ஐடி நிறுவனங்களும், ஊழியர்களும் இத்துறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள், ஊழியர்களின் திடீர் பணிநீக்கம் உட்பட அனைத்திற்கும் தீர்வு காணும் வகையில் புதிய செயல் திட்டத்தைக் கொண்டு வர உள்ளதாகக் கர்நாடக மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியாங் கார்கே தெரிவித்துள்ளார்.
ஆனால் இவை அனைத்தும் ஐடி நிறுவன தலைவர்கள் மற்றும் இத்துறை ஊழியர்களிடம் ஆலோசனை செய்யதபின்பே இதற்கான திட்டம் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
முதலில் இதுதான்..
மேலும் பிரியாங் கார்கே பேசுகையில் முதலில் ஐடி நிறுவனங்களின் அப்ரைசல் விதிமுறைகள் மற்றும் வடிவத்தை ஆய்வு செய்ய முடிவு எடுத்துள்ளோம். இதன் பின்னர்ப் படிப்படியாக அடுத்தக் கட்டங்களுக்குச் செல்ல உள்ளோம் எனத் தெரிவித்தார்.
செயல் திட்டம்..
இந்தப் பிரச்சனைகளுக்கான தீர்வை ஒரு தரப்பை மட்டும் கேட்டு முடிவு எடுக்க முடியாது, ஒட்டுமொத்த துறையில் இருக்கும் பிரச்சனைகளைக் கண்டறிந்து தெளிவான செயல் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும். நான் இத்துறையில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு மட்டும் பொறுப்பு அல்ல, வேலைவாய்ப்பைப் பாதுகாப்பதற்கும் பொறுப்பு உண்டு என் கூறினார் கார்கே.
ஊழியர்கள்
ஐடி ஊழியர்கள் கர்நாடகாவில் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களிலும் ஐடி நிறுவனங்களின் அப்ரைசல் வெளிப்படையாக இல்லை, இது ஊழியர்களின் செயல்திறனுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது எனக் கருத்து நிலவி வருகிறது.
தமிழ்நாட்டில் பல ஐடி ஊழியர்கள் FITE அமைப்பின் வாயிலாக நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளனர்.
குற்றச்சாட்டு
தற்போதைய நிலையில் ஐடி நிறுவனங்கள் செயல்திறன் அடிப்படையில் தான் ஊழியர்கள் வெளியேற்றுகிறது என்று கூறுவது அனைத்தும் பொய், அதிகம் சம்பளம் வாங்கும் ஊழியர்களை மட்டுமே வெளியேற்றி வருகிறார்கள்.
அதன் மூலம் நிறுவனம் அதிகளவிலான செலவுகளைக் குறைத்து லாபத்தில் கணக்கு காட்ட முடியும்.
FITE அமைப்பு
சமீபத்தில் FITE அமைப்பு உறுப்பினர்கள் கர்நாடக மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியாங் கார்கே அவர்களைச் சந்தித்த போது, இத்துறையில் ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும், பணிநீக்கம் உட்பட அனைத்தையும் விரைவில் சட்ட ரீதியாகத் தீர்க்க உள்ளதாக அவர் உறுதி அளித்தார்.
தமிழ்நாட்டில்
ஐடி ஊழியர்களின் பணிநீக்கம் தமிழ்நாட்டில் பல ஐடி நிறுவனங்கள் 10, 15 வருடங்கள் அனுபவம் கொண்ட ஊழியர்களை வெளியேற்றியது நாம் பார்த்தோம்.
ஆனால் இதுகுறித்துத் தமிழக அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தகவல் தொழில்நுட்ப அமைச்சர்
தமிழ்நாட்டில் நிலவும் பிரச்சனைக்குத் தீர்வு காண தமிழகத் தகவல் தொழில்நுட்ப அமைர்ச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் தனிப்பட்ட முறையில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விரைவில் இதற்குத் தீர்வு காணப்பட்டால் இந்தியாவில் 150 பில்லியன் டாலர் வர்த்தகச் சந்தை கொண்ட ஐடி துறைக்கு அதிகளவிலான வர்த்தகப் பங்கை அளிக்கும் தமிழ்நாட்டின் வரி வருமானம் காப்பாற்றப்படும்.