இந்திய டெலிகாம் துறையில் நிறுவனங்கள் இணைப்பின் காரணமான ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாவும், இதனால் இந்தியாவில் மட்டும் 25,000 ஊழியர்களுக்குப் பணியில் இருந்து நீக்கப்படலாம் என்று தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் புதன்கிழமை செய்தியை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று தென்னிந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான ஏர்செல், ஆனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உடன் இணைவதற்கான பணிகளைச் செய்து வரும் நிலையில், இணைப்பிற்கு முன்னரே சுமார் 700 ஊழியர்கள் பணிநீக்கம் செய்துள்ளது.
ஏர்செல்
தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மற்றும் கேரளாவில் பகுதிகளில் டெலிகாம் சேவை அளிக்கும் நிறுவனங்களில் முக்கியமான இடத்தையும் வர்த்தகத்தையும் பெற்றுள்ள ஏர்செல் நிறுவனம் 700 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப் பிங்க் ஸ்லிப் அளித்துள்ளது.
8000 ஊழியர்கள்
இந்தியாவில் பல பகுதிகளில் சேவை அளித்தும் வரும் ஏர்செல் நிறுவனத்தில் சுமார் 8,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஆர்காம் உடனான இணைப்பு உறுதியான நிலையில், இரு நிறுவனங்களும் இணைப்பிற்கான பணிகளைச் செய்து வருவதன் வாயிலாக முதல் கட்டமாக மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 10 சதவீத பணியாளர்களை முழுமையாக நிறுவனத்தை விட்டு நீக்க ஏர்செல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பிங்க் ஸ்லிப்
இதற்கான பணிநீக்க ஆணையைச் சுமார் 700 ஊழியர்களுக்கு ஏர்செல் நிர்வாகம் அனுப்பியுள்ளது. ஏர்செல் மட்டுமல்லாமல் இந்திய டெலிகாம் துறையில் இத்தகைய பெருமளவில் ஊழியர்களை வெளியேற்றியது இதுவே முதல் முறை.
சம்பளம்
மேலும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பணி நீக்கத்திற்கு ஒப்புக்கொண்ட ஊழியர்களுக்குப் பிப்ரவரி மாத சம்பளத்துடன் 6 மாதத்திற்கான அடிப்படை சம்பளத்தை ஏர்செல் வழங்க உள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் ஏர்செல் பிங்க் ஸ்லிப் கொடுத்துள்ளது.
செலவின குறைப்பு
இந்தப் பணிநீக்கம் கிளை அலுவலகங்களில் மட்டும் அல்லாமல் கார்பரேட் அலுவலகத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இதன் மூலம் ஏர்செல் நிறுவனம் மிகப்பெரிய செலவுகளைக் குறைப்பது மட்டும் அல்லாமல் ஆர்காம் உடனான இணைப்புத் தொய்வு ஏற்படாமல் இருக்கவும் வழிவகுக்கும் என ஏர்செல் நிறுவனத்தின் பெயர் வெளியிட விரும்பாத உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
7-8 மாதங்கள்
மேலும் ஏர்செல் நிறுவனத்தில் அடுத்த 7-8 மாதத்தில் விற்பனை மற்றும் விநியோகம் பரிவு மட்டும் அல்லாமல் பிற அனைத்துப் பிரிவுகளிலும் ஊழியர்கள் பணிநீக்கத்தை எதிர்பார்க்கலாம்.
அடுத்தப் பணிநீக்க பணிகள் ஏப்ரல் மாதம் முதல் துவங்கும் எனவும் ஏர்செல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொடரும்..
இதில் உண்மை என்னவென்றால் இத்தகைய பணிநீக்கம் ஏர்செல் நிறுவனத்தில் மட்டும் அல்லாது, வோடபோன், ஐடியா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களிலும் நடக்கும் என்பதே.
இந்திய சந்தையில் வேலைவாய்ப்புகள் குறைவாக இருக்கும் இத்தகைய சூழ்நிலையில் டெலிகாம் துறையில் 25,000 ஊழியர்களின் பணிநீக்கம் நாட்டின் பொருளாதாரத்தையும் வளர்ச்சியை அதிகளவில் பாதிக்கும்.
3 காரணிகள்
மேலும் இந்திய டெலிகாம் துறையில் ஏற்பட்டுள்ள இந்தப் பரிச்சனைகளுக்கு 3 காரணிகளை முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
1. ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் (முகேஷ் அம்பானி)
2. டெலிகாம் நிறுவனங்களின் இணைப்பு
3. பணமதிப்பிழப்பு
ஆனால் வேடிக்கை என்னவென்றால் இதே முன்று காரணிகளால் இத்துறை அடுத்தச் சில வருடத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடையப்போகிறது என்பது தான்.