இன்றைய நிலையில் பெரு மற்றும் சிறு நகரங்களில் இருக்கும் மக்கள் மத்தியில் பட்ஜெட் 2017இல் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. அதுவும் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் எதிர்பார்ப்புகள் இன்னும் அதிகமாகியுள்ளது என்றே கூறவேண்டும்.
இந்நிலையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் பிரதமர் மோடி 2017-18ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் சாமானிய மக்கள் பயன்படும் வகையில் இதையாவது செய்வாரா..?
வருமான வரி விதிப்பு அளவு உயர்வு
இந்தியாவில் 2.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு எவ்விதமான வரியும் விதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் இதன் அளவைச் சற்று உயர்த்தினால் அடிமட்டத்தில் உள்ள ஊழியர்கள் மட்டும் அல்லாமல் புதிதாகப் பணியில் சேரும் இளைய சமுசாதயத்திற்கும் இது ஒரு ஜாக்பாட் ஆக அமையும்.
அளவுகோல் விரிவாக்கம்
பெரு நகரங்களில் இருக்கும் மக்களுக்கு லாபம் அளிக்கும் மத்திய அரசு வருமான வரி விதிப்பு அளவுகோலை உயர்த்த வேண்டும். தற்போது 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10 சதவீத வரியும், 5 முதல் 10 லட்சம் வருமானத்திற்கு 20 சதவீத வரியும், 10 லட்சத்திற்கு அதிக வருமானம் உடையோர் மீது 30 சதவீத வரியும் விதிக்கப்படுகின்றனர்.
இந்த அளவுகோலை மாற்றினால் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு இது மிகப்பெரிய தூண்டுதலாக இருக்கும்.
கொடுப்பனவில் உயர்வு
மாத சம்பளக்காரர்கள் குழந்தைகள் படிப்பு, மருத்துவச் செலவு, வீட்டு வாடகை, பயணச் செலவு எனக் கொடுப்பனவு வாயிலாகத் தங்களது வருமானத்தைச் சரி வரி பிரித்து வருமான வரி விதிப்பைக் குறைத்து வருகின்றனர்.
ஆனால் தற்போது நடைமுறையில் இருக்கும் அளவீடுகள் அனைத்தும் பல வருடங்களுக்கு முன்பு நிர்ணயம் செய்யப்பட்டது. இதனைத் தற்போதைய நாட்டு நடப்பிற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கலாம்.
80சி அளவில் உயர்வு வேண்டும்
தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டதிட்டங்கள் மூலம் ஒருவர் 80சி சட்டப்பிரிவின் வாயிலாக 1,50,000 முதல் 3,00,000 ரூபாய் வரையில் வருமான வரி விதிப்பை தவிர்க்கலாம்.
இந்த அளவுகளை நிதியமைச்சர் அருண் ஜேட்லி உயர்தலாம்.
மூத்த குடிமக்கள்
மேலும் 80சி கீழ் மூத்த குடிமக்கள், 3,00,000 ரூபாய் வரையும், 80 வயதைத் தாண்டிய மிக மூத்த குடிமக்களுக்கு 5,00,000 ரூபாய் வரையில் வருமான வரி விதிப்பில் இருந்து குறைக்க முடியும். இதன் அளவுகளை மாற்றிப் பல வருடங்கள் ஆன நிலையில் பணமதிப்பிழப்பிற்குப் பின் இதனை உயர்த்த அதிகளவிலான வாயிப்புகள் உள்ளது.
கட்டுமான துறை பத்திர முதலீடு
மத்திய அரசு சாமானிய மக்களுக்கு வரிச் சலுகை அளிக்கும் வகையில் கட்டுமான துறை சார்ந்த பத்திர முதலீடுகளில் 20,000 வரையில் வரி தளர்வுகளை அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதன் மூலம் இந்திய உள்கட்டமைப்பு மட்டும் அல்லாமல் ரியல் எஸ்டேட் துறையும் வளர்ச்சி அடையும். அனைத்திற்கும் மேலாகப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
என்பிஎஸ் திட்டம்
நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு தற்போது நிதிதேவையில் உள்ள நிலையில், நீண்ட கால நிதிதேவையைப் பூர்த்திச் செய்யும் நிலையில் என்பிஎஸ் திட்டத்தின் வரியில்லா முதலீட்டு அளவான 50,000 ரூபாயை 1,00,000 ஆக உயர்த்தலாம்.
பிபிஎப் அல்லது ஈபிஎப்
என்பிஎஸ் திட்டத்தைப் போலவே பிபிஎப் அல்லது ஈபிஎப் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கும் முழுமையான வரி விலக்கு அளிக்கலாம். இது அனைத்தும் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான நீண்டகால முதலீட்டுக்கு உதவும்.
வீட்டுக் கடன்
ஏற்கனவே பிரதமர் மோடி, பிராதான மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3 மற்றும் 4 சதவீத வட்டியைத் தள்ளுபடியை அறிவித்துள்ள நிலையில், 3ஆம் கட்ட நகரங்களில் வீட்டுக் கடன் திட்டத்தில் சில சலுகைகளை இந்தப் பட்ஜெட் அறிக்கையில் எதிர்பார்க்கலாம்.
வீட்டுக் கடன் தளர்வுகள்
தற்போது நீங்கள் வாங்கிய வீட்டுக் கடன் திட்டத்தின் அசல் தொகையில் வருடத்திற்கு 1.50 லட்சம் வரை செலுத்தலாம் அதற்கு முழுமையான வரி விலக்கு உண்டு, இந்நிலையில் இந்த அளவை 2,00,000 ரூபாய் வரையும் உயர்ந்த நிதியமைச்சகம் ஆலோசனை செய்து வருகிறது.