டெல்லி: கடந்த சில நாட்களாக மத்திய அரசு அடுத்தச் சில நாட்களில் 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், அவை கூடிய விரைவில் புழக்கத்திற்கு வர உள்ளதாவும் செய்திகள் பரவி வருகிறது.
இந்தச் செய்திகள் அனைத்தும் வதந்திகள் என்று இதற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பொருளாதார விவகார துறை செயலாளர் சக்திகாந்த தாஸ்.
எல்லாம் வதந்தி..
தற்போதைய நிலையில் மத்திய அரசும் சரி, ரிசர்வ் வங்கியும் சரி 1,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யும் திட்டமில்லை, மேலும் அனைத்து அரசு தரப்பினரும் 500 ரூபாய் நோட்களின் தயாரிப்பை அதிகரித்து, மக்கள் மத்தியில் முழுமையாகக் கொண்டு சேர்க்கும் பணியில் மட்டுமே ஈட்டுப்பட்டுள்ளோம் எனப் புதன்கிழமை சக்திகாந்த தாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறினார்.
முயற்சிகள்
ஏடிஎம்களில் பணமில்லாமல் பல இடங்களில் மக்கள் கஷ்டப்படுவதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்தையும் தாண்டி மக்கள் தங்களுக்கான தேவைக்கு மட்டும் பணத்தை ஏடிஎம்களில் வித்டிரா செய்யப்படியும் சக்திகாந்த தாஸ் மற்றொகு டிவீட்டில் தெரிவித்துள்ளார்.
இயல்பு நிலை
பணமதிப்பிழப்புப் பின் தற்போது இந்தியாவில் பணப் பரிமாற்றங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. மேலும் இந்தியாவில் தற்போது நடந்து வரும் பெரும்பாலான பணப் பரிமாற்றங்களை ரிசர்வ் வங்கி நேரடியாகக் கண்காணித்து வருகிறது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த வாரம் தெரிவித்தார்.
இந்தியாவின் வளர்ச்சி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்த காரணத்தால் இந்தியாவின் ஜிடிபி அளவு 1 சதவீதம் வரை குறைந்துள்ளது என ஐஎம்எப் அமைப்பு தெரிவித்துள்ளது.