இந்திய டெலிகாம் நிறுவனங்கள் பல பிரச்சனைகளைச் சந்தித்து வரும் நிலையில் அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பல புதிய பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது.
இந்நிலையில் நாளை ஆர்காம் நிறுவனத்தின் 4வது காலாண்டு முடிவுகளை வெளியிடும் கூட்டத்தில் நடக்க உள்ளது. இதில் அனில் அம்பானி எதைப்பற்றிப் பேசப்போகிறார்..?!
முதல் முறையாக நஷ்டம்
ஆர்காம் நிறுவனம் துவங்கிய நாள் முதல் ஒருமுறை கூட நஷ்டத்தைச் சந்திக்காத நிலையில் தற்போது முதல் முறையாக வருடாந்திர வர்த்தகத்தில் நஷ்டத்தைப் பெற்றுள்ளது.
கடந்த வருடம் 90 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்ற நிலையில், 2017ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில் 966 கோடி ரூபாய் நஷ்டத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையை மாற்றி மீண்டு லாபத்திற்குக் கொண்டு வரும் வகையில் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளிப்பார் அனில் அம்பானி
கடன் நிலுவை
அனில் அம்பானி ஆர்காம் நிறுவனத்தின் பெயரில் வாங்கிய கடன் தொகையான 44,000 கோடி ரூபாயைப் பல மாதங்களாகச் செலுத்தாத நிலையில் இவருக்குக் கடன் கொடுத்த 10 வங்கிகள் நெருக்கடி கொடுக்கத் துவங்கியது.
இதன் எதிரொலியாகக் கேர் மற்றும் ICRA அமைப்புகள் இந்நிறுவனத்தின் முதலீட்டு பத்திரத்தின் மதிப்பீட்டையும் குறைத்துள்ளது. இந்நிலையில் கூடிய விரைவில் தவணையைச் செலுத்துவதாக வங்கிகளுக்கு அனில் அம்பானி நம்பிக்கை அளித்துள்ளார்.
இதனால் வருடாந்திர வர்த்தக அறிக்கை கூட்டத்தில் வங்கிகளுக்குக் கடனை திருப்பி அளிப்பது குறித்த அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணன் தான் காரணம்
ஆர்காம் நிறுவனத்தின் இந்த மோசமான வர்த்தக நிலைக்கு முக்கியக் காரணம் முகேஷ் அம்பானியின் ஜியோவும் அதன் மலிவான கட்டண சேவைகளும் தான் எனக் கூறவில்லை என்றாலும் ஜியோ குறித்துக் கண்டிப்பாகப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முகேஷ் அம்பானி, அனில் அம்பானியின் அண்ணன்
7.5 லட்சம் கோடி
டெலிகாம் நிறுவனங்கள் 7.5 லட்சம் கோடி என்ற மிகப்பெரிய அளவிலான கடனில் மதிக்கிறது. இது இத்துறைக்கும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் சரியானது இல்லை.
இந்நிலையில் டெலிகாம் துறையை முறையாகச் சீர்படுத்தவும் அதனை வலிமையாக்கவும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்த அறிவிப்புகளும் முக்கியமாக எதிர்பார்க்கப்படுகிறது.