இந்தியாவில் பணிநீக்கம் என்பது ஐடி துறையில் மட்டுமில்லாது தற்போது வங்கி, டெலிகாம், பிபிஓ, ஈகாமர்ஸ், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எனப் பல துறைகளில் நிகழ்ந்து வருகிறது. இதுகுறித்துச் செய்திகளை நம்மைத் தினந்தோறும் அச்சுறுத்தினாலும், தொடர்ந்து நம்பிக்கையும் கடினமாக உழைத்து, இருக்கும் வேலையைத் தக்கவைத்துக்கொள்கிறோம்.
ஆனால் வேலையை இழந்தவர்கள் என்ன செய்யவேண்டும்..? எப்படி மீண்டும் வேலையில் சேர வேண்டும்..? எதைக் கவனிக்க வேண்டும்..? வேலை இழந்த பின்பு வரும் பிரச்சனைகளைச் சமாளிப்பது எப்படி.? என்பது குறித்து யாரும் பேசுவதில்லை.
இதனால் தமிழ் குட்ரிட்டன்ஸ் இதுகுறித்துப் பேச முடிவு செய்துள்ளது.
யார் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள்..?
ஐடி துறையோ, வங்கி, டெலிகாம், ஈகாமர்ஸ் என எந்தத் துறையாக இருந்தாலும் தற்போது பணிநீக்கம் செய்யப்படுபவர்கள் அனைவரும் திறனற்றவர்கள் இல்லை என்பதை முதல் புரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய கணக்கில் வருபவர்கள் மிகவும் குறைவு.
டார்கெட்..
நிறுவனத்திற்கு அதிகம் செலவு வைக்கும் (அதிகச் சம்பளம்), வருவாய் அளிக்காத வர்த்தகப் பிரிவு, நஷ்டத்தில் இருக்கும் வர்த்தகம் ஆகியவற்றைக் குறிவைத்தே ஊழியர்களைத் தற்போது அதிகளவில் வெளியேற்றப்படுகிறார்கள்.
என்ன செய்ய வேண்டும்..?
இப்படித் தன்மீது குற்றம், குறை இல்லாமல் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் ஊழியர்கள் எண்ணிக்கை தான் தற்போது மிகவும் அதிகம். இதனை யாராலும் மறுக்க முடியாது.
பணிநீக்கம் செய்யப்பட்டும், நிறுவனத்தில் இருந்து வெளியேறிய ஊழியர்கள் மீண்டும் பணிக்கு சேரவும், இந்தச் சந்தர்ப்பத்தை எப்படிப் பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்பதே இப்போது பார்க்கப்போகிறோம். இது பல ஊழியர்களுக்குப் பயன்படும் என நம்புகிறோம்.
புதிய திறன்
பணியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஊழியர்கள், சந்தைக்குத் தற்போது தேவையான புதிய திறனைக் கற்றுக்கொண்டு போட்டியில் அனைவருக்கும் ஒரு பிடிக்கு மேலே சென்று புதிய வேலைவாய்ப்பைப் பெறலாம்.
இந்த இடைப்பட்ட காலம் புதிய திறனை முழுமையான கவனத்துடன் படி பெரிய அளவில் உதவும்.
நிதி பிரச்சனை
பணிநீக்கம் செய்யப்பட்ட அனைவரும் முதலில் சந்திப்பது நிதி சார்ந்த பிரச்சனைகள் தான். ஆகவே நீங்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியராக இருந்தால் உங்கள் கையில் இருக்கும் பணத்தை முதலில் கணக்கிட்டு அதற்கு ஏற்ப செலவுகளைச் செய்யுங்கள். இல்லையெனில் நிதி பிரச்சனையில் நீங்கள் முழுமையான மனதுடன் வேலையைத் தேட முடியாது.
இதனால் 10, 15 நாட்களில் கிடைக்க வேண்டிய வேலை கூடச் சில மாதங்கள் வரை காலதாமதம் ஆகும்.
ஆய்வு
உங்களை எதனால் நிர்வாகம் பணிநீக்கம் செய்தது என்பதை ஆய்வு செய்து அதில் ஏதேனும் குற்றத்தை கண்டால், அதனை உடனடியாகச் சரி செய்யவும்.
மேலும் புதிய திறனைக் கற்றுக்கொண்டதை எப்படி மெருகேற்ற வேண்டும் என்பதையும் திட்டமிடுங்கள்.
இலக்கு..
பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள், தங்களின் இலக்கை மிகத் தொலைவாக வைத்துக்கொள்வதை விடச் சற்று அருகில் வைத்துக்கொண்டு வேலை, நிதி, மன உளைச்சல் ஆகிய அனைத்துப் பிரச்சனைகளில் இருந்தும் வெளியேறலாம்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் ஐடி ஊழியர்கள் மைக்ரோசாப்ட், பேஸ்புக், கூகிள் நிறுவனங்களில் தான் வேலைக்குச் சேர வேண்டும் என்ற இலக்கில் இருந்து சற்று குறைந்து தற்போதைய நிலையில் அதிகச் சம்பளம் கிடைக்கும் நல்ல நிறுவனத்தில் சேர்ந்தாலே போதும் என்ற எண்ணத்தைக் கொள்ளுங்கள்.
புதிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த பின் உங்கள் இலக்கை நோக்கிய பயணிக்கவும்.
தொடர்புகள் மிகவும் முக்கியம்..
ஒரு நிறுவனத்தில் இருந்து வெளியேறும் போது நல்ல பெயருடன் வெளியேறுங்கள். இதன் பின் ரெஸ்யூம் முதல் லிங்கிடு இன் ப்ரொபைல் வரை அனைத்தையும் புதுப்பித்துக்கொள்ளுங்கள்.
இந்தப் பணிகள் அனைத்தும் முடிந்த பின்பு உங்களுக்குத் தெரிந்த அனைத்துத் தொடர்புகளையும் கொண்டு ஒரு சிறப்பான வலையை அமைத்து புதிய வேலைவாய்ப்பைத் தேடுங்கள். இது பெரிய பெரிய நிறுவனங்களுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.
உடல் நலம்
பணியின் காரணமாகப் பல தங்களது உடல்நலத்தைச் சரியாகக் கவனித்துக்கொள்வதில்லை. இதனால் இந்த இடைப்பட்ட காலத்தில் உங்களின் உடல் நலத்தைச் சிறப்பாக்கும் வகையில் யோகா,ஜிம், நடனம், சும்பா ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.