அன்று முதல் இன்று வரை மிகவும் பாதுகாப்பான வேலை, எல்லோராலும் மதிக்கப்படும் வேலைகளில் ஒன்றாக இருக்கிறது வங்கித் துறையில் இருக்கும் வேலைவாய்ப்புகள்.
இன்று இன்ஜினியரிங் பட்டதாரிகள் கூட வங்கித் துறை வேலை மற்றும் அதில் இருக்கும் பாதுகாப்பு ஆகியவற்றின் காரணமாக அதிகளவில் ஈர்க்கப்பட்ட இத்துறையில் சேர ஆர்வமாய் இருக்கிறார்கள்.
ஆனால் இப்போது நிலைமை மாறியுள்ளது.
வங்கித் துறை
வங்கித்துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர்களுக்குத் தடையற்ற சேவை வழங்க வேண்டும் என்ற வங்கியின் கண்ணோட்டம் வங்கிகளில் உயரிய பதவியாகப் பார்க்கப்படும் டெல்லர் பணி இனி தேவையற்றதாக மாறி வருகிறது.
இதுமட்டுமா என்றால் இன்னும் ஏராளமாக இருக்கிறது.
இந்திய சந்தை
கடந்த 20 வருடங்களில் இந்தியாவில் ஐடித் துறைக்கு அடுத்தாக அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிய ஒரு துறை என்றால் அது வங்கித்துறை தான்.
ஆனால் வங்கித்துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி, இத்துறையில் பல பணியிடங்கள் தேவையற்றதாக மாறியுள்ளது. இதனால் அளவிற்கு அதிகமாகவும், தேவையற்ற ஊழியர்களை வங்கிகள் தற்போது வெளியேற்றி வருகிறது.
சில முக்கியப் பணிகள்
வங்கிகளில் பாஸ்புக் அப்டேட் செய்வது, KYC படிவத்தை வாங்குவது, சம்பளம் போடுவது என அனைத்து பணிகளும் வங்கித்துறையில் தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி ஆகியவை முன்னணி பொதுத்துறை வங்கிகளைக் காட்டிலும் வாடிக்கையாளர்களுக்குக் கடன் அளித்தல், முதலீட்டுத் திட்டங்களை விற்பனை செய்தல் ஆகியவற்றையும் இணையத்தின் வாயிலாகவே செய்கிறது.
இதன் மூலம் வங்கிகளில் இப்பணிகளைச் செய்து வரும் ஊழியர்கள் நிர்வாகத்திற்குத் தற்போது தேவையில்லை.
75 சதவீத பணிகள்
இன்றைய நிலையில் தனியார் வங்கிகளில் சுமார் 75 சதவீத வங்கி சார்ந்த பணிகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் இணையத்தின் வாயிலாகச் செய்து முடிக்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளில் இதன் அளவில் மாறுபாடு இருக்கும்.
ஆயினும் முக்கியமான பணிகள் அனைத்தையும் டிஜிட்டல் முறையில் தற்போது மக்கள் செய்து வருகின்றனர்.
ஆக்சிஸ் வங்கி
இதுகுறித்து ஆக்சிஸ் வங்கி உயர் அதிகாரியான ராஜிவ் அனந்த கூறுகையில், தற்போது வங்கிகள் வாரியாக அல்லாமல் வங்கி கிளைகள் வாரியாக ஆட்டோமேஷன் பணிகள் அதிகரித்துள்ளது. தற்போது ஆக்சிஸ் வங்கி கிளைகளில் சுமார் 1500 பண வைப்பு செய்யும் இயந்திரம் உள்ள நிலையில் இங்கு டெல்லர் பணியிடம் தேவையற்ற ஒன்றாக உள்ளது.
இயந்திர
வெளிநாட்டு வங்கிகள் இயந்திரங்கள் வாயிலான வர்த்தக முறையை மிகவும் வேகமாக அமல்படுத்தி வரும் நிலையில் இந்தியாலில் இதன் வேகம் மிகவமு் குறைவு என்றே சொல்ல வேண்டும்.
ஆனால் அடுத்தச் சில வருடங்களில் இது கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் இந்தியாவில் வளர்ந்து நிற்கும்.
எச்டிஎப்சி வங்கி
சமீபத்தில் நாட்டின் முக்கிய வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி ஆட்டோமேஷனை அதிகளவில் கையில் எடுத்தக் காரணமாகச் சுமார் சதவீத வங்கி ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது.
இதேபணியை ஐசிஐசிஐ வங்கி 1 வருடத்திற்கு முன்பாகவே படிப்படியாக ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைத்து வருகிறது.
இதுவே மாற்றம்
தற்போதைய நிலையில் தனியார் வங்கிகளில் பணியில் சேரும் 50 சதவீதம் பேர் மேலாளர் பதவியில் அமர்த்தப்படுகின்றன. ஆனால் இவர்கள் வங்கிகளில் கேஷியர் பணி முதல் அனைத்தையும் செய்து வருகின்றனர்.
அடுத்தச் சில வருடங்களில் மேலாளர் பதவியில் இருக்கும் ஊழியர்கள் புதிய வாடிக்கையாளர்களைப் பிடிக்கும் பணி மட்டுமே இவர்களுக்கு இருக்கும் இதர பணிகள் அனைத்தும் ஆட்டோமேஷன் செய்யப்படும்.
புதிய வங்கிகள்
மேலும் இந்தியாவில் தற்போது பேமெண்ட் வங்கிகள், வேலெட் சேவைகள் அனைத்தும் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் வங்கிகளை மட்டுமே நம்பியிருக்கும் அவசியம் மிகப்பெரிய அளவில் குறையும்.
ஆகவே வங்கிகளும் இதற்கான பணிகளைச் செய்ய வேண்டும், இதன் முதல் படியே தற்போது கையில் எடுத்திருக்கும் ஆட்டோமேஷன்.
ஆட்டோமேஷன்
வங்கித்துறையில் தற்போது ஆட்டோமேஷன் என்ற சொல்லின் கீழ் ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றும் இதில் அடங்குகிறது. ஆதலால் ஊழியர்கள் தேவை வங்கி நிர்வாகத்திற்குக் குறைந்துகொண்டே தான் இருக்கும்.
ஐடி துறை
இந்தியாவில் தற்போது ஐடி துறை சந்திக்கும் பிரச்சனையை அடுத்தச் சில வருடத்தில் வங்கித்துறை சந்திக்கும்.
என்னதான் தீர்வு..?
ஐடி துறையில் தான் ஆட்குறைப்பு, பணிநீக்கம், என்று இருந்தால் தற்போது வங்கித்துறையிலும் பிரச்சனை வெடித்துள்ளது.
இதற்கு உண்மையான தீர்வு, எந்தத் துறையாக இருந்தாலும் நீங்கள், உங்களுடைய திறனை ஒவ்வொரு நாளும் மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் இல்லையென்றால் நிறுவனத்திற்குப் பிரச்சனை, வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற நிலைக்கு நீங்கள் உயர்ந்துவிட்டால் பணிநீக்கம் குறித்து எந்தக் கவலையும் பட வேண்டாம்.