இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாகத் திகழும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வீட்டுக் கடனுக்கான வட்டியை 0.10 சதவீதம் முதல் 0.25 சதவீதம் வரை குறைத்துள்ளது.
இதன் மூலம் நாட்டில் இருக்கும் பிற தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் வீட்டுக் கடனுக்கான வட்டியை குறைக்கும் நிலை உருவாகியுள்ளது.
பணமதிப்பிழப்பு
மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்தபோது ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறை மிகப்பெரிய அளவில் பாதித்தது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இத்துறையில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் இதனை ஊக்கப்படுத்த ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வீட்டுக் கடனுக்கான வட்டியை குறைத்துள்ளது.
வீட்டு கடன்
இந்தியாவில் வீட்டு கடன் வர்த்தகத்தில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தி வரும் எஸ்பிஐ கடந்த ஒரு வருடமாக எஸ்பிஐ வங்கி தனது எம்சிஎல்ஆர் விகிதத்தை 8 சதவீத்தில் இருந்து மாற்றாமல் வைத்திருந்த நிலையில், தற்போது கடனுக்கான வட்டி விகிதத்தை மட்டும் குறைத்துள்ளது.
ரூ.30 லட்சம் ரூபாய்
மாத சம்பளக்காரர்களுக்கு அளிக்கும் 30 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு 8.60 சதவீதம் வட்டி விதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இது 8.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
30 லட்சம் ரூபாய்க்கான வீட்டுக் கடனில் உள்ள வகைகள்
மாத சம்பளதார்கள் வீட்டுக் கடன் வாங்கும் போது பெண்களாக இருந்தால் 8.35 சதவீதமும் பிறருக்கு 8.40 சதவீதமும் வட்டி விகிதம் ஆகும். இதுவே சம்பளம் வாங்காமல் வணிகம் அல்லது பிற தொழில்கள் செய்பவர்களாக இருந்தால் பெண்களுக்கு 8.50 சதவீதமும், பிறருக்கு 8.55 சதவீத வட்டி விகிதத்திலும் வீட்டுக் கடன் அளிக்கப்படும்.
ரூ.75 லட்சம் வரையிலான கடன்
மேலும் 30 லட்சத்திற்கும் அதிகமான கடன் தொகைக்கு 0.10 சதவீதம் வட்டி குறைக்கப்பட்டு 8.50 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 75 லட்சம் ரூபாய்க்கு அதிகமான கடனுக்கு 8.60 சதவீதம் எனப் பழைய வட்டியை தொடர்ந்து வசூல் செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளது எஸ்பிஐ.
இப்புதிய வட்டி விகிதம் புதிதாகக் கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமே, ஏற்கனவே கடன் வாங்கியவர்களுக்கு ஒரு வருட லாக்இன் காலம் உள்ளது.
75 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனில் உள்ள வகைகள்
சம்பளம் வாங்கும் பெண்களாக இருந்தால் 8.55 சதவீத வட்டி விகிதமும், பிறருக்கு 8.60 சதவீத வட்டி விகிதத்திலும் வீட்டுக் கடன் வழங்கப்படும்.
ஒரு மாதம் மட்டுமே
எஸ்பிஐ வங்கி தனது ஐந்து கிளை வங்கிகளை இணைத்து ஒரு மாத காலத்தில் வீட்டுக் கடனுக்கான வட்டியை குறைத்துள்ளது.
சமீபத்தில் எஸ்பிஐ வங்கி தனது வைப்பு நிதிக்கான வட்டியை குறைந்தது.
வைப்பு நிதி
எஸ்பிஐ வங்கி தனது வைப்பு திட்டத்திற்கான வட்டியைக் குறைத்துள்ளது.
புதிய அமைப்பின் படி இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான முதலீடு திட்டங்களுக்கு எஸ்பிஐ வங்கி வட்டி விகிதத்தை 6.75 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாகக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
மூத்த குடிமக்கள் திட்டம்
இதே மூத்த குடிமக்களுக்கான வைப்பு நிதி திட்டத்தில் 7.25 சதவீதமாக இருந்த வட்டி விகிதத்தை 6.75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் சாதாரண வைப்பு நிதி திட்டத்தில் மூன்று வருடம் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதலீடு திட்டங்களுக்கு வட்டி விகிதம் 0.25 சதவீதமாகக் கூடுதலாகக் குறைக்கப்பட்டு 6.50 சதவீதமாக உள்ளது.