பொதுத் துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள் என அனைத்து வங்கிகளிலும் விரைவில் ஆதார் கார்டுகக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் அதில் உள்ள விவரங்களைத் திருத்தலாம்.
மத்திய அரசு அனைத்து வங்கி கணக்குகளிலும் ஆதார் எண்ணை டிசம்பர் 31-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் கணக்கை பயன்படுத்த முடியாது என்று அறிவித்துள்ளது.
ஆதார் எண் வங்கி கணக்கு இணைப்பு
இதனால் அனைத்து வங்கிகளுக்கு ஜூன் 1 முதல் வாடிக்கையாளர்களிடம் ஆதார் விவரங்களைப் பெற்று இணைப்பை மேற்கொண்டு வருகின்றனர். பல வங்கிகள் இணையதளச் சேவையின் வாயிலாகவும் ஆதார், வங்கி கணக்கு இணைக்கும் சேவையினை வழங்கி வருகின்றன.
வங்கிகளிலும் ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்?
ஆதார் கார்டு இல்லாதவர்கள் வங்கி கணக்கை தொடர முடியாது என்ற காரணத்தினால் விரைவில் அனைத்து வங்கி கிளைகளிலும் ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கும் சேவை மற்றும் திருத்தம் செய்வதற்காகச் சேவையினை வழங்க இருப்பதாக இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஆதார் மையங்களைத் தேடி மக்கள் செல்வதும் குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.
பொதுத் துறை வங்கிகள்/ தனியார் துறை வங்கிகள்
தற்போது வரை பொதுத் துறை வங்கி நிறுவனங்கள் மட்டும் தான் ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கும் சேவையினை மக்களுக்கு அளிக்க முடியும் என்று சட்டம் இருந்தது. இப்போது அதில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அனைத்து வங்கிகளும் பெற்று வாடிக்கையாளர்களுக்குத் தங்கு தடையின்றிச் சேவையினை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை ஆதார் கார்டுகளை எவ்வளவு நபர்கள் பெற்றுள்ளனர்?
இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின் படி இந்தியாவில் 90 சதவீதத்தினர் ஆதார் கார்டுகளைப் பெற்றுள்ளதாகவும், அதனை முழுமைப் படுத்தும் நோக்கத்துடன் வங்கிகளில் சேவையினை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
6 முதல் 5 வங்கி கிளைகள்
அனைத்து வங்கி கிளைகளிலும் ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்தித் தர அதிகச் செலவு ஆகும் என்பதால் 6 முதல் 5 வங்கி கிளைகளில் இந்தச் சேவை விரைவில் வழங்கப்படும் என்றும் ஆதார் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.