பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக நாட்டின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும் மத்திய அரசு இன்று வரை இதனை ஒப்புக்கொள்ளவில்லை.
இந்நிலையில் சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி அளவை 7.6 சதவீதத்தில் இருந்து 6.6 சதவீதமாகக் குறைத்துள்ளது. இந்தச் சரிவிற்கு முழுமையாகக் காரணமாகப் பணமதிப்பிழப்பு தான் என்று ஐஎம்எப் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் இடத்தைச் சீனா பிடித்துக்கொண்டது.
இந்தியா
இந்தியாவில் நவம்பர் 8, 2016ஆம் தேதி பிரதமர் மோடி, நாட்டில் கருப்பு பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கப் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்த தடை விதித்தார். இதனால் உற்பத்தித் துறை முதல் சேவை துறை வரை அனைத்து வர்த்தகச் சந்தைகளும் பணத் தட்டுப்பாட்டுக் காரணமாக வர்த்தகப் பாதிப்பை சந்தித்தது.
வளர்ச்சியில் தொய்வு
இதனால் 2016ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 7.6 சதவீதமாக இருக்கும் என அறிவித்த சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்), திங்கட்கிழமை நாட்டின் வளர்ச்சியை 6.6 சதவீதமாகக் குறைத்து தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
முதல் இடம்
இந்தியாவின் இந்த வளர்ச்சி குறைபாட்டின் மூலம் வளரும் நாடுகளில் அதிக வளர்ச்சியைச் சந்திக்கும் நாடாக இருந்த இந்தியா தற்போது முதல் இடத்தை இழந்துள்ளது.
சீனா
இந்நிலையில் 2016ஆம் ஆண்டில் சீன சந்தை 6.7 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் நிலையில் உள்ளதால், முதல் இடத்தைச் சீனா பிடித்து இந்தியாவை இரண்டாவது இடத்திற்குத் தள்ளியுள்ளது.
இதன் மூலம் அதிக வளர்ச்சி அடையும் நாடு என்ற நிலையை இந்தியா தற்போது இழந்துள்ளது.
நம்பிக்கை
உலகிலேயே சீன 2வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இருந்தாலும், இந்தியா எளிதாகச் சீனாவுடன் போட்டி போட்டு 2017ஆம் ஆண்டில் 7.2 சதவீதம் அளவிலான வளர்ச்சியை அடையும், 2017ஆம் ஆண்டில் சீன 6.5 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்திருக்கும் எனவும் ஐஎம்எப் தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளது.