சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ரெனால்ட் நிஸ்ஸான் கூட்டணி நிறுவனம், சில வாரங்களுக்கு முன் தனது 3 வது ஷிப்ட் உற்பத்தி பணிகளைத் தற்காலிகமாக நிறுத்திய நிலையில் தற்போது நிரந்தரமாக நிறுத்தியுள்ளது.
இதனால் இந்நிறுவனத்தில் பணியாற்றும் 1,980 ஊழியர்களின் வேலைவாய்ப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அளவிற்கு அதிகமான இருப்பு..!
ரெனால்ட் நிஸ்ஸான் கூட்டணி நிறுவன தொழிற்சாலையில் முழுவதும் முடிக்கப்பட்ட நிலையில் சுமார் 20,000 கார்கள் இருப்பாக உள்ளது. இதனால் மேலும் உற்பத்தி செய்தால் வர்த்தகம் பாதிக்கப்படும் என்பதால், சில வாரங்களுக்கு முன்பு தனது 3வது ஷிப்ட் உற்பத்தி பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தியது.
தற்போது இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் ஏற்றுமதி அளவுகள் குறைந்துள்ளதால் 3வது ஷிப்ட் உற்பத்தி பணிகளை நிரத்திரமாக நிறுத்திவிட்டது.
1,980 ஊழியர்கள்
ரெனால்ட் நிஸ்ஸான் தனது 3வது ஷிப்ட் உற்பத்தி பணிகளை நிரத்திரமாக நிறுத்திவிட்ட நிலையில் இந்நிறுவனத்தில் சுமார் 1,980 ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து நிலவி வருகிறது.
இதன் முதல் படியாக இந்நிறுவனத்தில் பணியாற்றும் 800 தற்காலிக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிறுவனத்தின் வர்த்தக நிலை மேலும் மோசமடைந்தால் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்படும் எனத் தகவல் கிடைத்துள்ளது.
இருப்பின் அளவு
தற்போதைய நிலையில் ரெனால்ட் நிஸ்ஸான் தொழிற்சாலை கிடங்கில் 3,450 டட்சன் ரெடி கோ மற்றும் 5.260 ரெனால்ட் கிவிட் கார்கள் உள்ளது.
நிஸ்ஸான்
மோடியின் 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடை அறிவிப்பால் இந்தியாவில் ஒட்டுமொத்த விற்பனை சந்தை 25-30 சதவீதம் சரிந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்தில் நிஸ்ஸான் நிறுவன வாகனங்களின் விற்பனை அளவு வெறும் 50ஆகக் குறைந்துள்ளது.
48 சதவீத உயர்வு
2016ஆம் ஆண்டில் நிஸ்ஸான் மற்றும் டட்சன் நிறுவனத்தின் விற்பனை அளவு சுமார் 48 சதவீதம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.