டெல்லி: மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் மக்கள் மத்தியில் மதிப்பை இழந்தாலும், பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்கியே ஆக வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.
இதன் வாயிலாகப் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்பு ஏடிஎம் மற்றும் வங்கிகளில் பணப் பரிமாற்ற அளவுகளைப் படிப்படியாக உயர்த்தி வந்த மத்திய அரசு 2017-18ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், 30,000 ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புடைய பணப் பரிமாற்றங்களுக்குப் பான் கார்டை கட்டாயமாக்க உள்ளது.
பான் கார்டு
தற்போது நடைமுறையில் 50,000 ரூபாய் மற்றும் அதற்கு அதிகமாக வங்கிகளில் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால் பான் கார்டு வழங்க வேண்டும்.
இந்தியாவில் பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு பட்ஜெட் அறிக்கையில், இதன் அளவுகளை 30,000 வரையில் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.
சிறப்புக் கட்டணம்
அதுமட்டும் அல்லாமல் 30,000 ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையைப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதற்குப் பயன்பாடு கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அசல் பணப் பரிவர்த்தனை
இதன் மூலம் அதிகளவில் பணத்தைக் கையாளும் மக்களின் பணிகள் முடங்குவதும் ஒரு புறம் இருந்தாலும், அனைத்து பரிமாற்றங்களும் வங்கியின் வாயிலாக நடைபெறும் என்று மத்திய அரசு நம்புகிறது.
வியாபாரிகள் கணக்குகள்
தனிநபர் கணக்குகள் மட்டுமல்லாமல், வியாபாரிகளின் பணப் பரிமாற்றங்களிலும் கைவைக்கிறது மத்திய அரசு. பான் கார்டு கட்டாயமாக இருக்கும் 2 லட்சம் ரூபாய் பணப் பரிமாற்றத்தை தற்போது 1 லட்சம் ரூபாயாகக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
ஆதார்
வங்கி பணப் பரிமாற்றங்களுக்குப் பான் கார்டு இல்லாதவர்கள், இனி ஆதார் கார்டு எண்ணையும் பயன்படுத்தலாம் என்ற அறிவிப்புப் பட்ஜெட் அறிக்கையில் வெளியாகும் எனத் தெரிகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம்.