டெல்லி: விவசாயத்தில் இருந்து வந்த வருமானம் மற்றும் கணக்கில் காட்டப்பட்ட வருமானத்தில் தங்கம் வாங்குவதென்றால் அதற்கு வரி செலுத்த தேவை இல்லை என்று வியாழக்கிழமை மத்திய அரசு அறிவித்துள்ளது.
லோக் சபாவில் இந்த வாரம் வரி சட்டத்தின் மீதான இரண்டாவது திருத்த மசோதாவில் கணக்கில் காட்டப்படாத வருமானத்திற்கு 85 சதவீதம்வரை அபராதம் விதிக்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதிய சட்ட திருத்த மசோதா
புதிய சட்ட திருத்த மசோதாவின் படி தங்கமும் நேரடி வருமான வரி விதிப்பு ஆணையத்தின் கீழ் வரும் வதந்தியை மறுத்த மத்திய அரசு தங்கம் மீதான பழைய வரி விதிப்பு கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று கூறியுள்ளது.
வரி செலுத்தத் தேவையில்லை
கணக்கில் காட்டப்பட்ட வருமானம் மற்றும் விவசாயம் மூலம் பெற்ற வருமானம் அல்லது சரியான சேமிப்பில் வைத்திருந்த பணம், சரியான கணக்கு உள்ள வருமானத்தின் மூலம் தங்கம் வாங்கினால் வரி செலுத்தத் தேவையில்லை என்று நேரடி மத்திய வரி விதிப்பு ஆணையம் கூறியுள்ளது.
எவ்வளவு தங்கம் வைத்துக்கொள்ளலாம்
வருமான வரித் துறை இது குறித்து எடுத்த நடவடிக்கையின் பேரில் திருமணம் ஆகிய பெண்கள் 500 கிராம் வரை தங்கம் வைத்துக்கொள்ளலாம், திருமணம் ஆகாத பெண்கள் 250 கிராம் வரையும், ஆண்கள் 100 கிராம் வரை தங்கமும் வைத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
பிரிவு எண் 115BBE
ராஜ்ய சபாவில் இன்னும் நிறைவேற்றப்படாத இந்தச் சட்டத்தில் புதிதாக 115BBE என்ற பிரிவு சேர்க்கப்பட உள்ளது. அதன் மூலம் கருப்பு பணம் வைத்துள்ளவர்களுக்கு 60 சதவீதம் வரை வரியும், 25 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் விதிக்கப்படும்.
மேலும் இன்னொரு பிரிவின் கீழ்க் கணக்கில் காட்டப்படாத வருமானம் மற்றும் கருப்பு பணம் வைத்துள்ளவர்களுக்கு 10 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும்.
அபராதம் எப்போது
ஒருவர் வைத்திருக்கும் வருமானத்திற்கோ, சொத்திற்கோ சரியான விளக்கம் இல்லை என்றால் பிரிவு எண் 115BBE-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வருமான வரி ஆணையம் கூறியுள்ளது.