இந்தியாவில் இருக்கும் ஐடி நிறுவனங்கள், தனது வர்த்தகப் பாதிப்பு மற்றும் வருவாய் இழப்பை எதிர்கொள்ள ஊழியர்களை அதிகளவில் வெளியேற்றிக் கொண்டு இருக்கும் நிலையில் கேப்ஜெமினி தனியாக ஒரு டிராக்கில் சென்று கொண்டு இருக்கிறது.
இதன் படி கேப்ஜெமினி இந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 20,000 ஊழியர்களைப் பணியில் சேர்க்க முடிவு செய்துள்ளது.
அந்த அறிவிப்பை அடுத்து நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களான இன்போசிஸ், டிசிஎஸ், டெக் மஹிந்திரா, விப்ரோ, ஆகியவை என்ன செய்வதென்று புரியாமல் குழப்பத்தில் மூழ்கியுள்ளது.
ஐரோப்பிய நிறுவனம்..
இந்தியாவில் இருக்கும் ஐடி நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்கச் சந்தை அல்லது நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது, ஆனால் ஐகேட் நிறுவனத்தைக் கைப்பற்றி இந்தியாவில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்த கேப்ஜெமினி ஒரு ஐரோப்பிய நிறுவனம் என்பதால், இதன் கண்ணோட்டம் முற்றிலும் மாற்றுப்பட்டு இருக்கிறது.
தனி டிராக்
இன்போசிஸ், டிசிஎஸ், டெக் மஹிந்திரா, விப்ரோ ஆகிய நிறுவனங்கள் அமெரிக்காவில் தனது வர்த்தகம் மற்றும் ஊழியர் எண்ணிக்கை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியாவில் இதன் ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைத்து வருகிறது.
இத்தகைய மோசமான சூழ்நிலையில் இருக்கும் இந்திய ஐடி துறையில் ஐரோப்பிய நிறுவனமான கேப்ஜெமினி இந்த வருடம் மட்டும் சுமார் 20,000 ஊழியர்களைப் புதிதாத பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது.
பயிற்சி
ஐடித்துறையில் ஆட்டோமேஷன் செய்யப்பட்டு வரும் காரணத்தால் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வெளியேற்றி வரும் நிலையில், கேப்ஜெமினி மே மாதம் வரையில் சுமார் 45,000 ஊழியர்களுக்குப் புதிய டெக்னாலஜியில் பயிற்சி அளித்துள்ளது.
கடந்த வருடம்..
பிரான்ஸ் நாட்டைத் தலைமையாகக் கொண்டு இயங்கி வரும் கேப்ஜெமினி கடந்த வருடம் மட்டும் சுமார் 33,000 ஊழியர்களைப் புதிதாகப் பணியில் அமர்த்தியுள்ளது, அதேபோல் 51,000 ஊழியர்களுக்குப் புதிய தொழில்நுட்பத்தில் பயிற்சி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலீடு...
நிறுவனத்தில் ஆட்டோமேஷன் பாதிப்பை குறைக்கும் வகையில் அதேபோல் ஆட்டோமேஷன் மற்றும் தொழில்மயமாக்கல் மூலம் உருவாகியுள்ள புதிய வர்த்தக வாய்ப்புகளைக் கைப்பற்றும் வகையில் ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம். இதற்காகப் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம் எனக் கேப்ஜெமினி நிறுவனத்தின் தொழில்மயமாக்கல் மற்றும் ஆட்டோமேஷன் பிரிவின் தலைவரான கிறிஸ்டோபர் ஸ்டான்கோம்பே தெரிவித்துள்ளார்.
இந்திய வர்த்தகம்
கேப்ஜெமினி நிறுவனத்தின் இந்திய அலுவலகத்தில் மட்டும் சுமார் 1,00,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்புதிதாகப் பணியில் சேர்க்கப்படும் ஊழியர்கள் அனைவரும் இந்திய அலுவவகங்களில் அமர்த்தப்படுவார்கள்.
நாஸ்காம்
இந்திய ஐடி நிறுவனங்களில் இருக்கும் நிலையை உறுதி செய்யும் வகையில், நாஸ்காம் அமைப்பு 2017ஆம் நிதியாண்டில் வேலைவாய்ப்புகள் அளவு வெறும் 5 சதவீதம் மட்டுமே உயரும் எனத் தெரிவித்துள்ளது.
அதேபோல் அடுத்த 3 வருடத்தில் இதன் அளவு 20-25 சதவீதம் வரை குறையும் என்றும் நாஸ்காம் தெரிவித்துள்ளது.
இடைவேளை
தற்போது இருக்கும் சூழ்நிலையில் ஐடி நிறுவனங்களின் வர்த்தக வளர்ச்சிக்கும் வருவாய் அளவிற்கு மத்தியில் இடைவேளை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும்.
இந்த வர்த்தக வளர்ச்சியில் ரோபோடிக்ஸ், மெஷின் லார்னிங், செயற்கை நுண்ணறிவு ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கும்.
பிற நிறுவனங்கள்
டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனங்களும் நடப்பு நிதியாண்டில் கேப்ஜெமினி நிறுவனத்தைப் போலவே 20,000 பேரைப் புதிதாகப் பணியில் சேர்க்க உள்ளதாக அறிவித்தாலும், அதில் பெரும் பகுதி அமெரிக்கச் சந்தையில் இருக்கும்.
ஆனால் கேப்ஜெமினி அறிவித்துள்ள 20,000 ஊழியர்கள் கணக்கு இந்தியாவில் மட்டும்.