இந்திய டெலிகாம் சந்தையில் அடுத்தச் சில வருடங்களுக்கு ஜியோ தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் என்பது அதன் 7.2 கோடி வாடிக்கையாளர்களின் ஆதரவு மூலம் மிகத் தெளிவாகத் தெரிகிறது.
இதுவரை இலவசங்களை மட்டுமே அளித்து வந்த ஜியோ, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து வருமானத்தை ஈட்ட துவங்கியுள்ள நிலையில் முகேஷ் அம்பானி மகிழ்ச்சியில் உச்சத்தில் உள்ளார்.
காரணம் அவரது மாஸ்ட் பிளான்..!!
ஜியோ
இந்திய டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய ஐியோ, இன்று வரை வாடிக்கையாளர் மத்தியில் சிறந்த மதிப்பைப் பெற்றுள்ளது. இந்தியாவில் சில இடங்களில் மட்டும் வாய்ஸ் கால் சரியான இணைப்பால் இருந்தாலும் இந்நிறுவனத்தின் டேட்டா சேவைகளைச் சிறப்பாக உள்ளது.
இதன் அடிப்படையில் பன்னாட்டு ஆய்வு நிறுவனங்களும் ஜியோ வர்த்தக வாய்ப்புகள் சிறப்பாக உள்ளது என்றும் இதன் வளர்ச்சியில் மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளனர்.
ஒரு வருட வருமானம்
இந்நிலையில் மூடிஸ் முதலீட்டாளர் சேவை நிறுவனம் ஜியோ நிறுவனத்தின் ஒரு வருடத்தின் வருமானம் எவ்வளவு இருக்கும் என ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளது.
7.2 கோடி வாடிக்கையாளர்கள்
தற்போது ஜியோ நிறுவனத்தில் இணைந்துள்ள 7.2 கோடி வாடிக்கையாளர்களை வைத்து மூடிஸ் முதலீட்டாளர் சேவை நிறுவனம் கணக்கிட்டுள்ளது.
ஜூலை 2017-மார்ச் 2018 வரையிலான காலத்தில் ஜியோவின் வாடிக்கையாளர்கள் 28 நாட்களுக்கு 303 ரூபாய் என்ற கட்டணத்தைத் தேர்ந்தடுத்தால் நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 21,300 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெறும்.
டிராய் உத்தரவு
மேலும் டிராய் அமைப்பு ஜியோவின் சம்மர் சர்பிரைஸ் ஆஃபரை உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டதன் மூலம் அடுத்த 2 மாதங்களுக்கு ஜியோ வருமானம் பெறும் இதன் மூலம் 4733.3 கோடி ரூபாயை கூடுதல் வருவாயாகப் பெறும்.
6 வருடம்
ஜியோவின் வாடிக்கையாளர் எண்ணிக்கை அடுத்த 6 வருடத்திற்கு உயரவில்லை என்றாலும் தற்போதைய நிலையில் அளிக்கப்படும் சேவை மற்றும் கட்டணத்தைக் கொண்டு 1,70,000 கோடி ரூபாயை பெற்று விடும்.
1.7 லட்சம் கோடி ரூபாய் என்பது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ நிறுவனத்தைத் துவங்குவதற்காக முதலீடு செய்யப்பட்ட தொகை.
மாஸ்ட் பிளான்
இவ்வளவு பெரிய தொகையை மிகவும் குறைந்த காலத்திற்குள்ளேயே எடுக்க மிகப்பெரிய அளவில் உதவி செய்தது இலவச திட்டங்கள் தான்.
ஜியோவின் இலவசங்கள் வாயிலாகத் தான் இந்நிறுவனத்தைத் துவங்கி வெறும் 6 மாதத்தில் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற முடிந்தது.
இந்த வாடிக்கையாளர் எண்ணிக்கை தான் தற்போது ஜியோவின் வருமானத்திற்கு முக்கியக் காரணம்.
100 மில்லியன் வாடிக்கையாளர்
ஜியோ நிறுவனம் பிப்ரவரி மாதத்தில் வெளியிட்ட அறிவிப்பில் மார்ச் 31ஆம் தேதிக்குள் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுவிடுவோம் என அறிவித்த நிலையில், மார்ச் மாதம் முடிந்த போதிலும் தனது வாடிக்கையாளர் எண்ணிக்கையை அறிவிக்கவில்லை.
பிரைம் கட்டணம்
ஜியோ வாடிக்கையாளர் பிரைம் வாடிக்கையாளர் மாறுவதற்கான கட்டணம் 99 ரூபாயை வசூல் செய்தது. இதன் மூலம் ஜியோ நிறுவனம் ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன்னரே தனது கல்லாவை திறந்தது குறிப்பிடத்தக்கது.