ஒருசில பெரிய வியாபாரிகளும், பண மோசடியில் ஈடுபடும் நபர்களும், தீவிரவாதக் குழுக்களும் பயன்படுத்தும் பிட்காயின் என்ற மெய்நிகர் செலாவணி குறித்து மேலும் சில தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள் மக்களே. வருங்காலத்தில் எச்சரிக்கையாக இருக்க இவை உதவும்.
ஒரு புதிய உயர் தொழில்நுட்ப வடிவிலான ஹவாலா பண பரிமாற்றம் இப்போது காணப்படுகிறது : மின்னணு பணம், பிட்காயின் ஆகியவையே இவை. இந்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இவ்வகை பரிமாற்றங்கள் வெள்ளம்போல் நடந்து வருகின்றன.
ஹவாலா என்பது பாரம்பரிய வங்கி நடைமுறைகளுக்கு இணையான ஒரு அமைப்பின் மூலம், பணம் மற்றும் சொத்துக்களை பரிமாற்றம் செய்தல் ஆகும். இது பணமோசடிக்கான எளிய வழி என்பதால் இந்தியாவில் இது தடை செய்யப்பட்டுள்ளது.
பிட்காயின்
பிட்காயின்கள் கருத்தியலான ஒரு மெய்நிகர் செலாவணி முறையாகும். இவை கணினி மென்பொருள், சந்தை மதிப்பின் அடிப்படையிலான குறியீடுகள் சார்ந்த கருத்துரு மற்றும் சில சிக்கலான கணித முறைகளைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது.
எப்படி பிட்காயின் உருவாகியது?
சதோஷி நகமொடோ என்ற ஜப்பானியரின் ஒரு 2008 ம் ஆண்டின் அக்டோபர் மாத ஆய்வறிக்கையின் அடிப்படையில் இந்தச் சித்தாந்தம் உருவாகியது. இம்முறை மூலம் பொருள்கள் வாங்குவது மிகுந்த பாதுகாப்பானது, அதே நேரத்தில் ஹேக் செய்ய முடியாதது. ஒரு பண பரிமாற்றம் நடைபெறுவது உணரப்படும். ஆனால் யார், யாருக்கு அனுப்பினார்கள் என்பது குறித்து அறிந்து கொள்ள முடியாது. இத்தகைய யாரும் அறிந்துகொள்ளமுடியாத கணினி வழி சிக்கலான பாதுகாப்பு அம்சங்கள்தான் பிட்காயின் பயன்படுத்துவோரிடையே நடைமுறையிலிருந்து வருகிறது.
அமெரிக்கா
அமெரிக்க கருவூலத்தின் படி, பிட்காயின் என்பது பரவலாக்கப்பட்ட மெய்நிகர் செலாவணி ஆகும். நடைபெறும் பரிமாற்றங்கள் சீனா, ஹாங்காங் மற்றும் ரஷ்யா வில் உள்ள ஒரு மைய வங்கியிலிருந்தே நடைபெறுகின்றன. ஒவ்வொரு மாற்ற மையத்திலும் ‘மைனர்ஸ்' என்று சொல்லப்படுகிற பல நிறுவனங்கள் இருக்கும்.
பிட்காயின் எதன் அடிப்படையில் செயல்படுகின்றது?
"HASH Function" என்ற செயல்பாட்டையே பிட்காயின் வர்த்தகம் பயன்படுத்துகிறது. ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் ஒரு ‘ஹேஷ்' ஒரு "பொது சாவி" மற்றும் "ஒரு தனிப்பட்ட சாவி" ஆகியவற்றுடன் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு சாவிகளும் ஒன்றுக்கொன்று எதிரானவை. ஒன்றிலிருந்து ஒன்று கண்டறியாத முடியாதவை. "பொது சாவிகள்" பப்ளிக் டொமைன்களில் திறந்த நிலையில் கிடைக்கின்றன.
யாரிடம் எவ்வளவு பிட்காயின் உள்ளது என்று எப்படி அறிவது?
ஒவ்வொரு பரிமாற்ற விவரமும் "Blockchain" என்ற லெட்ஜர் பதிவேட்டில் பதியப்பட்டு இருக்கும். இதிலிருந்து யார் எந்த பொது சாவியுடன் எத்தனை பிட்காயின் வர்த்தகம் செய்துள்ளனர் என்று அறிய இயலும். ஆனால் இந்த பிட்காயின்கள் யாருடையவை என்பதை யாரும் பார்க்க முடியாத அளவில் பாதுகாப்பு அம்சங்களோடு பராமரிக்கப்படுகிறது.
இந்தியாவில் பிட்காயின் எப்படிப் பிரபலமானது?
இந்தியாவில் பிட்காயின் பணமதிப்பிழப்புக்குப் பிறகு பிரபலமானது.
நவம்பரில் அந்தச் சமயத்தில் 757 டாலர்களாக இருந்தது. பணமதிப்பிழப்பு பிரச்சனை காலகட்டத்தில் 866 டாலருக்கும் 896 டாலருக்கும் இடையில் இருந்தது. 2016 நவம்பர் 8 ல் பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பின் 18 நாட்கள் கழித்து 1,020 டாலர்களாக இருந்தது. அந்த நாளில் அமெரிக்காவில் 77௦ டாலர்களாக இருந்தது.
பிட்காயினின் சந்தை மதிப்பு
2017, மே 27ல் பிட்காயினின் சந்தை மதிப்பு 2,096.68 டாலர்களாக உயர்வு பெற்றது.
எனவே, இது ஒரு தற்காலிக குறியீடுதானா? அரசு இந்தச் சந்தையை கட்டுப்படுத்துவது அவசியந்தானா? இந்த மின்னணு பொருளாதாரம் எதிர்காலத்தில் நன்றாகவே இருக்கக்கூடும். பிட்காயின் பரிமாற்றங்கள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சட்டப்பூர்வ அந்தஸ்தைப் பெற்று விட்ட போதிலும், இதன் மீதான கட்டுப்பாடுகளும் மெல்லக் கூடிக்கொண்டே வருகிறது. இந்த வரிசையில் இதற்கான சட்டம் ஏதும் தற்போது இந்தியாவில் இல்லை.
பிட்காயின்கள் பயன்பட்டதற்கான சாட்சியங்கள்
2015 ம் ஆண்டு பாரிஸ் நகரத்தின் மீதான தீவிரவாத தாக்குதலின் போது பிட்காயின்கள் பயன்பட்டதற்கான சாட்சியங்கள் உள்ளன. ஐரோப்பிய நாடுகள் பிட்காயினை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றன. பாரீசின் அரசுகளுக்கிடையிலான நிதி செயல் பணிக்குழு 2௦15 ல் அளித்த அறிக்கையின் படி தீவிரவாதிகளின் இணையதளங்கள் அனுதாபிகளை பிட்காயின்களாக நன்கொடை அளிக்க ஊக்கப்படுத்துகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை
அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்குழு அதிகாரிகளும் இஸ்லாமிய தீவிரவாதிகள் எப்படி இவ்வளவு பெரிய தொகையை பிட்காயின்கள் மூலமாகச் சேகரிக்கிறார்கள் எனக் குழம்பித்தான் போயுள்ளனர். நியூயார்க் அரசாங்கமும் பிட்காயின் கட்டுப்படுத்தலுக்கான மசோதாவை நிறைவேற்றியுள்ளது. கனடா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் பிட்காயினை பணமோசடி மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான சட்டங்களின் கீழ் கொண்டு வந்துள்ளன.
பணமதிப்பிழப்பு விவகாரம்
இந்தியாவின் பணமதிப்பிழப்பு விவகாரம் தீவிரவாதிகளுக்கு நிதி சென்று சேர்வதைத் தடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட ஒரு சரியான நடவடிக்கையே. இந்தியா இந்த பிட்காயினை ஒழுங்குபடுத்தாவிடில், இந்த பண மோசடி மூலம் தீவிரவாதத்திற்கு பணம் சென்று சேர்வது எளிமையாகிவிடும். அரசாங்கம் பொருளாதார நோக்கிலும், நாட்டின் பாதுகாப்பு நோக்கிலும் பிட்காயின் மீது சரியான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியாக வேண்டும்.
தெறிக்க விடுகிறேன்
தீவிரவாதிகளைத் தெறிக்க விடுகிறேன் என்றும், ஊழல்வாதிகளைத் தெறிக்க விடுகிறேன் என்றும் மாய்மால வார்த்தைகள் பேசி ஏழை மக்களை, அப்பாவி மக்களை, ஆதரவற்ற மூத்த குடிமக்களை தெறிக்க விட்டு வேடிக்கை காட்டியது போல் அல்லாமல் சாமானியர்களின் பாதுகாவலராக அரசு செயல்பட்டு வந்தால் மக்களும் மனம் மாறி வாழ்த்தக் கூடும். அந்த நாளும் வருமா???????? பொறுத்திருந்து பார்ப்போம்.