2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யத் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்த நிலையில், நிதியமைச்சகம் பட்ஜெட் தாக்கலுக்கான பணிகளை விறுவிறுப்பாகச் செய்து வருகிறது.
எப்போது இல்லாதவகையில் பட்ஜெட் 2017 பல சிறப்புகளுக்கும் கேள்விக்குப் புதைந்துள்ளது. காரணம் 5 மாநிலங்களில் தேர்தல், இதையொட்டி தேர்தல் ஆணையம் விதித்த நிபந்தனைகள், ஒரு மாதம் முன்கூட்டியே தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், பணமதிப்பிழப்புப் பாதிப்புகள் கணக்கில் சேர்க்கப்படுமா இல்லையா என்ற கேள்வி, வளர்ச்சி அடையும் நாடுகள் பட்டியலில் இந்தியாவின் இடத்தைச் சீனா பிடித்துள்ள நிலையில் மீண்டும் முதல் இடத்தைப் பிடிக்க என்ன திட்டம் தீட்டப்போகிறது, அவை அனைத்தையும் தாண்டி மொத்த பணவீக்கம் மற்றும் உணவு பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.
இதனுடன் அமெரிக்காவின் அதிபரான டொனால்டு டிரம்ப் திட்டங்களால் ஏற்படப்போகும் சரிவை எதிர்கொள்ளுதல், பிரிட்டன் ஐரோப்பா பிரிவில் ஏற்படும் சரிவுகளையும் இந்தியா எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இப்படி இந்தியா தற்போது சந்திக்கும் பிரச்சனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இத்தகை தருணத்தில் 2017-18 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் எப்படி இருக்கும் என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.
பலரும் பல கணிப்புகளை வெளியிட்டாலும், 2017 பட்ஜெட்டில் நீங்கள் இதைக் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.
வருமான வரி விதிப்பில் சலுகை
பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அறிக்கையில், குறைந்தபட்ச வருமான வரி விதிப்பு அளவுகளை 2.5 லட்சத்தில் இருந்து 4 லட்சமாக உயர்த்தப் படலாம் எனக் கணிப்புகள் வெளிவந்துள்ளது.
உண்மையில் 4 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்படவில்லை என்றாலும் குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாய் வரையிலாவது உயர்த்தப்படலாம்.
பணமில்லா பரிமாற்றங்கள்
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் முதல் முறையாகப் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், மத்திய அரசு தனது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வாயிலாகப் பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்கும் முயற்சிகளை மக்கள் மத்தியில் கொண்டு வர அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
இந்நிலையில் 2017 பட்ஜெட் அறிக்கையில் பண அட்டைப் பரிமாற்றம், மின்னணு பரிமாற்றத்தை பயன்படுத்தும் போது டோல் கட்டணங்களில் சலுகை, POS இயந்திர பரிமாற்ற கட்டணங்களில் தளர்வுகள் எனப் பல சலுகைகள் கண்டிப்பாக மத்திய அரசு அறிவிக்கும்.
ரியல் எஸ்டேட்
மத்திய அரசு அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடை, இந்தியாவில் பிற எந்தத் துறையைக் காட்டிலும் ரியல் எஸ்டேட் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனைச் சீர்ப்படுத்தவும், இத்துறையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும் வருமான வரி விதிப்பில் தளர்வு, HRA அளவீடுகள் உயர்வு அளிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். இதன் மூலம் மாத சம்பளக்காரர்கள் அதிகளவில் வீடு மற்றும் வீட்டு மனைகளை வாங்க முற்படுவார்கள் என்பது மத்திய அரசின் திட்டம்.
வீட்டுக் கடன்
ஏற்கனவே வீட்டுக் கடன் திட்டமான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னா திட்டத்தில் மத்திய அரசு பல சலுகைகளை அளித்துள்ள நிலையில், தற்போது வீட்டுக் கடனுக்குச் செலுத்தப்படும் தொகைக்கான வரி விலக்கு அளவுகளையும் உயர்த்த உள்ளதாகத் தெரிகிறது.
விவசாயிகள்
பணமதிப்பிழப்பின் மூலம் இந்தியாவில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்து வைத்திருந்த பயிர்களைப் பணத் தட்டுப்பாட்டின் காரணமாக விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் 2017-18 நிதியாண்டு பட்ஜெட் அறிக்கையில் விவசாயிகளுக்கு மானியம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.