ஒரு தேர்வில் பெற்றுவிட்ட குறைந்த மதிப்பெண்களே ஒருவருடைய எஞ்சியுள்ள வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை. தேர்வுகளில் தோல்வி அடைந்த பலர் தங்களது பிற்கால வாழ்க்கையில் அனைவரும் திரும்பி பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்குச் சாதித்துக் காட்டியுள்ளதை வரலாறு பல நேரங்களில் நமக்குக் காட்டிச் சென்றுள்ளது.
இங்கே தோல்விகளோடு தொடங்கி வாழ்க்கையோடு கடுமையாகப் போராடி வெற்றி பெற்ற 8 இந்தியர்கள் பற்றிய ஊக்கமூட்டும் தகவல்களைப் பார்ப்போம்.
பி சி முஸ்தபா
கேரளாவைச் சேர்ந்த மிகவும் பின்தங்கிய பகுதியின் ஒரு படிப்பறிவில்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் பி சி முஸ்தபா. கல்வி குறித்த சரியான அணுகல்கள் இல்லாததால் 6 வது வகுப்பிலேயே தோல்வி அடைந்தார். ஒரு பண்ணையில் கூலித் தொழிலாளியாகப் பணி புரிந்தபோது அவர் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து மீண்டும் படிக்கத் துவங்கினார். தொடர்ந்து முயற்சி செய்து படித்து வந்த அவர் கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர்ந்து கல்வி கற்றார்.
முதுகலைப் பட்டத்துடன் கோடி கணக்கில் வருமானம்
இன்று 62 கோடி ரூபாய்கள் மதிப்பிலான உலகத் தரம் வாய்ந்த பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவு தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் தனது எம் பி ஏ படிப்பை முடித்த பிறகு பெங்களூருவில் வாடகைக்குப் பொருள்கள் தரும் கடையை நடத்தி வந்தார். தனது நடுநிலைப் பள்ளி கல்வியில் தோல்வியுற்ற அவர் இன்று இந்தியாவின் மிகச் சிறந்த வெற்றியாளராகத் திகழ்ந்து வருகிறார்.
அக்க்ஷய் குமார்
பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட தேசிய விருதுகளை வென்ற திரைப்பட நடிகரைப்பற்றி இன்று உலகமே அறியும். அவர் நட்சத்திரமாக ஜொலிக்க வருவதற்கு முன்னர் ஒரு தேர்வில் தொல்வியடைந்ததனால் தனது ரேங் கார்டை பெற்றோரிடம் காட்டவே பயந்து கொண்டிருந்த ஒரு குழந்தையாக இருந்தார். சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் தோல்விகளை எப்படி வெற்றிப்படிக்கட்டுகளாக மாற்றித் தனது கனவுகளை நிஜமாக்கினார் என்பதைச் சொல்லியுள்ளார்.
வீர் தாஸ்
இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி பெற்ற நகைச்சுவை நடிகர் வீர் தாஸ் நெட்ப்ளிக்ஸ் என்ற சொந்தமான இணையதளத்தை நடத்தி வருகிறார். தனது பள்ளி நாட்களில், ஒரு சராசரிக்கும் குறைவான மாணவனாக இருந்து தேர்வில் குறைந்த மதிப்பெண்களையே பெற்றார். இவர் தனது முகநூல் புத்தகத்தில் தனது மதிப்பெண் பட்டியலை வெளியிட்டுப் பின்வருமாறு கூறியுள்ளார்.
வாழ்க்கையில் மக்கள் படிப்பை பார்க்க மாட்டார்கள்
"உங்களுடைய தேர்வு முடிவுகள் சிறப்பானதாக அமையலாம், அல்லது அவ்வாறு இல்லாமலிருக்கலாம். ஆனால் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளின் இறுதியிலும் மக்கள் உங்களை யாராக இருக்கின்றீர்கள் என்றுதான் பார்ப்பார்கள், எப்படி வளர்ந்தீர்கள் எப்படிச் செய்தீர்கள் என்று பார்க்க மாட்டார்கள்."
சந்தீப் மகேஸ்வரி
சந்தீப் மகேஸ்வரி இன்று இந்தியாவில் மிகச் சிறந்த தொழில் வல்லுநராகப் பரிமளிக்கிறார். ஆனால் அதற்கெல்லாம் நீண்ட நாள்கள் முன்னதாக அவர் தனது கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர். இருந்தாலும் சாதித்துக் காட்டியவர். கிரோரி மால் காலேஜ் படிப்பை பாதியில் நிறுத்திய இவர் யாரையும் சார்ந்து இருக்காமல் ஒரு புகைப்படக்காரராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிப் பணிபுரிந்து தனது செலவுகளுக்குப் பணத்தை ஈட்டி வந்தார். இமேஜஸ் பஜார் என்ற இணையதளத்தைத் தொடங்கி இந்தியாவின் மிகப்பெரிய புகைப்படங்களின் தொகுப்பைப் பராமரித்து வருகிறார்.
பிஸ்வா கல்யான் ரத்
தளர்வுறச் செய்யும் தனது தோல்விகளிலிருந்து மீண்டு வெளியேறி இன்று நகைச்சுவையாளராகவும், யு ட்யூப் இணையதளத்தில் இந்தியாவின் மிகப்பிரபலமான காணொளிகளைத் தானே தயாரித்து வெளியிட்டு வருபவராகத் திகழ்கிறார். அவர் தனது முகநூல் பக்கத்தில் தான் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஒரு சராசரி மாணவன் என்று பதிவிட்டுள்ளார்.
அவரோடு சேர்ந்து படித்தவர்கள் பட்டம் பெற்ற பிறகு வேலை தேடி சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் போது மூன்றே மாதங்களில் இவருக்கு ஒரு வேலைக் கிடைத்தது. " என்னுடைய தோல்விகளால் நான் தளர்வுற்றிருக்கும்போது எனக்கு எட்டு கிலோ வரை எடை குறைவு ஏற்பட்டது. நான் மெலிந்து போனேன். என்னுடைய நண்பர்களின் உதவியினால் நான் மீண்டு வந்தேன்."
கைலாஷ் கட்கர்
கைலாஷ் கட்கர் மகராஷ்ட்ராவின் ஒரு குக்கிராமத்தில் எளிமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். தனது குடும்பச் சூழ்நிலைகள் காரணமாக 10 ஆம் வகுப்புப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர். குறைந்தபட்ச கல்வி இன்றி, நல்ல வேலை இன்றிச் சுமையோடு கூடிய வாழ்க்கையாக இருந்தது. சிறு சிறு கருவிகளைக் கொண்டு வேலைகள் செய்யப் பழகியிருந்த இவர் ஒரு சிறிய ரேடியோ மற்றும் கேல்குலேடர் கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.
வேலையைக் கற்றுக்கொள்வது மட்டுமல்லாது தொழில், வியாபாரம் செய்வது தொடர்பான உத்திகளையும் கற்றுக்கொண்டு மற்றவர்களைப் பயிற்றுவிக்கிற அளவிற்குத் திறமையுள்ளவராக மாறினார். விரைவில் கம்ப்யூட்டர் தொடர்பான கல்வியிலும் தேர்ச்சி பெற்று நவீன தொழில்நுட்பத்திலும் கை தேர்ந்தவரானார். பின்னாட்களில் அவர் ஒரு கம்ப்யூட்டர் பழுது பார்க்கும் நிலையம் தொடங்கி நடத்தி வந்தார். இன்று அவர் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள குவிக் ஹீல் டெக்னாலஜிஸ் என்ற வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் நடத்தி ஒரு சாதனையாளராக உள்ளார்.
பிரேம் கணபதி
ஒரு தேர்ந்த இந்திய தொழில் வல்லுநராகவும், வியாபாரியாகவும் விளங்கிய பிரேம் கணபதி புகழ் பெற்ற "தோசா பிளாசா" என்ற உணவுக்கூடங்களை உலகெங்கிலும் தொடங்கிப் பசிப்பிணி போக்கி வருகிறார். தமிழ்நாட்டின் மிகவும் ஏழைக்குடும்பத்தில் ஏழு குழந்தைகளில் ஒருவராக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்.
10 ம் வகுப்பு முடித்த இவர் பிழைப்பு தேடி மும்பை சென்றார். இவர் மேல் இரக்கப்பட்டு ஒரு தமிழ்க்குடும்பம் இவருக்கு ஒரு பேக்கரியில் வேலை வாங்கிக் கொடுத்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தோசை விற்கும் சொந்த தொழிலைத் தொடங்கினார். இப்போது நியூசிலாந்து, ஓமான் ஐக்கிய அரபு நாடுகளில் தோசா பிளாசா கடைகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
சுபாஷ் சந்திரா
ஊடக உலகின் முடிசூடா சக்கரவர்த்தியாக விளங்கும் இவரும் தனது பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்தான். ஹரியானா மாநிலத்தின் ஹிஸ்ஸார் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தில் 10 ம் வகுப்புப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு வேலைக்குச் சென்றார். ஆரம்பக்காலத்தில் அவரது குடும்ப வியாபாரமான அரிசி கொள்முதல் செய்து இந்திய உணவு கழகத்திற்கு விற்பதனை மேற்கொண்டார்.
பின்னாளில் இந்தியாவின் பிரசித்திபெற்ற பெற்ற ஜீ டெலிவிஷன் நிறுவனத்தை உருவாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு. இன்று செய்திகள், ஊடகம், டெலிவிஷன் , தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்கும் எஸ்ஸல் குரூப் என்ற நிறுவனத்தின் சேர்மன் ஆகப் பரிமளிக்கிறார்.
கல்பனா சரோஜ்
மகாராஷ்டிராவின் ரோபெர்கேடா கிராமத்தில் பிறந்த கல்பனா சரோஜ் ன் வாழ்க்கை மிகச் சிறந்த வெற்றிகளுக்கு உரியதாக இருந்தது. 12 வயதில் பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்ட இவர் திருமண வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி 16 வயதில் தற்கொலைக்கு முயன்ற இவரை இவரது மாமா பொறுப்பேற்றுக்கொண்டு பராமரித்து வந்தார். ஏழை ஆதி திராவிடப் பெண்களுக்கான வங்கிக் கடன் பெற்றுச் சொந்தமாக ஒரு தையல் தொழில் தொடங்கினார். அதில் வெற்றிகளைப் பெற்ற பிறகு, வீட்டிற்குத் தேவையான மரச் சாமான்கள் விற்கும் தொழிலை தொடங்கினார்.
விரைவிலேயே காமானி ட்யூப்ஸ் கம்பனியின் சொத்துக்களை வாங்கி நஷ்டத்தில் இயங்கி வந்த நிறுவனத்தை லாபம் கொழிக்கும் நிறுவனமாக மாற்றினார். இன்று ஒரு கோடீஸ்வரியாக உலகப் பணக்காரர்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளார்.
காமராஜர்
காமராஜரின் சிறு வயதிலேயே அவரது பள்ளிப் படிப்பு முடிந்து போனதால் ஆறாம் வகுப்புடன் தனது படிப்பை முடித்துக் கொண்டு 16 வயதில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மதிய உணவுத் திட்டம், நீர்ப்பாசனத் திட்டங்கள், தொழிற்துறைத் திட்டங்கள் எனப் பலவற்றைச் செயல்படுத்திக் காட்டினார். தமிழகத்தின் முதல்வராக 9 ஆண்டுகள் செயல்பட்டு வந்த காமராஜர் அட்சி இன்று வரை நமக்கு இல்லையே என்று ஏங்குபவர்கள் பலர்.
மு கருணாநிதி
மு. கருணாநிதி தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அவர் காலத்தில் தமிழகத்திலும் அவருடைய கட்சியிலேயேயும் கூட இருந்த எண்ணற்ற படித்தவர்களைவிடத் தனக்கென்று தனி ஆதரவாளர்கள் பட்டாளத்தையே தன்னுடைய பேச்சு, எழுத்து வன்மையால் உருவாக்கி வளர்ந்தவர் கருணாநிதி.
கருணாநிதி தன்னுடைய 14 வது வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு, அரசியலில் ஈடுபடலானார்.தமிழகத்தில் இட ஒதுக்கீடு என்ற சமூக நீதித் திட்டம் வேரூன்றவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் அரசியல் அதிகாரம் பெறவும் அவருடைய ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் முக்கியக் காரணமாக அமைந்தன. ஐந்து முறை தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற இவர் இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர் ஆவார்.
ரஜினிகாந்த்
மத்திய அரசுக் கல்வி நிறுவனமான சிபிஎஸ்ஈ பாடத் திட்டத்தில் தனது பள்ளி படிப்பை முடித்த ரஜினிகாந்த் பெங்களூரு மற்றும் சென்னையில் நடத்துநர், கூலி மற்றும் தச்சர் போன்ற பல பணிகளைச் செய்துள்ளார். ஆனால் இன்று இவர் தான் தமிழர்கள் போற்றும், உலகளவில் பிரபலமான ஒரு திரைப்படத்தில் நடிக்கக் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர் ஆவர்.
வயதான பிறகும் இன்றளவும் நடித்தால் ஹீரோ தான் என்ற ஒரே குறிக்கோள் உடன் நடித்து வரும் இவருடைய தன்னம்பிக்கையும் பாராட்டுக்குரியது.
வாழ்க்கையை நிர்ணயிப்பது மதிப்பெண்களா? விடாமுயற்சியா?
சுய ஆர்வமும், விடாப்பிடியாக முன்னேற வேண்டுமென்ற எண்ணமும் இருந்தால் மதிப்பெண்களால் கொடுக்க முடியாததை வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் என்பது இவர்களின் வளர்ச்சி நமக்குக் கற்றுத் தரும் பாடம்.