ஜிஎஸ்டி பற்றி சமுக வலைதளங்களில் பல கேளிக்கையான மீம்ஸ், வீடியோ என பல வெளியே வந்துக்கொண்டு இருக்கிறது, இதை நாம் தினந்தோறும் பார்த்து சிரித்துக்கொண்டு வரும் வேளையில், வர்த்தக சந்தையில் சரக்கு மற்றும் சேவை வரியின் தாக்கம் சாமானியர்களை பாடாய்படுத்துகிறது.
பல வியாபாரிகள் வாடிக்கையாளர்களை சகட்டு மேனிக்கு ஏமாற்றி வருகின்றனர், காரணம் கேட்டால் ஜிஎஸ்டி என ஒற்றை வார்த்தையால் மூடி மறைக்கப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையிலாவது ஜிஎஸ்டி குறித்த உண்மைகளை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். அரசும் வியாபாரிகளும் சொல்வது எந்த அளவிற்கு உண்மை என்பதே இப்போது பார்போம்.
ஒரே நாடு ஒரே வரி..
ஜிஎஸ்டி அமலக்கம் செய்யப்பட்ட நாளில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி முதல் அனைத்து தலைவர்களும் ஜிஎஸ்டியை ஒரே நாடு ஒரே வரி என்று கொண்டாடினர்.
ஜிஎஸ்டி மூலம் இந்திய வர்த்தக முறையில் இருந்த பல வரிகள் களையப்பட்டு ஒற்றை வரியாக கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் உண்மை என்ன..?
#உண்மை 1
ஜிஎஸ்டியின் அடிப்படை என்னவோ ஒரே நாடு ஒரே வரி தான், ஆனால் இதில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டு 10 நாட்கள் முழுமையாக முடியும் இன்றளவிலும் இது ஜிஎஸ்டி விரியமைப்பிற்கு வெளியில் தான் உள்ளது.
மேலும் மாநில, நகரங்கள் வாரியாக இதன் விலையும் வேறுப்படுகிறது. மும்பையில் 74.30 ரூபாய் என்றால் டெல்லியில் 63.12 ரூபாய்.
மதுபானம்
பெட்ரோல், டீசல் போலவே மதுபானமும் நாடு முழுவதும் பல்வேறு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுவும் ஜிஎஸ்டிக்கு வெளியில் தான் உள்ளது.
சிறு வணிகம் பாதிக்கும்..
ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் சிறிய அளவில் வர்த்தகம், உற்பத்தி செய்யவோர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள், அவர்களால் கம்பியூட்டர் பில் கொடுக்க முடியாது. மேலும் இணையதள இணைப்பு ஆகியவை ஜிஎஸ்டியின் கீழ் தேவை என சந்தையில் அழுத்தமான கருத்து நிலவுகிறது.
#உண்மை 2
உண்மையில் சிறு வணிகர்களுக்கு ஜிஎஸ்டியால் எவ்விதமான பாதிப்பும் இல்லை, கம்பியூட்டர் பில் இல்லையெனில் எழுத்துபூர்வமான பில்களை அளிக்கலாம். மேலும் வருடத்திற்கு 20 லட்சத்திற்கு அதிகமான விற்றுமுதல் இருந்தால் தான் ஜிஎஸ்டியின் கீழ் வரி செலுத்த வேண்டும்.
மேலும் வரி தாக்கல் செய்யப்படும் போது மட்டும் இணையதள இணைப்பு மட்டுமே தேவை. இதனை சாதாரண பிரொவ்சிங் சென்டரில் கூட செய்யலாம்.
விலைவாசி உயர்வு..
ஜிஎஸ்டி வரியமைப்பில் சாமானியர்கள் அதிகளவில் பயன்படுத்தும் பொருட்களுக்கு அதிகப்படியான 18சதவீதம் 28 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
#உண்மை 3
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பின்பு இதன் வரிகள் முழுமையாக மக்களுக்கு தெரிகிறது, இதற்கு முன்பு அதே பொருட்களுக்கு மத்திய மாநில கலால் வரிகள், கொள்முதல் வரி என பல வரிகள் நம்மை அறியாமலேயே கொடுத்து வந்தோம்.
உதாரணம்
உணவு பொருட்களுக்கே வருவோம், கேரளாவில் சிக்கன் உணவிற்கு இதற்கு முன் 14.5 சதவீதம் வரி இருந்தது, தற்போது ஜிஎஸ்டி கீழ் இதன் வரி 0% ஆக உள்ளது. ஆக இதன் விலை தற்போது குறைய வேண்டும். அப்படி குறையவில்லையெனில் வியாபாரிகள் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்று அர்த்தம்.
கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே லாபம்
வர்த்தக நிறுவனங்கள் மக்களுக்கு கிடைக்க வேண்டிய ஜிஎஸ்டி லாபத்தை கொள்ளை அடிக்கிறது. அதற்கு அரசு துணை போகிறது.
அது ஒரு வகையில் அனைத்து மக்கள் மத்தியில் இருக்கும் ஒரு கேள்விதான். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை.
#உண்மை 4
சில மாநில அரசுகள் பேராசையுடன் நடந்துக்கொள்கிறது, ஆம் நுகர்வோருக்கு கிடைக்கும் பலன்கள், லாபத்தை முறைமுகமாக அவர்களிடம் இருந்து பிடுங்குகிறது.
உதாரணம்
ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஜிஎஸ்டி அமலக்கத்தின் காரணத்திற்காக தயாரிப்புகளின் விலையை 2-3 சதவீதம் வரையிலான விலையை குறைத்தது. ஆனால் மகாராஷ்டிர மாநில அரசு ஆட்டோமொபைல் அறிவிப்பை தொடர்ந்து வாகன பதிவு கட்டணத்தை 2 சதவீதம் அதிகரித்துவிட்டது.
கணக்கு சரியாகிவிட்டது. இது ஒரு உதாரணம் மட்டுமே பல விஷயங்களில் இது மாறுபடலாம்.
ஜிஎஸ்டி தவிர வேறு வரி இல்லை..
ஜிஎஸ்டி வரி அமலாக்கம் செய்யப்பட நிலையில், சரக்கு மற்றும் சேவையின் மீது பிற வரிகள் ஏதுமில்லை என கூறப்படும் நிலையில் இது குறித்து தமிழ் குட்ரிட்டன்ஸ் சில ஆய்வுகள் செய்துள்ளது.
#உண்மை 5
ஜிஎஸ்டி என்பது மத்திய மற்றும் மாநில வரி விதிப்புகளை மட்டுமே இணைத்து ஒற்றை வரியாக வைத்துள்ளது. ஆனால் உள்ளூர் விதிப்புகள் அனைத்து தற்போது நடைமுறையில் உள்ளது. இது ஜிஎஸ்டி வரியில் மிகப்பெரிய ஓட்டை.
உதாரணம்
தமிழ்நாடு அரசு, திரைப்பட டிக்கெட்கள் மீது 30 சதவீதம் உள்ளூர் விதிப்புகள் விதிக்க அனுமதித்துள்ளது. இந்நிலையில், ஜிஎஸ்டி கீழ் 100 ரூபாய்க்கு குறைவாக இருக்கும் சினிமா டிக்கெட்க்கு 18 சதவீதமும், 100 ரூபாய்க்கு அதிகமாக இருக்கும் டிக்கெட்க்கு 28 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது.
உள்ளூர் விதிப்புகள் மூலம் தற்போது இதன் 48 சதவீதம் 58 சதவீதம் என்ற அளவில் வரி விதிக்கப்படுகிறது.
பொருளாதாரம் உயரும்...
ஜிஎஸ்டி அமலாக்கம் மூலம் பொருளாதாரம் உயரும் என்று பலரும் கூறியதை நீங்கள் கேட்டு இருப்பீர்கள். இது எந்த அளவிற்கு உண்மை. வாங்க பார்போம்.
#உண்மை 6
உண்மையான பொருளாதாரம் வளர்ச்சி ஒரு நாட்டின் வகைப்படுத்தப்பட்ட மற்றும் வகைப்படுத்தப்படாத துறைகளில் இருந்து கிடைக்கும் ஒன்று. ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் பல வகைப்படுத்தப்படாத துறை வர்த்தகம் வகைப்படுத்தப்பட்ட துறைக்கு மாறும்.
இதனால் தற்போது நாட்டில் நடக்கும் வர்த்தகம் அதிகளவில் கணக்கில் வரும் இதனால் நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் உயரும் என்பது எல்லாம் வெறும் பேச்சு மட்டுமே.
கார்டு பேமெண்ட்க்கு இரட்டை வரி விதிப்பு..
கிரெடிட் கார்டு மூலம் நீங்கள் பணத்தை செலுத்தினால், ஜிஎஸ்டி வரி விதிப்பில் இரட்டை வரி விதிப்பு செய்யப்படும் என கருத்து சந்தையில் நிலவுகிறது.
இதைப்பற்றிய உண்மையும் தெரிந்துக்கொள்வோம்.
#உண்மை 7
இத்தகைய இரட்டை வரி விதிப்புகள் எதுவுமில்லை.
கிரெடிட் கார்டு மூலம் நீங்கள் பணத்தை செலுத்தும்போது, நிறுவனங்கள் அதற்கு கன்வேயன்ஸ் சார்ஜ் என்ற ஒன்றை விதிக்கப்படுகிறது. தற்போது இதற்கு ஜிஎஸ்டி உண்டு என்பதே இரட்டை வரி விதிப்பாக சந்தையில் நிலவுகிறது.
உதாரணம்
இப்போது நீங்கள் 10,000 ரூபாய்க்கு கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் அதற்கு 50 ரூபாய் கன்வேயன்ஸ் சார்ஜ். ஜிஎஸ்டி கீழ் இதற்கு 18 சதவீதம் வரி, இதற்கு முன் 15 சதவீதம் வரி, ஆக 3 சதவீதம் என்பதை பார்க்கும் போது 50 ரூபாய்க்கு 1.5 ரூபாய்.
இன்னும் பல..
இதுபோன்று ஜிஎஸ்டி குறித்து மக்கள் மத்தியிலும், வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் என பல தரப்பினர் மத்தியில் சந்தேகங்கள் அதிகளவில் உள்ளது. அதனை ஒவ்வொன்றாக தமிழ் குட்ரிட்டன்ஸ் தனது அடுத்தடுத்த கட்டுரையில் தீர்க்கும்.