ஜியோவின் இலவசங்கள் வருகிற மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், இந்நிறுவனத்தின் ஆதிக்கம் சந்தையில் அதிகளவில் குறையும் என்பதை உணர்ந்த ஏர்டெல், ஐடியா, வோடபோன் ஆகிய நிறுவனங்கள் தங்களது வர்த்தக விரிவாக்கப் பணிகளைக் கவனித்து வருகிறது.
இந்நிலையில், வோடபோன், ஐடியா கூட்டணியின் மூலம் இந்திய டெலிகாம் சந்தையில் முதல் இடத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து முதல் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள அதிரடி திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இந்த வகையில் இண்டர்நெட் சேவை வழங்கும் டிக்கோனா நிறுவனத்தின் 4ஜி வர்த்தகத்தை முழுமையாகக் கைப்பற்ற முடிவு செய்துள்ளது ஏர்டெல்.. இந்த அறிவிப்பால் ஐடியா-வோடபோன் கூட்டணி, ஐியோ ஆகியவை சோகத்தில் மூழ்கியுள்ளது.
ஏர்டெல் - டிக்கோனா
டிக்கோனா டிஜிட்டல் நெட்வொர்க் நிறுவனத்தின் 4ஜி வர்த்தகத்தை 1,600 கோடி ரூபாய்க்குக் கைப்பற்ற பார்தி ஏர்டெல் முடிவு செய்துள்ளதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இக்கைப்பற்றும் ஒப்பந்தத்தில் டிக்கோனா நிறுவனத்தின் 5 வட்டங்களில் இருக்கும் 350க்கும் மேற்பட்ட பகுதிகளின் வர்த்தகம் மற்றும் ஸ்பெக்ட்ரம் என அனைத்தையும் முழுமையாகக் கைப்பற்ற உள்ளது.
டிக்கோனா
இந்நிறுவனம் குஜராத், உத்திர பரிதேசம் கிழக்கு, உத்திர பரிதேசம் மேற்கு, ராஜஸ்தான் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் 2300 மெகாஹெட்ஸ் பேன்டில் 20 மெகாஹெட்ஸ் அலைக்கற்றை வைத்துள்ளது.
இந்தியா முழுவதும்..
இந்த 5 வட்டங்களில் அலைக்கற்றையைக் கைப்பற்றியதன் மூலம் ஏர்டெல் நிறுவனம் இந்தியா முழுவதும் 2300 மெகாஹெட்ஸ் பேன்ட் அலைக்கற்றைக் கொண்டும் 4ஜி சேவையை அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் 4ஜி சேவையில் யாரும் தொடமுடியாத அளவிற்கு ஏர்டெல் நிறுவனம் உயர உள்ளது.
ஜியோ தடாலடி...
இனி இந்திய டெலிகாம் வர்த்தகச் சந்தையை ஜியோவிற்கு முன் மற்றும் பின் என்று பிரித்தால் சரியாக இருக்கும். ஜியோவின் இலவசங்கள் மற்றும் அதன் மூலம் மக்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றங்கள் என அனைத்தும் டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிறுவன இணைப்புகள்
பல முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் சந்தையில் இருக்கும் பிற டெலிகாம் நிறுவனங்களை முழுமையாகக் கைப்பற்றி வருகிறது. இதில் சில நிறுவனங்கள் மொத்த நிறுவனத்தையும், சில நிறுவனங்கள் குறிப்பிட்ட வர்த்தகப் பிரிவை மட்டும் கைப்பற்றி வருகிறது.
இதனால் சில வருடங்களுக்கு முன்பு இந்திய சந்தையில் 13 டெலிகாம் சேவை நிறுவனங்கள் இருந்த நிலையில், அடுத்தச் சில வருடங்களில் இந்த எண்ணிக்கை 4 முதல் 5ஆகக் குறையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஏர்டெல்
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் அதிகளவில் நிறுவனத்தைக் கைப்பற்றுவிதில் கவனத்தைச் செலுத்தவில்லை என்றாலும், தனது சேவையை மேம்படுத்துவது எப்படி என்ற திட்டத்தில் முள்கியுள்ளது.
ஆயினும் பல ஆலோசனைகளுக்குப் பின் டெலிநார் நிறுவனத்தைப் பார்தி ஏர்டெல் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
போட்டி
இந்நிலையில் இந்திய டெலிகாம் சந்தையில் நிறுவனத்தின் இணைப்புகளால் டெலிகாம் சேவையிலும் அதன் தரத்திலும் மிகப்பெரிய அளவிலான போட்டி உருவாகியுள்ளது.
இதனால் இனி இந்திய மக்கள் மேம்படுத்தப்பட்ட சேவையைப் பெறுவார்கள்.
தடை..
ஏர்டெல்- டிக்கோனா ஒப்பந்தத்தில் பங்குதாரர்களுக்கு எந்த வகையில் பங்குகள் பிரிக்கப்பட உள்ளது என்பது குறித்து முழுமையாக அறிவிக்கப்படவில்லை என்று டிக்கோனா நிறுவனத்தின் பங்குதாரர்களின் ஒருவரான ராஜேஷ் திவாரி வழக்குத் தொடுத்துள்ளார்.