்துக்கொண்டு இந்திய சந்தையில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளது.
ஆனால் இது அனைத்தும் ஜியோ வருமானத்திற்கு முந்தைய கதை..! எப்படி..?
ஏர்டெல்
ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்திய டெலிகாம் துறையைச் சார்ந்த அனைத்து நிறுவனங்களின் வருவாய் அளவுகளைக் கணக்கிட்டபோது சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் நிறுவனம் சந்தை வருமான பங்கீட்டில் சுமார் 33 சதவீதத்தைப் பெற்றது மட்டும் அல்லாமல் 7 வருட உச்சத்தை எட்டியுள்ளது.
இதனால் இந்திய டெலிகாம் துறையிலேயே அதிக வருமானம் பெறும் நிறுவனமாக மட்டும் அல்லாமல், சந்தையில் புதிய ஆதிக்கத்தைச் செலுத்துகிறது ஏர்டெல். அப்போ ஜியோ..?
செப்டம்பரில் அறிமுகம்
இந்தியா மட்டுமல்லாமல் உலகத் தொலைத்தொடர்பு சேவைச் சந்தையில் புதிய புரட்சியைச் செய்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 'ஜியோ', தனது சேவைகளைச் செப்டம்பர் 5ஆம் தேதி மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தாலும் அவை அனைத்தும் இலவச சேவைகள்.
இதனால் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் வருமானம் பெறு நிறுவனங்கள் பட்டியலில் ஜியோ சேர்க்கப்படவில்லை. இதன் காரணமாகத் தான் ஏர்டெல் 7 வருட உச்சத்தை அடைந்துள்ளது.
போட்டி
இப்பட்டியலில் ஜியோ நிறுவனத்தை நீக்கவிட்டாலும், 33 சதவீதம் பெறும் அளவிற்கு ஏர்டெல் இக்காலகட்டத்தில் செய்த பணிகள் தான் 7 வருட உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
இந்திய சந்தையில் டெலிகாம் சேவை அளிக்கும் வோடபோன், ஐடியா போன்ற முன்னணி நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில் இந்தியா முழுவதும் 3ஜி மற்றும் 4ஜி சேவைகளை அறிமுகம் செய்தது. இதன் மூலம் ஜூலை- செப்டம்பர் காலகட்டத்தில் சேவைகளின் பயன்பாடு அதிகரித்துக் காணப்பட்டது.
இதன் வாயிலாகவே 33 சதவீத வருவாயைப் பெற்றுள்ளது ஏர்டெல்.
டாப் 3 நிறுவனங்கள்
சந்தை வருமான பங்கீட்டுப் பட்டியலில் ஏர்டெல் 33 சதவீதம் (20 புள்ளிகள் உயர்வு), வோடபோன் இந்தியா 23.5 சதவீதம் (10 புள்ளிகள் உயர்வு), 3வது இடத்தில் ஐடியா செல்லுலார் 18.8 சதவீதம் (50 புள்ளிகள் சரிவு) பெற்றுள்ளது.
டேட்டா சேவை
தற்போதைய நிலையில் ஏர்டெல் நிறுவனத்தின் மிகப்பெரிய வலிமை மற்றும் அதிக வருமான பெறும் பரிவு என்றால் டேட்டா சேவை தான். ஆனால் ஜியோவின் அறிமுகம் இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்று தெரிகிறது.
காரணம் இந்திய சந்தையில் இருக்கும் டெலிகாம் நிறுவனங்களின் சேவை கட்டணத்தை விட மிகவும் குறைவான கட்டணத்தில் சிறந்த சேவை அளிப்பதாக ஜியோ உறுதி செய்துள்ளது.
மொத்த வளர்ச்சி
ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்திய டெலிகாம் நிறுவனங்களின் மொத்த வருமான வளர்ச்சி 2.40 சதவீதம் அதாவது 240 புள்ளிகள்.
மார்ச் காலாண்டு
இந்நிலையில் மார்ச் காலாண்டு முதல் ஜியோ நிறுவனம் வருமான பெறும் நிறுவனங்கள் பட்டியலில் முழுமையாக இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.