டெல்லி: நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, சில மாதங்களுக்கு முன்பு சேமிப்புக் கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் அதாவது குறைந்தபட்ச இருப்பு வைக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்து இதனை நடைமுறைப்படுத்தியது.
இதன் மூலம் 2017ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் எஸ்பிஐ வங்கி சுமார் 235.06 கோடி ரூபாயை சம்பாதித்துள்ளது.
பாதிக்கப்பட்டோர்
தனியார் வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் பிரச்சனைகள் இருக்கும் காரணத்தால் தான சேவை மட்டமாக இருந்தாலும் மக்கள் அதிகளவில் பொதுத்துறை வங்கியைப் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் எஸ்பிஐ இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு மின்மம் பேலன்ஸ் வைத்திருக்காத சுமார் 388.74 கணக்குகள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆர்டிஐ
மினிமம் பேலன்ஸ் அபராதம் மூலம் எஸ்பிஐ எவ்வளவு வருமானம் பெற்றது என்று தகவல் அறியும் சட்டம் மூலம் சந்திரசேகர் கவுட் கேள்வி கேட்டார். இதற்குப் பதில் அளித்த எஸ்பிஐ, "ஜூன் 30 உடன் முடிந்த 2017ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 388.74 லட்சம் கணக்குகள் மீது அபராதம் விதிக்கப்பட்டதன் மூலம் 235.06 கோடி ரூபாய் வருமானம் பெற்றுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளது.
முழுமையான விபரம்
மொத்த வருமான அளவை மட்டும் அறிவித்துள்ள எஸ்பிஐ, எந்தப் பிரிவினரின் மூலம் எவ்வளவு வருமானம் கிடைத்துள்ளது என்பதற்கான முழுமையான விபரத்தை அளிக்கவில்லை.
மக்கள்
மினிமம் பேலன்ஸ் அபராதத்தை எஸ்பிஐ வங்கி நடைமுறைப்படுத்தும் போது மக்கள் மத்தியில் அதிகளவிலான எதிர்ப்புகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
மெட்ரோ நகரங்களில் உள்ள வங்கி கணக்குகள்
எஸ்பிஐ வங்கியில் மெட்ரோ நகரங்களில் உள்ள வங்கி கணக்குகளில் 5,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்திருக்க வேண்டும். 50 சதவீதம் வரை குறைவாக குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 50 ரூபாயும், 50 முதல் 75 சதவீதத்திற்கும் குறைவாக குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 75 ரூபாயும், 75 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்புத் தொகை இருந்தால் 100 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும்.
புறநகரப் பகுதிகளில் உள்ள வங்கி கணக்குகள்
புறநகரப் பகுதிகள் எஸ்பிஐ வங்கி கணக்குகளில் 3,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்திருக்க வேண்டும். 50 சதவீதம் வரை குறைவாக குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 40 ரூபாயும், 50 முதல் 75 சதவீதத்திற்கும் குறைவாக குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 60 ரூபாயும், 75 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்புத் தொகை இருந்தால் 80 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும்.
நகர பகுதிகளில் உள்ள வங்கி கணக்குகள்
நகரப் பகுதிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் 2,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்திருக்க வேண்டும். 50 சதவீதம் வரை குறைவாக குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 25 ரூபாயும், 50 முதல் 75 சதவீதத்திற்கும் குறைவாக குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 50 ரூபாயும், 75 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்புத் தொகை இருந்தால் 75 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும்.
கிராமப் பகுதிகளில் உள்ள வங்கி கணக்குகள்
கிராமப் பகுதிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் 1,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்திருக்க வேண்டும். 50 சதவீதம் வரை குறைவாக குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 20 ரூபாயும், 50 முதல் 75 சதவீதத்திற்கும் குறைவாக குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 30 ரூபாயும், 75 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்புத் தொகை இருந்தால் 50 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும்.
ஏப்ரல்
இப்புதிய அபராத முறை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.