இந்திய டெலிகாம் சந்தையில் ஐியோ களமிறங்கிய நாள் முதல் இத்துறை நிறுவனங்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்து வந்தது. இந்திய சந்தையில் ஜியோவின் போட்டியைச் சமாளிக்க ஏர்டெல், ஐடியா, வோடபோன் ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்து சலுகைகளை அறிவித்து வந்தது.
இதுநாள் வரையில் ஆர்காம் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ரிலயைன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவன இணைப்பில் படு பிசியாக இருந்த நிலையில் தற்போது ஜியோவிற்குப் போட்டியாகப் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் திட்டமாகப் புதிய ஆஃபரை அறிவித்துள்ளது.
49 ரூபாய்
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இன்று அறிவித்துள்ள திட்டத்தில், தனது நிறுவனத்தில் இணையும் புதிய வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புச் சலுகையாக 1 ஜிபி 4ஜி இண்டர்நெட் டேட்டா 49 ரூபாய்க்கும், 3ஜி டேட்டாவை 149 ரூபாய்க்கும் அறிவித்துள்ளது.
இதனுடன் தனது நெட்வொர்க் உள்ளே மட்டும் அனைத்து லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்கள் முற்றிலும் இலவசம் என்று அறிவித்துள்ளது. இன்று அறிவிக்கப்பட்டுள்ள இரு சேவைகளின் காலம் 28 நாட்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
3ஜி வாடிக்கையாளர்கள்
டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹமாச்சல் பிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் புதிதாக இணையும் 3ஜி வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புச் சலுகையாக 99 ரூபாய்க்கு அன்லிமிடெட் 3ஜி இண்டர்நெட் மற்றும் 20 ரூபாய் மதிப்பிலான டாக் டைம் அளிக்க ஆர்காம் முடிவு செய்துள்ளது.
2ஜி வாடிக்கையாளர்கள்
ஹரியானா, உத்தரப் பிரதேசம், ஆந்திர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, சென்னை பகுதிகளில் 49 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் வரம்பற்ற 2ஜி இண்டர்நெட், 20 ரூபாய்க்கு டாக்டைம், ஒரு நிமிடம் 25 பைசா என்ற ஆஃபரை அளித்துள்ளது.
முன்னணி நிறுவனங்கள்
இந்தியாவில் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் போன்றவை 4ஜி சேவைகளை அளித்து, 5ஜி சேவைகளை அளிக்க முயற்சி செய்து வரும் நிலையில் ஆர்காம் நிறுவனம் 2ஜி மற்றும் 3ஜி சேவைகளுக்காகவும், இதில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகவும் முயற்சி செய்து வருகிறது.