இந்திய டெலிகாம் சந்தையைப் புரட்டிபோட்ட ஜியோ நிறுவனம் கடந்த 6 மாதத்தில் சுமார் 22.5 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் டெலிகாம் வர்த்தகப் பிரிவான ஜியோ தனது இலவச ஆஃபர்களின் மூலம் அதிகளவிலான வாடிக்கையாளர்களைக் கவர்ந்தாலும் லாப அளவீடுகளில் முதலீட்டாளர்கள் மத்தியில் தலைகுனிவை சந்தித்துள்ளது என்று கூறினால் மிகையாகாது.
ஜியோ
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் கடந்த 10 வருடத்தில் புதிய வர்த்தகத் துறையில் இறங்க வேண்டும் தொடர்ந்து திட்டமிட்டு வருகிறது.
இதன் காரணமாக உருவானது தான் ரிலையன்ஸ் ரீடைல். பொதுவாக ரீடைல் துறையில் பல பிரிவுகள் அதில் பல போட்டிகள் இருக்கும், இதனால் இத்துறையில் ரிலையன்ஸ் ரீடைல் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் தொடர்ந்து சந்தையில் நிலைத்து வருகிறது. இதுவே பெரிய வெற்றியாகப் பார்க்ப்படுகிறது.
டெலிகாம்
இந்நிலையில் 3 வருடங்களுக்கு முன் ரிலையன்ஸ் குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகக் குழு திடீர் கூட்டத்தைக் கூட்டியது. இக்கூட்டத்தில் பல ஆலோசனைக்குப் பின் மிகப்பெரிய முதலீட்டில் இந்தியாவில் டெலிகாம் சேவையில் இறங்க ரிலையன்ஸ் நிர்வாகம் முடிவு செய்தது.
டெலிகாம் மற்றும் மொபைல்
திருபாய் ஆம்பானி இருக்கும்போதே ரிலையன்ஸ் குழுமம் இந்தியாவில் மிகக் குறைந்த விலை மொபைல் போனை அறிமுகம் செய்து தனது டெலிகாம் சேவைக்கு வித்திட்டது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 500 ரூபாய் சென்போன் அறிமுகம் தான் இன்று உலகளவில் இந்தியாவில் மொபைல் சந்தை 2வது இடத்தில் இருக்க முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
2 லட்சம் கோடி ரூபாய்
இந்நிலையில் பல ஆலோசனை மற்றும் ஆய்வுகளுக்குப் பின் ரிலையன்ஸ் டெலிகாம் சேவையில் முழுமையாக இறங்க 2 வருடங்களுக்கு முன்பு முடிவு செய்தது.
இதற்காக ரிலையன்ஸ் நிர்வார குழு ஒதுக்கப்பட்ட முதலீட்டுத் தொகை 1.5 லட்சம் கோடி ரூபாய். ஆனால் தற்போது இந்தத் தொகை 2 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து வர்த்தகச் சந்தையை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இலவசங்கள்
ஜியோ நிறுவன பணிகள் துவங்கப்படும் 3 வருடங்கள் முழுமையாக முடிந்த நிலையில் கடந்த வருடத்தை விடவும் தற்போது 2.5 மடங்கு அதிகளவிலான நஷ்டத்தை அடைந்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ.
ரூ.22.25 கோடி நஷ்டம்
மார்ச் 31ஆம் தேதி வரையிலான 6 மாத கால வர்த்தகத்தில் ரிலையன்ஸ் ஜியோ 22.5 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை அடைந்துள்ளது கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதன் அளவு 7.46 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்நிறுவனத்தின் வருமான அளவும் 2.25 கோடி ரூபாயில் இருந்து வெறும் 54 லட்ச ரூபாயாகச் சரிந்துள்ளது.
வாடிக்கையாளர்கள்
ஜியோவின் முழுமையான டெலிகாம் சேவை மக்களுக்கு அளிக்கப்பட்ட நாள் முதல் இந்நிறுவனம் வாய்ஸ் கால், இண்டர்நெட், மெசேஜ் என அனைத்தும் இலவசமாக அளிக்கப்பட்ட காரணத்தால் வருமானத்தைப் பெறவில்லை. ஆனால் குறைந்த காலகட்டத்தில் இந்நிறுவனம் சுமார் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
இலவசங்களுக்கு முற்றுப்புள்ளி
மார்ச் 31ஆம் தேதியுடன் தனது இலவசங்களை முடித்துக்கொண்ட ஜியோ, சந்தையில் இருக்கும் போட்டி நிறுவனங்களைச் சமாளிக்கத் தன்தானா தன் ஆஃபரை அறிவித்தது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்காலம்
இதன் மூலம் இனி வரும் மாதங்களில் ஜியோ நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப அளவுகள் மட்டும் அல்லாமல் வாடிக்கையாளர்களுக்கும் அதிகரிக்கும்.
இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும முதலீட்டாளர்கள் அதிகளவிலான லாபத்தை அடைவார்கள்.