மத்திய அரசுக்குச் சொந்தமான விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா தனது வர்த்தகம் மற்றும் சேவையை விரிவாக்கம் செய்ய 100 விமானங்களைக் குத்தகைக்கு எடுக்க உள்ளது.
இதன் மூலம் இந்நிறுவனத்தின் விமானங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகத் திட்டமிட்டுள்ளது ஏர் இந்தியா நிர்வாகம். இதற்கான ஒரு ரூபாய் கூட மத்திய அரசிடம் இருந்து வாங்கப்போவதில்லை என்பதே இத்திட்டத்தின் முக்கிய அம்சம்.
100 விமானங்கள்
ஏர் இந்தியா நிறுவனம் ஏற்கனவே அளவிற்கு அதிகமான கடனில் தத்திளிக்கும் நிலையில், புதிய விமானங்களை வாங்காமல் UPA அரசு பயன்படுத்திய குத்தகை முறையைக் கொண்டு 100 விமானங்களை ஒப்பந்த முறையில் சில வருடங்களுக்குக் குத்தகைக்கு வாங்க முடிவு செய்துள்ளது.
4 வருடத் திட்டம்
100 விமானங்களைக் குத்தகைக்கு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து எவ்விதமான நிதியையும் வாங்காமல், குத்தகைக்கு எடுக்கும் விமானத்தின் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு அதற்கான தொகையை அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து துறையின் செயலாளர் ஆர்.என்.சவ்பே கூறியுள்ளார்.
மேலும் இந்த 100 விமானங்களை மொத்தமாகக் குத்தகைக்கு எடுக்காமல் அடுத்த 4 வருடத்திற்குப் பகுதி வாரியாக எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிதியுதவி
ஏர் இந்தியாவிற்கான மத்திய அரசின் நிதியுதவியின் அளவு 2012ஆம் ஆண்டில் 30,231 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.
மார்ச் 2016ஆம் ஆண்டு வரை 22,280 கோடி ரூபாய் வரையிலான நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,713 கோடி ரூபாய் 2016-17ஆம் நிதியாண்டில் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
118 விமானங்கள்
தற்போதைய நிலையில் ஏர் இந்தியா விமான நிறுவனத்திடம் 118 விமானங்கள் உள்ளது, இதில் 41 விமானங்கள் பெரிய விமானங்களாகும், இதில் சில தற்போது உள்நாட்டு விமானச் சேவையில் இயங்கி வருகிறது.
66 சிறிய ரக விமானங்கள் பன்னாட்டு வழித்தடங்களிலும், 11 விமானங்கள் பிராந்திய வழித்தடங்களிளலும், இயங்கி வருகிறது.
இருப்பு
தற்போதைய நிலையில் 77 விமானங்கள் ஏர் இந்தியா சொந்தமாக வைத்துள்ளது. 22 விமானங்கள் விற்பனை செய்யப்பட்டுப் பின் அதையே குத்தகைக்கு வாங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 19 விமானங்களை முழுமையாகக் குத்தகைக்கு எடுக்கப்பட்டு இந்நிறுவனம் இயங்கி வருகிறது.
232 விமானங்கள்
2020 மார்ச் 31ஆம் தேதிக்குள் இப்புதிய திட்டத்தின் படி ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் சுமார் 232 விமானங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.