இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் பல்வேறு காரணங்களுக்காகச் சம்பள உயர்வின் அளவு ஒன்றை இலக்க அளவிலும், சில இடங்களில் சராசரி அளவை விடவும் குறைவாக உள்ளது. இதுவே தற்போதைய சந்தை நிலவரம்.
ஆனால் இந்த ஊழியர்களுக்கு மட்டும் இந்த வருடம் 25-30 சதவீதம் வரை சம்பள உயர்வும், அசரடிக்கும் அளவிற்கு மிட்-டர்ம் போனஸ் அளிக்கப்படுகிறது. யார் இவர்கள்..? என்ன காரணம்..?
அதிர்ஷ்டசாலிகள்
இந்தியாவில் விரி விதிப்புகளில் மிகப்பெரிய மாற்றத்தின் நடவடிக்கையாக ஜூலை 1ஆம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் செய்யப்பட உள்ளது.
இது professional சேவை நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த நிறுவனங்கள் சந்தையில் இருக்கும் பிற நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரியை எப்படிக் கையாளுவது, நிறுவனத்தில் கணக்கை ஜிஎஸ்டி படி மாற்றி அமைப்பது எப்படி, இதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிப்பது எப்படி என அனைத்து விதமான கேள்விகளுக்கும் உதவி அளிக்கும்.
மத்திய மாநில விதிகள்
மேலும் மத்திய மாநில ஜிஎஸ்டி விதிகளைக் கையாளுவது குறித்துப் போதிய புரிதல் நிறுவனங்கள் மத்தியில் இல்லாத காரணத்தால் இதுகுறித்து முழுமையாக அறிந்த அதிகாரிகளுக்கு இப்போது மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
வாய்ப்பு
இதன் காரணமாக நிறுவனத்தில் குவிந்துக்கிடக்கும் ஜிஎஸ்டி வரி சார்ந்த பணிகளைச் சரியாகவும், விரைவாகவும் முடிக்கப் பல கன்சல்டன்சி நிறுவனங்கள் புதிய பணியாளர்களையும், பிற பிரிவுகளில் இருக்கும் அதிகாரிகளையும் தங்களது ஜஎஸ்டி அணியில் சேர்த்து வருகிறது.
சம்பள உயர்வு
EY, PWC, டெல்லாய்ட், கேபிஎம்ஜி, கிரான்ட் திராடன் ஆகிய நிறுவனங்கள், ஜிஎஸ்டி அணியில் சேரும் ஊழியர்களுக்கு (நிறுவனத்திற்குள்ளே இருக்கும் ஊழியர்கள்) இந்த வருடம் சுமார் 25-30 சதவீதம் அளவிலான சம்பள உயர்வை அளித்துள்ளது.
இதேபோல் பெரும்பாலானோர் தங்களது மிட்-டர்ம் போனஸ் அளவு சுமார் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது எனச் சந்தை ஆய்வுகள் கூறுகிறது.
டெல்லாய்ட்
கடந்த 6-9 மாதங்களில் டெல்லாய்ட் நிறுவனத்தின் ஜிஎஸ்டி அணியில் சுமார் 30 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்களை இணைத்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் பல ஊழியர்களை வெளிநாடுகளில் இருந்தும் பணியில் அமர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2500 ஊழியர்கள்
இந்தியாவின் டாப் 4 தணிக்கை நிறுவனங்களில் ஜிஎஸ்டி அணியில் மட்டும் இதுவரை சுமார் 2,500 ஊழியர்கள் புதிதாகப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு நிறுவனங்களிலும் ஊழியர்கள் எண்ணிக்கை 30-35 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
அவசரம்
ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் நிறுவனங்களில் பணியை முடிக்க வேண்டும் என்று வாடிக்கையாளரிடம் சரி நிறுவனத்திலும் சரி அழுத்தம் அதிகமாக இருக்கும் காரணத்தால் ஜிஎஸ்டி அணி ஊழியர்கள் அதிக மணிநேரம் பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.