இந்தியாவில் ஆதார் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் மத்திய அரசு சுமார் 34,000 கோடி ரூபாய்ச் சேமித்துள்ளதாக நிதியியல் துறை செயலாளர் அசோக் லவாச தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை அசோச்சாம் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லவாச ஆதார் கார்ட் தகவல்களின் பாதுகாப்புக் குறித்துக் கேள்வி எழுப்பியபோது, அதற்கு அவர், ஆதார் திட்டத்தைச் சாதாரணமாக எடைபோட வேண்டாம், இத்திட்டம் இதுவரை பல வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு தற்போது பான் கார்டு பெறவும், வருமான வரியை தாக்கல் செய்யவும் ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
105 கோடி மக்களுக்கு மத்திய அரசு தனிப்பட்ட அடையாளமான ஆதார் எண்ணை அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் மத்திய அரசின் பல திட்டங்களில் செலவுகள் குறைந்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் அரசு திட்டங்களின் பலன்களை அனைத்தும் நேரடியாக மக்களுக்குச் செல்லும் வகையில் ஆதார் திட்டம் விளங்குகிறது என்று தெரிவித்தார்.
மேலும் கடந்த 3 வருடங்களாகப் பல கட்ட ஆலோசனைகள் மேம்பாடுகள் மூலம் ஆதார் திட்டத்தை மிகவும் வெளிப்படையாகவும், இடர்பாடுகள் குறைந்த ஒன்றாகவும் தற்போது மெருகேற்றியுள்ளது எனவும் அசோக் லவாச கூறினார்.