இந்திய வங்கிகளில் வராக்கடன் அளவு ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைக் குறைக்கவில்லை என்றால் பல வங்கிகள் திவாலாகிவிடும் சூழ்நிலையில் ரிசர்வ் வங்கியுடன் சேர்ந்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதன் படி வராக் கடன் பட்டியில் அதிகம் பாதிப்பில் இருக்கும் சுமார் 50 நிறுவனங்களைத் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளது மத்திய அரசு.
50 நிறுவனங்கள்
பொதுவாகத் தனிநபருக்கு அளிக்கப்படும் கடனுக்கு வங்கி தரப்புகள் அதிரடியாக இறங்கி கடனை வசூல் செய்துவிடும். ஆனால் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்காகப் பெரிய நிறுவனங்கள் வாங்கப்படும் கடனை வசூலிப்பதில் மெத்தனம் காட்டுகிறது வங்கி தரப்பு.
இதன் காரணமாகவே தற்போது பொதுத்துறை வங்கிகளில் வராக் கடன் அளவு தலைக்கு மேல் உயர்ந்துள்ளது. இதன் அளவைக் குறைக்கவே தற்போது ரிசர்வ் வங்கியுடன் இணைந்து மத்திய அரசு 50 நிறுவனங்களுக்குக் கட்டம்கட்டியுள்ளது.
எதற்காக இந்த நடவடிக்கை..?
அதிகப் பாதிப்பு அதாவது கடன் நிலுவை அதிகமாகவும் பல மாதங்களாக வட்டி மற்றும் அசலை செலுத்தாத நிறுவனங்களைத் தீவர கண்காணிப்பிலும், தொடர்ந்து கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுக்கவும் இந்த 50 நிறுவனங்களைப் பட்டியலிட்டுள்ளது மத்திய அரசு.
5 லட்சம் கோடி
தற்போது மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியும் இணைந்து பட்டியலிட்டுள்ள இந்த 50 நிறுவனங்களின் மொத்த கடன் தொகையின் அளவு 4-5 லட்சம் கோடி ரூபாய். இது கடந்த டிசம்பர் 2016இன் நிலவரம்.
2017 ஏப்ரல் மாதத்தில் இதன் அளவு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் வரை உயர்ந்து தற்போது 6 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
வராக் கடன்
இந்நிலையில் தற்போது பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் கடன்கள் அதிக ஆபத்து இருந்தாலும் இதுவரை முழுமையாக வராக் கடன் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இதில் பட்டியலிடப்பட்டுள்ள கணக்குகள் அனைத்தும் 90 நாட்களுக்கு எவ்விதமான வட்டி மற்றும் அசலை செலுத்தாத ரிசர்வ் வங்கியின் SMA பிரிவில் முதல் மற்றும் இரண்டாம் தர பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
எவ்வளவு கடன்
இப்பட்டியலில் யார்யார் எவ்வளவு கடன் வாங்கியுள்ளனர் என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா என்ன..?
50 நிறுவனங்கள் அடங்கிய இப்பட்டியலில் அதிகம் கடன் வாங்கிய நிறுவனங்கள் மற்றும் அதன் நிலுவை தொகையைக் குறித்த தகவல்கள் உங்களுக்காக.
90,000 கோடி ரூபாய்
பூஷன் ஸ்டீல் நிறுவனம் 90,000 கோடி ரூபாய் அளவிற்கு இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் கடனை வாங்கியுள்ளது. இதில் கடந்த 3 மாதங்களாக அதாவது 90 நாட்களாக எவ்விதமான வட்டியும் அசலையும் செலுத்தவில்லை.
வீடியோகான்
மொபைல் மற்றும் மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் இருக்கும் வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 58,000 கோடி ரூபாய் கடன் நிலுவையில் உள்ளது.
ஜேபி குரூப்
சிமெண்ட் தயாரிப்பு முதல் பல தொழில்களைச் செய்து வரும் ஜேபி குரூப் சுமார் 55,000 கோடி ரூபாய் கடன் நிலுவையில் உள்ளது.
எஸ்ஸார் லிமிடெட்
உற்பத்தி, சேவை, ரீடைல் எனப் பல துறைகளில் இந்தியாவில் வர்த்தகம் செய்து வரும் எஸ்ஸார் லிமிடெட் நிறுவனம் பொதுத்துறை வங்கிகளில் சுமார் 50,000 ரூபாய் மதிப்பிலான கடன் தொகை நிலுவையில் உள்ளது.
ஜின்டால் குரூப்
ஸ்டீல் முதல் பல பொருட்களை உற்பத்தி செய்து வரும் ஜின்டால் குரூப் 38,000 கோடி ரூபாய் கடன் வாங்கி 90 நாட்களாகத் திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறது.
அலோக் இண்டஸ்ட்ரீஸ்
இந்தியாவின் முன்னணி டெக்ஸ்டைல் நிறுவனமான அலோக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பொதுத்துறை வங்கிகளில் சுமார் 25,000 கோடி ரூபாய் அளவிலான தொகையைக் கடன் வாங்கியுள்ளது.
லான்கோ நிறுவனம்
கட்டுமானம், பவர், ரியல் எஸ்டேட் எனப் பல துறைகளில் இயங்கி வரும் லான்கோ நிறுவனம் 19,000 கோடி ரூபாய் அளவிலான தொகையை நிலுவையில் வைத்துள்ளது.
பிற முக்கிய நிறுவனங்கள்
மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பட்டியலிட்டுள்ள 50 நிறுவனங்களில் ஏபிஜி ஷிப்யார்டு ரூ.15,000 கோடி, புன்ஞ் லாய்டு ரூ.14,000 கோடி, எலக்ட்ரோஸ்டீல் ரூ.14,000 கோடி, அபான் ஹோல்டிங்க்ஸ் ரூ.13,000 கோடி, பிராயகராஜ் பவர் ரூ.12,000 கோடி, மோடெட் இஸ்பெட் ரூ.12,000 கோடி, ஏரா குரூப் ரூ.7,000 கோடி எனக் கடன் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.