ஜெயலலிதா இல்லாத அதிமுக அரசின் பட்ஜெட் மார்ச் 16 வியாழக்கிழமை இன்று தாக்கல் செய்யப்படுகின்றது. இதற்காக மெரினாவில் உள்ள முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் வணங்கி ஆசிபெற்றுவிட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழக நிதி அமைச்சர் டி ஜெயகுமார்.
தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டவர் ஜெயலலிதா. நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் நலத்திட்டங்களில் எந்தச் சமரசமும் இல்லை என்றும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடன் சுமையில் தமிழகம் ஏற்கனவே தத்தளித்து வரும் நிலையில் புதிய வரிகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தமிழக அரசு அறிவித்துள்ள இலவச திட்டங்களால் கடும் நிதி சுமையில் அரசு சிக்கித் தவிக்கின்றது அதே நேரம் தமிழகத்தில் இருந்து பல நிறுவனங்கள் வெளியேறியுள்ளதால் அரசின் வருவாயும் பல மடங்கு குறைந்துள்ளது.
ஏற்கனவே தமிழக அரசு அறிவித்த நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு வரும் நிலையில் தமிழக அரசின் கடன் அளவு அதிகரித்துக் கொண்டு வருகின்றது. அதற்கான வட்டியும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ஜெயலலிதா இருந்த போது சென்ற முறை வரி இல்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இந்த முறை புதிய வரிகள் ஏதேனும் விதிக்கப்படுமா, வரி விகிதம் ஏதேனும் உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
அதுமட்டும் இல்லாமல் சென்ற வாரம் தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் கணிசமான அளவு உயர்த்தியுள்ளது..
இப்படிப் பட்ட சூழலில் நிதிநிலை தாக்கல் செய்யும் தமிழகத்தின் புதிய நிதி அமைச்சர் டி ஜெயகுமார் அவர்களுடைய தகுதிகள் என்னென்ன என்று இங்குப் பார்ப்போம்.
சென்னை ராயபுரத்தை சேர்ந்த டி ஜெயகுமார் முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராகப் பணியாற்றி உள்ள இவர் செப்டம்பர் 29, 2012 வரை தமிழகச் சட்டப்பேரவைத் தலைவராகச் செயல்பட்டார். செப்டம்பர் 29, 2012 அன்று பேரவை தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாகத் தெரிவித்தார்.
அதன் பின் எந்த அமைச்சர் பதவியையும் பெறாமல் இருந்த ஜெயகுமார் அவர்களுக்கு ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஓபிஎஸ் தலைமையிலான ஆட்சியில் மீன் வளத்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. பின்னர் ஓபிஎஸ் ராஜிநாமா, அதிமுகவில் ஏற்பட்ட சிக்கல், புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்பு அதனைத் தொடர்ந்து டி ஜெயகுமார் அவர்களுக்கு முதல் முறையாக நிதி அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
இப்போது முதல் முறையாகப் பட்ஜெட் தமிழகப் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கும் டி ஜெயகுமார் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை அறிவியலும் சென்னை சட்டக்கல்லூரியில் 1987ல் சட்டப்படிப்பும் முடித்துள்ளார்.