ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் ஜூனியர் பைலட்களிடம் 7 வருடம் பணிபுரிவேன் என்றும் இல்லை என்றால் 1 கோடி ரூபாய் செலுத்திவிட்டு தான் வெளியேறுவேன் என்று பாண்டுகளில் கையெழுத்துப் போட வேண்டும் என்று செய்திகள் வெளியாகி இருப்பது ஊழியர்கள் மத்தியில் பெறும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது குறித்துத் தமிழ் குடிரிட்டர்ன்ஸ் தரப்பிற்குத் தகவல் அளித்த ஊழியர் சங்கம் ஜூனியர் விமான ஓட்டிகள் யாரெல்லாம் ஒரே மாதத்தில் தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை வேண்டும் என்று கேட்கின்றார்களோ அவர்களுக்கு 30 சதவீதம் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் கூறியிருப்பதாகத் தெரிவித்தது.
தேசிய விமான ஓட்டுநர்கள் கில்ட்
தேசிய விமான ஓட்டுனர்கள் கில்ட் எனப்படும் ஊழியர் சங்கம் இந்தப் பாண்டுகள் ஜூனியர் விமானிகளுக்கு மட்டும் போடப்படுவதாகத் தெரிவித்துள்ளது. 1 கோடி ரூபாய் ஷ்யூரிட்டி பாண்டு பத்திரம் பெற்றுக்கொண்டு வேலை அளிப்பது சம்பளத்தில் ஒருதலைப்பட்சமாகப் பிடித்தம் செய்யப்படுவது ஊழியர்களுக்குச் சிக்கல் ஏற்படுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய பாண்டுகள் ஒன்றும் இல்லை
ஏற்கனவே உள்ள பாண்டில் இது சேர்க்கப்பட்டுள்ளது என்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளார் கூறுகிறார். நாம் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த அவர் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பயிற்சி ஓட்டுனர்களிடம் இந்த 1 கோடி ரூபாய் பாண்டு பெறப்படுவதாகத் தெரிவித்தார்.
5 முதல் 7 வருடங்கள் வரை பணிப்புரிய வேண்டும்
ஜூனியர் விமான ஓட்டிகள் 5 முதல் 7 வருடங்கள் வரை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் வேலை செய்ய வேண்டும் என்பதற்காக இந்தப் பாண்டுகள் பெறப்படுவதாகவும், அவ்வாறு வேலை செய்யத் தவறும் போது இந்தப் பாண்டுகளின் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நிர்வாகத்தைச் சந்தித்துக் கோரிக்கை வைக்க முடிவு
தேசிய விமான ஓட்டுனர்கள் கில்ட் ஊழியர்கள் சங்கம் வரும் வாரத்தில் விமான நிறுவனத்தின் நிர்வாகத்தைச் சந்தித்துப் பேச உள்ளதாகவும் அதில் ஒருதலைப்பட்சமாகச் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவது மற்றும் பாண்டுகள் பற்றி நல்ல முடிவுகள் எடுக்க வேண்டும் கோரிக்கை வைக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
பயிற்சி ஓட்டுனர்கள்
ஜெட் ஏர்வே நிறுவனத்தில் பயிற்சி ஓட்டுனர்கள் மற்றும் ஜூனியர் விமான ஓட்டிகளாக மொத்தம் 200 நபர்கள் உள்ளனர்.
கடிதம்
சென்ற வாரம் ஜூனியர் விமானப் பைலட்களுக்கு ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் அளித்த கடிதத்தில் 2017 ஆகஸ்ட் 1 முதல் ஒரு மாதத்தில் 10 நாட்கள் தொடர்ந்து விடுமுறை எடுக்கும் போது 30 சதவீதம் வரை சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று கூறியுள்ளது.
மாற்றம்
ஜூலை 20-ம் தேதி வளைகுடா நாடுகள் உட்படத் தனது நிறுவனத்தின் அனைத்து விமானச் சந்தையிலும் வளர்ச்சிக்காகச் சில மாற்றத்தைச் செய்ய விரும்புவதாகவும் அதேபோல உள்நாட்டுச் செயல்திறன்களை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளும் நெட்வொர்க், விமானிகள் மற்றும் குழுவினரின் பயன்பாட்டின் மதிப்பீட்டிற்கு இணங்க முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
செயல்திறன்மிக்க நடவடிக்கை
இதன் விளைவாக, ஒரு செயல்திறன்மிக்க நடவடிக்கையாக, நிறுவனம் தனது குழு பணி முறைகள் இடைக்கால ஒருங்கிணைப்புகளைச் செய்துள்ளது, இது எதிர்காலத்தில் மதிப்பாய்வு செய்யப்படும், இது நெட்வொர்க் வளர்ச்சிக்கு இணங்கச் செய்யப்படும் என்று செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்தார்.