ஜிஎஸ்டி வந்த பிறகு உணவகங்களில் விலை உயர்ந்துள்ளது என்று புகார்கள் எழுந்து வரும் நிலையில் உணவைத் தானமாக வழங்கும் அன்னதானத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் மிகப் பெரிய சமையல் அறை என்று அழைக்கப்படும் அம்ரிஸ்டர் தங்கக் கோவில் உள்ள உணவகத்தில் வார நாட்களில் தினம் 50,000 நபர்களுக்கு உணவு அளிக்கப்படுகின்றது, இதுவே வார இறுதி நாட்களில் கணக்கு 100,000 தாண்டும்.
ஜிஎஸ்டி-ன் தாக்கம்
2017 ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததை அடுத்து இங்குச் சமைக்கப்படும் உணவுகளுக்கான செலவுகளும் அதிகரித்துள்ளது. ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் என்றாலும் பரவாயில்லை 10 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவாகின்றது என்பது தான் முக்கியமானதாகும்.
சிறப்பு
இந்த உணவகத்திற்குச் செல்லும் எவருக்கும் இரண்டு மணி நேரப் பராமரிப்பு இடைவெளியினைத் தவிர மற்ற எந்த நேரங்களிலும் உணவு இல்லை என்ற வார்த்தைக்கே இடம் இல்லை.
ஏன் இதனை உலகின் மிகப் பெரிய சமையல் அறை என்று அழைக்கின்றனர்?
இந்தச் சமையல் அறையில் சாரியாக ஒரு நாளைக்கு 7,000 கிலோ கோதுமை மாவு, 1200 கிலோ அரிசி, 1300 கிலோ பருப்பு வகைகள், 500 கிலோ நெய் உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்திக் காய்கறிகளுடன் உணவைத் தயாரித்துப் பரிமாறுகின்றனர்.
ஆண்டுப் பட்ஜெட்
சமையல் அறைக்கு ஆண்டுக்கு 75 கோடி ரூபாய்க்குப் பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகின்றது. நெய் மீது 12 சதவீத வரி, சர்க்கரை மீது 18 சதவீத வரி, பருப்புகள் மீது 5 சதவீத வரி என உயர்த்தப்பட்டுள்ளதால் ஆண்டுக்குப் பட்ஜெட்டில் 10 கோடி ரூபாய் வரை கூடுதல் செலவு ஆவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.