பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் எனப் பழைய 500, 1000 ரூபாய் மீதான தடை மற்றும் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்த காரணத்தால் தற்போது இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
மத்திய அரசின் தொடர் நெருக்கடியால் இதுவரை அரசை ஏமாற்றி வந்த பல லட்சம் பேர் புதிதாக வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செலுத்தியுள்ளனர் என வருவாய் வரித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வருவாய் துறை
செவ்வாய்க்கிழமை வருவாய் துறை அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய முக்கியக் கூட்டத்தில், கடந்த வருடத்தை விடச் சுமார் 22 சதவீதம் பேர் அதிகமாக வருமான வரியைத் தாக்கல் செய்துள்ளதாக வருவாய் துறை தெரிவித்துள்ளது.
1% மக்கள் தொகை
மத்திய அரசின் பல முக்கிய நடவடிக்கைகளுக்குப் பின் தற்போது வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 1 சதவீதத்திற்கு அதிகமான அளவை எட்டியுள்ளது.
வருமான வரி
2016ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 5.28 கோடி பேர் மின்னணு முறையில் வருமான வரியைத் தாக்கல் செய்துள்ளனர். மேலும் பல லட்சம் பேர் பேப்பர் வாயிலாக வருமான வரியைத் தாக்கல் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மின்னணு முறையில் தாக்கல் செய்யப்பட்டோர் எண்ணிக்கை கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் சுமார் 22 சதவீதம் அதிகம்.
பணமதிப்பிழப்பு
மத்திய அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை வருமான வரித்துறை மிகவும் சிறப்பான முறையில் பயன்படுத்தியுள்ளது.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தடை செய்யப்பட்ட காலத்தில் மட்டும் சுமார் 18 லட்சம் பேர் அளவிற்கு அதிகமாக வங்கி கணக்கில் வைப்பு செய்யதுள்ளனர்.
வருமான அளவீடு
இவர்கள் வைப்புச் செய்யப்பட்ட தொகைக்கும் இவர்களின் வருமான வரி அறிக்கையின் தாக்கலும் ஒற்றுமை இல்லாமல் இருப்பதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
கொள்முதல்
மேலும் பணமதிப்பிழப்புச் செய்யப்பட்ட காலத்தில் அதிக மதிப்புடைய கார், பைக், வீடு, நிலம், என அனைத்துவிதமான பொருட்களையும் சொத்துக்களையும் தற்போது வருமான வரித்துறை ஆய்வு செய்து வருகிறது.
இதன் மூலம் அடுத்த வருடம் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என வருமான துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது.
ஆசாமிகள்
இதுவரை சரியான வருமானத்திற்கு வரி செலுத்தாமல் அரசை ஏமாற்றி வந்த ஆசாமிகளுக்கு வருமான வரி தொடர்ந்து நெருக்கடி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.