இந்திய வரியமைப்பில் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டு 5 நாட்கள் முழுமையாக முடிந்த நிலையில், ஒவ்வொரு துறையிலும் வர்த்தகத்திலும் ஜிஎஸ்டி குறித்த சந்தேகங்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது.
இந்த சந்தேகம் தற்போது சிகரெட் மீதான வரி விதிப்பிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் சந்தேகத்திற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்து புகைப்பிடிப்போர்களை மகிழ்வித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி அமைப்பு
பழைய வரி விதிப்பின் கீழ் சிகரெட் மீது விதிக்கப்பட்டு கூடுதல் வரி விதிப்புகள் ஜிஎஸ்டியில் நீக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் சிகரெட் மீதான வரியில் 7-9 சதவீதம் வரை தற்போது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிரொலிகள்
மத்திய அரசின் இந்த அறிவிப்பை அடுத்து இந்தியாவில் சிகரெட் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில் முன்னணியாக திகழும் ஐடிசி நிறுவனத்தின் பங்குகள் 353.20 என்ற உயரிய விலையை அடைந்தது. இதேபோல் காட்பிரெ பிலிப்ஸ் மற்றும் விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களும் தத்தம் 3.4 சதவீதம், 4.4 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
வரி மாற்றம்..
பழைய வரி விதிப்பின் கீழ், சிக்ரெட் 18 சதவீதம் வரியும், கூடுதல் 5 சதவீத செஸ் வரியும், சிகரெட்-இன் அளவை பொருத்து விதிக்கப்படும் வரி ஆகியவை விதிக்கப்பட்டு வந்தது.
தற்போது ஜிஎஸ்டி கீழ் சிகரெட் 28 சதவீத வரி விதிப்பின் கீழ் வந்துள்ளது. இதன் பின்னும் பழைய நடைமுறையில் இருக்கும் வரிகள் தொடர்ந்து விதிக்கப்படுமா என்ற சந்தேகம் பெரிய அளவில் இருந்தது.
தீர்வு
இந்த குழப்பத்திற்கு மத்திய கலால் வரித்துறை கூறுகையில், கூடுதல் கலால் வரி, செஸ் வரி ஆகியவை ஜிஎஸ்டி கீழ் இருக்காது.
ஆனால் தேசிய பேரழிவு கட்டுப்பாட்டு கட்டணம் தொடரும் என தெளிவுப்படுத்தியுள்ளது.
வரி குறைந்தது
இதன் மூலம் ஜிஎஸ்டி கீழ் சிகரெட் மீதான வரி விதிப்புகள் பழைய முறையை ஒப்பிடுகையில் சுமார் 7-9 சதவீதம் வரை குறைந்துள்ளது.
மொத்த வரி விதிப்பு அதிகரித்தாலும், பழைய முறையிலான கூடுதல் வரிகள் இதில் நீக்கப்பட்டுள்ளது.