அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 7 நாட்டு மக்கள் மீது விதித்த விசா தடையை, அந்நாட்டில் இருக்கும் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், அதன் தலைவர்களும் ஒன்று சேர்ந்து எதிர்த்து வரும் நிலையில், ஆரக்கிள் நிறுவனம் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாகப் பெங்களுரில் மிகப்பெரிய டெவலப்மென்ட் சென்டரை அமைக்க முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகிள், முதல் முறையாக இந்தியாவில் நிறுவனத்தை வாங்கவும், புதிதாக முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.
இவை அனைத்தும் டிரம்ப் அளித்த நெருக்கடியால் நிகழ்ந்துள்ளது என்றால் மிகையாகாது.
கூகிள்
இந்தியாவில் முதல் முறையாக ஒரு நிறுவனத்தை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ள கூகிள் ஸ்டாட்ர்அப் மற்றும் வென்சர் கேபிடல் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதன் மூலம் கூகிள் தற்போது இந்தியாவில் நேரடி முதலீட்டில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிக்கோள்
சந்தர் பிச்சை தலைமையிலான கூகிள் நிறுவனம் பல முக்கிய மற்றும் புதிய முயற்சிகளைக் கையில் எடுத்துள்ளது. அதன் இலக்குகளை அடைய புதிய மற்றும் பெரிய தொழில்நுட்பத்தில், நிறுவனங்களைக் கைப்பற்றுவதே முதல் படி என நிர்ணயம் செய்த அதற்கான பணிகளைச் செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாகவே இந்தியாவில் இருக்கும் சில நிறுவனங்களைக் கூகிள் கைப்பற்றவும், முதலீட்டின் வாயிலாக மறைமுகமாக அவர்களின் தொழில்நுட்பத்தையும், ஊழியர்களையும் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
நுகர்வோர்-இண்டர்நெட் நிறுவனங்கள் வேண்டாம்
தற்போதைய நிலையில் கூகிள் நிறுவனம் நுகர்வோரை மையமாகக் கொண்டு இயங்கும் இண்டர்நெட் நிறுவனங்களில் முதலீடு செய்ய விருப்பவில்லை எனக் கூகிள் நிறுவனத்தின் இந்திய முதலீடுகள் குறித்து அறிந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நுகர்வோர்-இண்டர்நெட் நிறுவனங்கள் - ஈகாமர்ஸ் நிறுவனங்கள்
புதிய தலைவி
சமீபத்தில் கூகிள் நிறுவனம் Avendus Capital என்னும் முதலீட்டு நிறுவனத்தின் துணை தலைவரான சீமா ராவ் அவர்களை இந்திய சந்தையில் கார்பரேட் டெவலப்மென்ட் அல்லது நிறுவன கைப்பற்றல் பணிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சி
நாட்டின் டிஜிட்டல் விளம்பரத்தில் முதல் இடத்தில் இருக்கும் கூகிள், இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியைப் பொருத்தே அதன் வர்த்தக வளர்ச்சி இருப்பதாகச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
முக்கியத் துறை
தற்போதைய நிலையில் கூகிள் இரண்டு முக்கியத் துறைகளில் கவனத்தைச் செலுத்தி வருகிறது. ஒன்று கிளவுட் கம்பியூடிங் மற்றும் சைபர் செக்யூரிட்டி.
கைப்பற்றுதலில் முதல் இடம்
உலக டெக் நிறுவனங்களில் அதிகளவிலான நிறுவனங்களைக் கைப்பற்றியது கூகிள் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் இதுவரை ஒரு நிறுவனத்தைக் கூட இந்தியாவில் கைப்பற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப்-க்கு நன்றி..
எச்-1பி விசா, கிரீன்கார்டு வழங்குவதில் கட்டுப்பாடுகள், 7 முஸ்லிம் நாடுகள் மீது தடை எனப் பல விஷயங்களில் இந்தியர்கள் டொனால்டு டிரம்பை திட்டித்தீர்த்த நிலையில் இதே விஷயங்கள் மூலம் பல நிறுவனங்கள் இந்தியாவிற்குப் படையெடுக்கத் துவங்கியுள்ளது மகிழ்ச்சியான செய்தி.