ஜியோவின் அறிமுகம் இந்திய டெலிகாம் சந்தையின் அஸ்திவாரத்தையே ஆட்டியுள்ளது என்றால் மிகையாகாது. இந்நிறுவனத்தின் இலவச ஆஃபர்கள் இந்தியாவில் பட்டிதொட்டிகளில் இருக்கும் மக்கள் வரை சென்றடைந்து 7 மாதத்தில் வாடிக்கையாளர்களை வலைத்துப்போட்டுள்ளது.
இந்நிலையில் ஜியோ உடன் போட்டி போடும் நோக்கில் இந்தியாவில் இருக்கும் பிற டெலிகாம் நிறுவனம் புதிய புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது.
இப்போது நிலைமை என்னவென்றால் பிற டெலிகாம் நிறுவனங்களின் வளர்ச்சியால் ஜியோவின் வளர்ச்சியே கேள்விக்குறியாகியுள்ளது.
ஜியோ அறிமுகம்
2 வருடமாகப் பொருமையாகச் செதுக்கப்பட்டு இந்தியாவின் பெரு நகரங்களைக் குறிவைத்து கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் டெலிகாம் துறையில் தனது சேவையைத் துவங்கியது.
பல மாதங்கள் போராட்டங்களுக்குப் பின் ஜியோ 2016ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதத்தில் துவங்கியது.
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு
ஜியோ நிறுவனத்தின் அறிமுகத்தின் போது 90 நாட்கள் கொண்ட வரவேற்பு ஆஃபர் என டேட்டா, வாய்ஸ் கால் என அனைத்தையும் இலவசமாக அறிவித்தார் இந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. இதனால் இந்திய டெலிகாம் சந்தையே தலைகீழாக மாறியது.
ஏர்டெல் சரிவு
ஜியோவின் முதல் இலவசங்கள் அறிவிக்கப்பட்ட 2016ஆம் ஆண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் லாப வெறும் 504 கோடி ரூபாய்க் குறைந்தது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இதன் அளவு 1,108.1 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் லாப அளவுகள் சுமார் 54.6 சதவீதம் வரை சரிந்தது.
இது இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனத்தின் நிலை.
மார்ச் 31
ரிலையன்ஸ் ஜியோ வெல்கம் ஆஃபர்-க்குப் பின் புத்தாண்டில் ஹேப்பி நியூ இயர் என்ற ஆஃபர் மூலம் இந்தியாவின் பட்டித்தொட்டிகள் வரை சென்றடைந்தது. இந்த ஆஃபர் வருகிற மார்ச் 31ஆம் தேதி வரை நீடிக்கும்.
பிரச்சனை வெடித்தது..
ஜியோவின் புத்தாண்டு ஆஃபர் அறிவிக்கப்பட்ட பின் இந்திய டெலிகாம் சந்தையில் இருக்கும் நிறுவனங்கள் யாரும் எடுக்காத மிகப்பெரிய முடிவுகள் எடுக்கத் துவங்கினார்.
இதன் காரணமாகத் தற்போது ஜியோ நிறுவனத்தின் வளர்ச்சியே கேள்விக்குறியாகியுள்ளது.
நிறுவன இணைப்புகள்
தற்போதைய நிலையில், அனில் அம்பானி (முகேஷ் அம்பானியின் தம்பி) ரிலையன்ஸ் கம்யூணிகேஷன்ஸ் ஏர்செல், எம்டிஎஸ் நிறுவனங்களுக்குடன் இணைப்பு ஒப்புக்கொண்டுள்ள நிலையில், டாடா குழுமத்தின் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதன் பின் வோடபோன் - ஐடியா நிறுவனம் மற்றும் ஏர்டெல் - டெலிநார் ஆகிய நிறுவனங்கள் இணைய உள்ளது.
இதனால் ஜியோவின் வளர்ச்சி முழுமையாகப் பாதிக்கப்பட உள்ளது.
ஆதிக்கம்
டெலிகாம் சந்தையைப் பொறுத்த வரை அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள நிறுவனத்தின் செயல்திட்டங்கள், கட்டண அளவுகளே பிற அனைத்து நிறுவனங்களும் சில மாற்றங்களுடன் பின்பற்றி வருகிறது.
இப்படிப் பார்க்கும் போது ஜியோ இந்திய டெலிகாம் சந்தையில் காணாமல் போகக் கூட வாய்ப்புகள் உள்ளது.
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை
1. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டாடா டெலிசர்வீசஸ், எம்டிஎஸ், ஏர்செல் ஆகிய கூட்டணி நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 260 மில்லியன்.
2. ஏர்டெல்-டெலிநார் கூட்டணியின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 316 மில்லியன், இதில் டெலிநார் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 50மில்லியன்.
3. வோடபோன்-ஐடியா செல்லுலார் கூட்டணியில் வாடிக்கையாளர் எண்ணிக்கை 395 மில்லியன்.
4. டிசம்பர் மாத முடிவு வரை ரிலையன்ஸ் ஜியோவின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 72 மில்லியன் மட்டுமே.
இதில் ஜியோ தனது ஆதிக்கத்தை இழந்துள்ளது.
வருவாய் அளவு
இந்திய டெலிகாம் சந்தையின் மொத்த வருவாயில் ஒரு ரூபாய் கூட இதுவரை ஜியோ வருமானமாக ஒரு ரூபாய் கூடப் பெறவில்லை, காரணம் இந்நிறுவனம் அறிவித்த தொடர் இலவசங்கள் தான்.
1. இந்நிலையில் டெலிகாம் சந்தையின் மொத்த வருவாயில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டாடா டெலிசர்வீசஸ், எம்டிஎஸ், ஏர்செல் ஆகிய கூட்டணி நிறுவனத்தின் வருவாய் பங்கீடு 18 சதவீதம்.
2. ஏர்டெல் 31 சதவீத வருவாய் பங்கீட்டை பெற உள்ளது.
3. வோடபோன்-ஐடியா கூட்டணி இதில் 42 சதவீத வருவாய் பங்கீட்டை பெற்று மிகப்பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்த உள்ளது.
ஜியோவிற்கு வாய்ப்புகள் குறைவு..
ஜியோ அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளதற்கு முக்கியக் காரணம் இதன் இலவச திட்டங்கள் தான்.
இந்நிறுவனத்தின் வாய்ஸ் கால் சேவைகள் இந்தியாவின் பல இடங்களில் மோசமாக இருக்கும் காரணத்தால் ஜியோவின் வாடிக்கையாளர் எண்ணிக்கை இலவச திட்டங்களுக்குப் பின் அதிகளவில் குறைய வாய்ப்புகள் உள்ளது.
குறைந்த கட்டணத்தில் சேவை
ஜியோ பிரைம் உறுப்பினர்கள் ஜியோ நியூ இயர் ஆஃபரை மார்ச் 31-க்கு பிறகும் 12 மாதங்கள் வரை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் மார்ச் 1 முதல் 31-ம் தேதிக்குள் 99 ரூபாய்க்குப் பிரிமியம் மெம்பர்ஷிப் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
இதன் மூலம் வெறும் மாதம் 303 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வதன் வாயிலாக ஜியோ வாடிக்கையாளர்கள் இலவச வாய்ஸ்கால் சேவை, தினமும் 1 ஜிபி அதிவேக 4ஜி இண்டர்நெட் சேவைகளை 31 மார்ச் 2018 வரை பெற முடியும்.
10 நாட்களுக்கு மட்டுமே
பிரிமியம் மெம்பர்ஷிப் கட்டணத்தைச் செலுத்த விரும்பாத ஜியோ வாடிக்கையாளர்கள் 303 ரூபாய் பேக் மூலமாக 10 நாட்களுக்கான இந்தச் சலுகைகளைப் பெற முடியும்.
வளர்ச்சி மந்தம்
ஜியோவின் இலவசங்கள் வருகிற மார்ச் 31ஆம் தேதி முடிவடையும் காரணத்தால் இந்நிறுவனத்தின் சேவை கட்டணங்கள் குறைவாக இருந்தாலும், வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள மட்டுமே முடியுமே தவிர அதிகரிக்காது. காரணம் மோசமான சேவைகள்.
மேலும் ஜியோவின் இலவங்களுக்காக மட்டுமே பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதிகளவில் இருப்பதால் மார்ச் 31க்குப் பின் இவர்கள் நெட்வொர்கில் இருந்து வெளியேறலாம்.
இத்தகைய காரணங்களால் ஜியோவின் வளர்ச்சி அளவுகள் மிகவும் குறைவாக மட்டுமே இருக்கும்.
அண்ணன் தம்பி கூட்டணி...
ஜியோவின் அறிமுக நாள் முதலே டெலிகாம் துறையில் அம்பானி சகோதரர்கள் இணையப் போகிறார்கள் எனக் கருத்து நிலவி வருகிறது. இதற்கு அனில் அம்பானியும் வரவேற்பு அளித்துள்ளார்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஜியோ இணைந்தால் இந்தக் கதை அப்படியே தலைகீழாக்க மாறிவிடும். சொல்லப்போனால் இதுதான் முகேஷ் அம்பானியின் அடுத்தத் திட்டமாகக் கூட இருக்கலாம்.
வெயிட் அண்ட் சீ...