இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் 8000-9000 ஊழியர்கள் வரை ஆடோமேஷனின் ஆதிக்கத்தால் பணியில் இருந்து விடுவித்துள்ளதாக மனித வளங்கள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஷங்கர் எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கையிடம் கூறியுள்ளார்.
ஆனால் அந்த ஊழியர்கள் யாரும் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படவில்லை என்றும், அவர்கள் அனைவரும் மேம்பட்ட புதிய திட்டங்களில் பணியாற்றி வருகின்றனர் என்றும் ஷங்கர் தெரிவித்தார்.
ஒவ்வொரு காலாண்டிற்கும்
பெங்களூரில் நடந்த ஒரு நிகழ்வில் பங்கேற்ற கிருஷ்ணமூர்த்தி ஷங்கர் ஒவ்வொரு காலாண்டும் நிறுவனத்தின் பல பிரிவுகளில் ஆடோமேஷன் அறிமுகப்படுத்தப்பட்டு 2000 ஊழியர்கள் வரை விடுவிக்கப்பட்டு புதிய பணிகள் அளிக்கப்படுவதாகவும் அதற்காக ஊழியர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்படுவதாகவும் ஷங்கர் தெரிவித்தார்.
பிலிப்ஸ்
2015 -ம் ஆண்டு பிலிப்ஸ் நிறுவனத்தின் பணியில் சேர்ந்த ஷங்கர் அங்கும் பல பிரிவுகளில் ஆடோமேஷன் முறையைச் செயல்படுத்தினார். அதனால் அங்கு ஊழியர்கள் பணிக்கு எடுக்கப்படுவது குறைந்ததும் குறிப்பிடத்தக்கது.
வேலைக்கு ஆட்கள் எடுப்பது குறைப்பு
ஊழியர்களைப் பணியில் எடுப்பது இன்ஃபோசிஸ் நிறுவனத்திலும் குறைக்கப்பட்டு வருகின்றது, சென்ற ஆண்டு இதே நேரத்தில் 17000 ஊழியர்கள் பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த ஆண்டோ 5700 ஊழியர்கள் மட்டுமே பணிக்கு எடுக்கப்பட்டுள்ளனர்.
விப்ரோ
பிபிஓ, ஐடி சேவை அளிக்கும் நிறுவனங்களிலும் ஆடோமேஷனின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது, அன்மையில் விப்ரோ நிறுவனமும் ஹோல்ம்ஸ் என்ற பெயரில் ஆடோமேஷன் செயல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக விப்ரொ நிறுவனத்தில் 3,200 ஊழியர்கள் அவர்களது பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதும் அது நடப்பு நிதி ஆண்டில் 4,500ஊழியர்கள் வரை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது.