அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம் பதவியேற்றிய நாள் முதல் விசா மீது தொடர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், இந்தியர்கள் தங்களது அமெரிக்கக் கனவுகளை நினைவாக்கச் சந்தையில் இருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அமெரிக்கக் குடியுரிமை பெறும் காஸ்ட்லியான ஒரு வழியை இந்தியர்கள் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
என்ன வழி..?
அமெரிக்கக் கனவு
கடந்த 15 வருடங்களில் இந்தியர்களின் மிகப்பெரிய கனவாக இருப்பது அமெரிக்காவில் ஒரு வேலை மற்றும் வாழ்க்கை. இதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் இந்தக் கனவை நினைவாக்கவே பன்னாட்டு நிறுவனங்களைக் குறிவைத்து வேலைக்கும் சேர்வது இந்தியர்களின் வழக்கமாக உள்ளது.
எச்1-பி அல்லது எல்-1 விசா
பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கண்டிப்பாக அமெரிக்காவில் வாடிக்கையாளரோ அல்லது அங்குக் குறிப்பிடத்தக்க அளவிலான வர்த்தகமும் இருக்கும் என்பது தான். இத்தகைய நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்துவிட்டால் எச்1-பி அல்லது எல்-1 விசா மூலம் அமெரிக்கச் செல்ல முடியும் என்பது தான் இதன் உள்நோக்கம்.
ஆனால் எச்1-பி அல்லது எல்-1 விசாவில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், பலருக்கும் தெரியாத ஒரு வழி தற்போது இந்திய மக்களிடம் அதிகளவில் பிரபலம் அடைந்து வருகிறது. அது தான் 'ஈபி-5 விசா'.
'ஈபி-5 விசா'
அமெரிக்க வாழ்க்கையை அடைய இந்திய மக்களுக்கு அதிகம் பரிட்சயம் இல்லாத ஒரு வழிதான் 'ஈபி-5 விசா'. பொதுவாக அமெரிக்காவிற்குத் திறமைசாலிகளைத் தனது நாட்டிற்கு ஈர்த்து அவர்களின் மூலம் உலக நாடுகளில் மிகப்பெரிய வர்த்தகத்தை அடையும்.
இதேபோல் திறமையும் முதலீட்டையும் ஒன்றாக ஈர்க்கும் ஒரு முறை தான் இந்த 'ஈபி-5 விசா'.
ஒரு நாளுக்கு 3 இந்தியர்கள்
சில வாரங்களுக்கு முன்பு குறைவான அளவிலேயே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வந்த இந்தியர்கள், தற்போது குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு 3 பேர் விண்ணப்பம் அளித்து வருகின்றனர்.
அப்படி இத்திட்டத்தில் என்ன இருக்கு..?
கிரீன் கார்டு
அமெரிக்க அரசு, 'ஈபி-5 விசா என்னும் குடியேற்ற முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 5,00,000 டாலர் அதாவது இன்றைய மதிப்பில் 3.35 கோடி ரூபாய் முதலீடு செய்தால் அடுத்த 18 மாதத்தில் அமெரிக்க அரசு அவருக்கு நிரந்தரக் குடியுரிமை மற்றும் அமெரிக்காவில் வாழ்நாள் முழுவதும் வேலை செய்வதற்கான உரிமையும் அளிக்கிறது.
இரண்டு வழிகள்
இத்திட்டத்தில் 2 வழிகள் உள்ளது.
1. அமெரிக்கச் சந்தையில் நேரடியாக 1 மில்லியன் டாலர் முதலீடு செய்து ஒரு தொழிலை அடிப்படையில் இருந்து துவங்கி குறைந்தபட்சம் 10 முழுநேர வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்டும். இதன் மூலம் விண்ணப்பதாரர்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் (21 வயது குறைவான வயதுடைய குழந்தைகளுக்கும் அடக்கம்) அமெரிக்காவின் நிரந்தரக் குடியுரிமை அளிக்கப்படுகிறது.
2. அமெரிக்க அரசு அனுமதிக்கப்பட்ட ஈபி-5 வர்த்தகத்தில் ஒரே முறையாக 5,00,000 டாலர் முதலீடு செய்து அமெரிக்காவின் கிராமப்புற பகுதிகளில் (நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோ போல் அல்லாத சற்று வர்த்தக வாய்ப்புகள் குறைவாக இருக்கும் பகுதிகள்) வர்த்தகத்தைத் துவங்க வேண்டும். இத்திட்டத்திலும் குறைந்தபட்சம் 10க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
முடங்கிய இந்தியர்களுக்கு ஒரே வாய்ப்பு
அமெரிக்காவில் டிரம்ப் நியமனத்திற்குப் பின் குடியேற்ற விதிகள் மிகவும் கடுமையான நிலையில் இந்தியர்களும் பிற நாட்டவர்களும் தங்களது அமெரிக்கக் கனவை நினைவாக்க தற்போதசு ஏதுவாக இருக்கும் ஒரே வழி இந்தக் காஸ்ட்லியான ஈபி-5 விசா தான்.
42 இந்தியர்கள்
இந்நிலையில், முதலீடு மற்றும் குடியுரிமை ஆலோசனை நிறுவனமான எல்சிஆர் கேப்பிடல் நிறுவன தலைவர் கூறுகையில், கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 210 முதலீடு விண்ணப்பங்களை நாங்கள் ஏற்றுள்ளோம், இதில் 42 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபலம்
இந்தியாவில் கடந்த 2 வருடமாகத் தொழில்நுட்ப வல்லுனர்கள், ஸ்டார்ப்-அப் நிறுவன தலைவர்கள், செல்வந்தர்கள் எச்1-பி மற்றும் எல்-1 விசா முறைகளைத் தவிர்த்து 'ஈபி-5 விசா' முறையை அதிகளவில் நாடி வருகின்றனர்.
புதிய மசோதா
கடந்த மாதம் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பு ஈபி-5 விசா திட்டத்தின் கீழ் இருக்கும் 5,00,000 டாலர் அளவீடுகளைக் குறைந்தபட்சம் 1.35 மில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கையை வைத்துள்ளது.
இதை அமெரிக்க அரசு ஏற்று அமலாக்கும் செய்யும் முன் விண்ணப்பத்தை அளிக்க வேண்டும் என்ற முன் எச்சரிக்கையுடன் இந்தியர்கள் அதிகளவில் இத்திட்டத்தின் கீழ் விசாவை பெற விண்ணப்பம் அளித்து வருகின்றனர்.
25,000 விண்ணப்பங்கள்
ஜனவரி - மார்ச் 2016ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் ஈபி-5 விசா பெறுவதற்காகச் சுமார் 25,000 விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் தொழில்செய்வோர்கள் மட்டும் அல்லாமல் மாணவர்களும் இந்த முறையைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்குள் நுழையத் திட்டமிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
30 சதவீத உயர்வு
மேலும் இத்திட்டத்தின் கீழ் விசா பெற விரும்போரின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் 30 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் மட்டுமே அமெரிக்கா 2015ஆம் ஆண்டில் சுமார் 7 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.