நாட்டின் முன்னணி கல்லூரிகளில் ஒன்றான ஐஐடி-யில் ஸ்டார்ட்-அப் நிவனங்களுடனான பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில் 2017ஆம் ஆண்டுக்கான வளாக நேர்முகத் தேர்வு துவங்கியுள்ளது.
பொதுவாக ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்லூரி நேர்முகத் தேர்வுக்கு வரும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்குச் சந்தையின் சராசரி அளவுகளை விடவும் மிகவும் அதிகமான சம்பளத்தை வழங்குவது வழக்கம்.
இந்த வகையில் 2017 நிதியாண்டுக்கான வளாக நேர்முகத் தேர்வில் கலந்துகொண்ட ஆன்லைன் டாக்ஸி நிறுவனம் உபர், ஐஐடி பாம்பே கல்லூரி மாணவிக்கு 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது.
அதிதி லந்தா
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அதிதி லந்தா 2013ஆம் ஐஐடி-ஜேஈஈ தேர்வில் ஆண்கள் ஆதிக்கத்தைக் குறைக்கும் விதமாக டாப் 10 பட்டியலில் இடம்பெற்றார். இவருடன் மற்றொரு மாணவியும் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றார்.
இந்நிலையில் அதிதி லந்தா ஐஐடி பாம்பே கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவை தேர்ந்தெடுத்தார். இப்பிரிவில் இருக்கும் 90 மாணவர்களில் வெறும் 5 பேர் தான் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்தது.
டிசம்பர் 1
இந்தியாவில் இருக்கும் அனைத்து ஐஐடி கல்லூரிகளிலும் நடந்த வளாக நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களில் அதிகச் சம்பளத்துடன் வேலைவாய்ப்பை அளித்தது உபர் நிறுவனம் தான்.
உபர்
2013ஆம் ஆண்டு ஐஐடி-ஜேஈஈ தேர்வில் டாப் 10 பட்டியலில் இடம்பெற்ற அதிதி லந்தா மற்றும் பிரஜல் காரே ஆகிய இரு மாணவிகளுக்கு உபர் நிறுவனம் வேலைவாய்ப்பை அளித்துள்ளது என்று ஐஐடி நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.
கூகிள்
2013ஆம் ஆண்டு ஐஐடி-ஜேஈஈ தேர்வில் 3வது இடத்தைப் பெற்ற பாலக் ஜெயின் மற்றும் முதல் இடத்தில் பெற்ற சார்மி தெத்தியா ஆகியோர் கூகிள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர், ஆனால் உபர் நிறுவனத்தை ஒப்பிடுகையில் இவர்களின் சம்பளம் சற்றுக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
அதிதி லந்தா
டிசம்பர் 1ஆம் தேதி வரையிலான நிலவரத்தின் படி அதிதி லந்தா 1.2 கோடி ரூபாய் என்ற அதிகப்படியான சம்பளத்தைப் பெற்றுள்ளார். இவர் உபர் நிறுவனத்தின் அமெரிக்காவில் உள்ள தலைமையகத்தில் பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.