மத்திய அரசும், அதனுடைய முதலீட்டு அமைப்பான இன்வெஸ்ட் இந்தியா, உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் சுமார் 300 நிறுவனங்களிடம் மிகமுக்கிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தற்போதைய நிலையில் வல்வரசு நாடுகளுக்கு இணையாக இந்தியா உயரவேண்டுமானால், சிறந்த உள்ளகட்டமைப்பு, எதிர்காலத் தொழிற்சந்தைகளின் தேவையைப் பூர்த்திச் செய்யும் அளவிற்கான கட்டமைப்புகள், சிறந்த சுகாதாரம் எனத் தேவைகளைப் பூர்த்திச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
இதற்கான நிதி தேவையைப் பூர்த்திச் செய்யவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்திற்காக மத்திய அரசு 300 நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
முதலீடு
மத்திய அரசும், இன்வெஸ்ட் இந்தியா அமைப்புத் தற்போது 300 நிறுவனங்களிடம் நடத்தி வரும் பேச்சுவார்த்தையின் மூலம் இந்தியாவிற்கு 62 பில்லியன் டாலர், அதாவது 4 லட்சம் கோடி ரூபாய் முதலீடும், 17 லட்ச வேலைவாய்ப்புகளையும் உருவாக்க திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.
சீனா
தற்போது மத்திய அரசு செய்துள்ள திட்ட வரைவின் படி 62 பில்லியன் டாலரி முதலீட்டில் 32 பில்லியன் டாலரை சீன நாட்டிடம் இருந்து ஈர்க்க இந்தியா முடிவு செய்துள்ளது.
சீன நாட்டின் முதலீட்டின் மூலம் இந்தியாவில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவது மட்டும் அல்லாமல் இறக்குமதியில் அதிகளவில் குறையும்.
சீன நிறுவனங்கள்
சீனா முதலீட்டு ஈர்க்கும் திட்டத்தில் 10 பில்லியன் டாலரை SANY என்னும் நிறுவனத்தின் வாயிலாக மட்டுமே ஈர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் வாயிலாக இந்தியாவில் காற்றாலை மூலம் மின்சார உற்பத்தியை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் டிலியான் வான்டா குரூப் என்னும் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் ஹரியானா மாநிலம் பல திட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் மூலம் 5 பில்லியன் டாலர் வரை முதலீட்டை எதிர்பார்க்கலாம்.
ஆட்டோமொபைல்
அமெரிக்க நிறுவனமான SAIC-யின் வாயிலாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் குஜராத் மாநிலத்தில் உள்ள ஹாலோல் தொழிற்சாலையை ஒப்படைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
70 திட்டங்கள்
இந்தியாவில் தொய்வடைந்து வரும் 70 திட்டங்களில் வெளிநாடுகளில் இருந்து 3 பில்லியன் டாலர் வரையிலான முதலீட்டை ஈர்த்து இத்திட்டங்களில் 3 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
150 நிறுவனங்கள்
கடந்த சில மாதங்களாக மத்திய தொழிற்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் சுமார் 150 நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இப்பேச்சுவார்த்தையின் விளைவாக இந்தியாவில் சிஸ்கோ மற்றும் H&M நிறுவனங்கள் தங்களது முதலீட்டையும் வர்த்தகத்தையும் விரிவாக்கம் செய்துள்ளனர்.
மொத்த திட்டங்கள்
மத்திய அரசு இந்த 300 நிறுவனங்களிடம் செய்யும் பேச்சுவார்த்தையின் மூலம் இந்தியாவில் 295 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.